May 30, 2012

ஆலிங்கனா-02



முதலில் இதை படியுங்கள் ஆலிங்கனா-01

க்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் சுட்டெரிக்கிறது. வீட்டுக்குள் அடைபட்டிருக்க முடியவில்லை. ஊரை ஒட்டியிருக்கும் ஏரியின் பக்கம் சென்று குளிர்க்காற்றை தழுவி வரலாம் என கிளம்பி விட்டேன். ஒருமுறை நாம் அங்கே சென்றிருந்தபோது கடல்போல் காட்சி தந்து நம்மை மிரட்டிய நீர் நிரம்பிய ஏரி இல்லை இது ஆலிங்கனா. ஏரியின் அடி மடியில் மட்டும் நீர் ஒட்டியிருக்கிறது நீ இல்லாத நான் போல!

அந்த கொஞ்ச நீரையும் வெயில் குடித்துவிடக்கூடாதென மரகதப்போர்வை போர்த்தியிருக்கிறது பாசி (அலைதாவரம்). நீரின் போர்வையை உதறி போர்த்தத் தோன்றியது எனக்கு. சற்றே பெரிய கல் ஒன்றை தூக்கி நீரில் வீசினேன். கல் விழுந்த இடத்தில் துள்ளி தெரித்த நீர், ஆழ் தூக்கத்திலிருந்து பதறியெழும் பச்சிளங்குழந்தையாய் தெரிந்தது. அவ்விடத்தில் பாசி சற்றே விலகி பின் மெதுவாய் போர்த்தியது நீர் பரப்பை. அதை கண்டதும் நொடியும் தாமதிக்காமல் உன்னைத்தேடி ஓடியது மனம் ஆலிங்கனா.

முன்பொருமுறை இங்கே நாம் வந்திருந்தோமெனச் சொன்னேனே, அன்று நீ சரிகைநெய்த அரக்குநிற பார்டர் வைத்த பச்சைநிற பாவாடையும், அதே நிறத்தில் ரவிக்கையும், மாம்பழ மஞ்சள் நிறத்தில் தாவணியும் உடுத்தி வந்தாய். அநேக கோயில்களில் அம்மன் சிலைகளுக்கு இந்த நிற உடைகள் தான் பிரசித்தம். அன்றெனக்கு அலங்காரமற்ற அம்மன் போல் தெரிந்தாய் நீ. இருவரும் எதிரும் புதிருமாய் கால்கள் நீட்டி அமர்ந்திருந்தோம். நீரலையைத் தழுவி வந்த காற்று எதிர்பாராத நொடியொன்றில் உன் பாவாடையை கெண்டைக்கால் தெரிய உயர்த்திவிட உயிர் போனதைப் போல் பதறிய நீ, பளபளக்கும் உன் கால்களை கள்ளத்தனமாய் திண்ணும் என் கண்களைக் கண்டதும் பசியாறி போகட்டுமென்றோ என்னவோ மெதுமெதுவாய் பாதம் வரையில் இழுத்து மூடியது நினைவில் ஊர்கிறது.

என்னை என்னென்னெ செய்ய தீர்மானித்திருக்கிறதோ உன்னை அபகரித்துக்கொண்ட இந்த இயற்கை! உன்னை ஏன் இந்த அளவிற்கு காட்சிபடுத்துகிறது என் மனமும், கண்ணும்? என் கண்களை குருடாக்கிக் கொண்டு பைத்தியாமாகி யாரும் அறியாத தொலைதூரத்திற்குப் போய்விட வேண்டும் ஆலிங்கனா. கண் போனால் என்ன? மனக்கண்ணில் நீ இருக்கிறாய் அது போதாதா எனக்கு? கண் தெரியாத நான் உன் கரத்தினைப் பற்றிக்கொண்டு என் ஜீவன் சொட்டுச்சொட்டாய் வற்றி முற்றுமுழுதாய் அற்று போகும் வரை உன் பின்னாலேயே நடந்து அலையவேண்டும்.

உன்னைச்சேர முடியாது போன என் ஆற்றாமை உக்கிரமடைந்து இப்போது உன்னைத் திட்டச்சொல்லி தீச்சொற்களை உதடு நோக்கி உந்தித் தள்ளுகிறது அடிவயிறு. உதடுவிட்டு வெளியேற முடியாமல் நெஞ்சுக்கூட்டில் சுற்றிச் சுழல்கிறது கெட்டவார்த்தைகள். உனக்கு கேட்கும்படி ஒரேயொரு முறை உரக்க திட்டிவிடுகிறேன் உன் செவி கொடு ஆலிங்கனா.

