Showing posts with label குயில்தாசன். Show all posts
Showing posts with label குயில்தாசன். Show all posts

Aug 29, 2011

பெற்ற மனம்



என்மகனைக் கண்டீரோ?

அய்யா,
என் மகனைக் கண்டீரோ?
அம்மா,
என் மகனைக் கண்டீரோ?
பத்தொன்பது அகவையில்
காணாமற் போனவன்
இருபது ஆண்டுகளாய்க் காணவில்லை!
தேடிச் சோர்ந்துவிட்டேன்;
முதுமையால் இயலவில்லை!
நீங்கள் உதவிடுவீர்!

கண்கள் பஞ்சடைந்து,
கால்கள் தடுமாறுதையா!
மனிதர்களேஉதவிடுவீர்!
மண்டியிட்டு வேண்டுகிறேன்!
உங்கள் வீட்டுப் பிள்ளைகளில்
ஒருவனாய் ஆடுகிறானோ?

கொண்டாடும் போதிலே
தலைவாழை இலையிலே
உங்கள் வீட்டுப் பிள்ளைக்கு
இனிப்புகள் வைக்கும் போது
என்மகனையும் நினையுங்கள்!
தேடிக் கண்டால் சொல்லுங்கள்!

இனப்பகைவரும்
இரண்டகத்தே செய்பவரும்
என்மகனை இருட்டில் வைத்தாரோ?
எப்போதும் சிரித்திருப்பான்
துன்பத்திலும் பொறுத்திருப்பான்!

பிறர் துயர்க்கு அழுதிடுவான்
முடிந்தவரை உதவிடுவான்!
நண்பர்களைப் பிரிய மாட்டான்;
பிரிந்திட்டால்தமிழைவிட்ட
இசைபோலக் கலங்கிடுவான்!

ஆண்ட பரம்பரையின்
அடலேற்றின் தோற்றம்!
காலைக் கதிரவனின்
செவ்வரி விழிகள்
சொல்லும் கொள்கைகள்!
திருக்குறள் தந்த
நல்லற உரைகள்!
தொலைநோக்குக் கணக்கில்
பெரியாரின் தீர்ப்பு!
இவை அவனின் அடையாளங்கள்
அவன் பெயர் பேரறிவாளன்.

மானுட இனத்தாரே!
காலம் எம்மைத் தேய்ப்பதால்
கரைந்துவரும்
எம் உயிரைக் காப்பாற்ற
மீட்டுத்தர இறைஞ்சுகிறேன்.

குழந்தையாய்ப் பெற்று
இளையனாய்ப் பிரிந்தானைக்
கிழவனாகப் பெற்றாலும் போதும்,
மீட்டுக்கொடுங்கள்,
கொடிய காலனிடமிருந்து!
-குயில்தாசன்
(பேரறிவாளனின் தந்தை)
  
*****
மேற்கண்ட கவிதையை,எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிய மதிப்பிற்குரிய(கீழ்கண்ட) நண்பர்களுக்கு நன்றி.

          

முனைவர் பா.இறையரசன்

Dr.B.ERAIYARASAN,M.A.,M.Phil.,Ph.D 
செயலர்,எழுத்தேணி கல்வி தொண்டு அறக்கட்டளை
(சிங்கபுரம்,தமிழகம்)
செயலர்,தமிழ் எழுச்சிப் பேரவை, சென்னை
 9840416727