“ என்னை விட்டு எங்கேடி போய் தொலைந்தாய் வேசிமகளே?”.

ஹ்ம்ம்! மனம் லேசானது போல் உணர்கிறேன் ஆலிங்கனா. நீ நல்லவள். உன்னை திட்டியிருக்கக் கூடாது. நான் முரடன். முட்டாள். இத்தனைக் கேவலாமான திட்டினை வாங்கிக்கொண்டும் ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்து என்னை நோக்கி கரம் நீட்டும் பேரன்பு உன்னைத்தவிர யாரால் புகட்ட முடியும்? அனல் பட்ட வெண்ணை போல என் நெஞ்சம் உன் பாதம் நோக்கி நெகிழ்ந்து வழிகிறது. வேசிமகளே என்ற சொல் உன்னை வேதனை படுத்தவில்லையா ஆலிங்கனா? நீ என் போற்றுதலுக்குரியவள். கொஞ்சம் பொரு. உன்னை அர்ச்சிக்க ஏதேனும் பூக்கள் பறித்து வருகிறேன்.

ஐயோ...இந்த கடவுள் துரோகி ஆலிங்கனா. உன்னை பூசிக்க உகந்த மலர் ஒன்றுமே இவ்வுலகத்தில் படைக்காமல் விட்டிருக்கிறான் பாவி. கடவுளின் முகத்தில் காரி உமிழத்தோன்றுகிறது. நீயே சொல், என் கோபம் நியாயமானது தானே? நான் சூடவும் நீயில்லை.நீ சூடவும் ஒரு பூவில்லை. உன் பூசைக்கும் இங்கே பூக்களில்லை எனும்போது இப்பூமியை படைத்தவன் மேல் கோபம் கொள்ளாது வேறு யாரை சாடட்டும் நான்?

#



May 24, 2012

தோற்றவனுக்காக



தேர்வில் தோல்விக்கு
உயிர் துறக்க துணியும் மூடா
என்னிடம் உன்
செவியைக் கொஞ்சம் தாடா.

உறைக்குள் உறங்கும் உடைவாளுக்கு
உதிரச்சுவை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
மதியென்னும் உடைவாளை விதி என்னும்
உறையிட்டே வைத்திருக்கிறாய் நீ.

உருவியெடு உடைவாளை
வெட்டி வீழ்த்து விதிகளை
வெற்றி உன்னை சுற்றிச்சுற்றி
வட்டமிடும் பார்.

உலகத்துக்கானவன் அல்ல நீ
உனக்கானது இவ்வுலகு என்பதை உணர்
வெற்றிச்சிகரத்தைத் தொடாமல்
நெற்றிக்கண்ணை உறங்கவிடுவதில்லை என
உறுதி கொள்
உச்சிதனை முகரும் உறவுகள் பார்.

புரவி ஏறி புழுதி பறக்க விரைந்து
போரிட்டு உலகை வெல்வது கடினம்
காலம் மாறிவிட்டதை கவனி
விரல் அசைவில் நீ வெல்ல முடியும் உலகை
அவ்வித்தை கற்கச் செல்ல வேண்டிய இடம் கல்விச்சாலை

இன்று தோற்றால் தான் என்ன
மீண்டும் பயிலச் செல்
நாளை கனவுகளை வெல்.




May 7, 2012

பரு காட்டி விரல்


இளம் இருளில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அரும்பும்
விண்மீன் போல
அவளின்
இளங்கறுப்பு கன்னத்தில்
ஒன்றிரண்டு
பருவ பருக்கள்.

அதை
அடிக்கடி தொட்டுத் தடவும்
அவளின்
ஆள்காட்டி விரல்
எனக்கு மட்டும்
பரு காட்டி விரலாக
தெரிவதேன்?

#



May 2, 2012

தாய்ப்பசு


கண் தானம்
சிறந்தது தான்.
என்றாலும்

என்
கண்களை தானம்
வழங்கும் அனுமதியை
நீங்கள்
அவளிடம் தான் கேட்க வேண்டும்.

*

தாய்ப்பசு
அவள்.

இளங்கன்று
நான்.

விளையாடச் செல்லும்
வேளைகளில்
தடுமாறிடுவேனோ என
எப்போதும் அச்சத்துடனே இருக்கிறாள்.

எங்கு சென்றாலும்
அவள் மடி தேடி வருவேன் என்பதை மறந்து.

**