Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Mar 19, 2018

ஆலிங்கனா-09


ஆலிங்கனா-09
*****************
ரியின் வலக்கரை. வெள்ளாடுகள் வளர்ப்பவர்கள் ஆடுகளுக்குத் தழை வெட்டிவெட்டியே மொட்டையாகி நிற்கும் இரட்டைக்கிளை  ஆலமரத்தடியில் பிள்ளையார் நம் முப்பாட்டன்மார் காலத்திருந்தே நிலையாக அமர்ந்திருக்கிறார். அதனருகில் முண்டும் முடிச்சுமாக அடிபருத்து வளர்ந்த தேவஅரளி மரம்.
அதன் எதிரில் இருக்கும் புங்கமரத்தடியில் அமர்ந்தபடி ’எங்களையும் காப்பாத்து புள்ளையாரப்பா’ என வேண்டிக்கொண்டிருக்கையில் பழுத்த இலைக்காம்பு ஒன்று உச்சந்தலையில் விழுந்தது. எடுத்து உள்ளங்கையில் வைத்துப் பார்த்தேன். உன் இடக்கண் புருவம். உன் இன்னொரு புருவமும் அம்மரத்தடியில் கிடைக்குமென நம்பி சுற்றிலும் பார்த்தேன். தெரிந்தது. எடுக்கச்செல்கையில் தேவஅரளிப்பூ ஒன்று காற்றில் புரண்டு வந்தது. எடுத்துக்கொண்டு வந்து முன்பு அமர்ந்திருந்த இடத்தில் வட்டமாக மண்பரப்பைச் சுத்தம் செய்து விட்டு புருவங்களை வைத்தேன். உதிர்ந்திருந்த புங்கங்காய்களை எடுத்து கண்களாக்கினேன். தேவஅரளியை வைத்து உதடுகளாக்கினேன். கீழுதட்டைக் கிள்ள விழைகையில் ’என்னடா?’ என மிரட்டும் தொனியில்  வினவுவதைப்போல் இரண்டு புருவங்களையும் ஏற்றி இறக்கினாய். உன் புருவங்களின் அசைவுக்கேற்ப பூமிபரப்பே உயர்ந்து தாழ்ந்ததைக் கண்டு திகைத்தே போனேன்.

பூமிக்குள் படுத்திருந்தவளைப்போல தரையைப்பெயர்த்து எழ முயல்கிறாய். முடியாமல் போகவே எழுப்பிவிடச்சொல்லி கையை நீட்டுகிறாய். கையைப்பிடித்து இழுக்கிறேன். ஈரமண்ணிலிருந்து பிடுங்குகையில் நீண்டு வரும் மரவள்ளிக் கிழங்கைப்போல் வருகிறாய். தேகமெங்கும் மண். உன்னை நீயே பார்த்துவிட்டு ’ஒரே மண்ணாயிருக்கேன்ல, ஏரியில் குளிச்சிட்டு வரட்டுமா?’ எனக் கேட்கிறாய். ‘சரி’ என்றேன். கால்களில் அணிந்திருந்த கொலுசுகளைக் கழற்றிக்கொடுத்து ‘பத்திரமா வெச்சிக்க. தொலைஞ்சிடுச்சின்னா என் அம்மா அடிப்பா’, எனச்சொல்லி கொடுத்துவிட்டு துணியுடன் நீரில் இறங்குகிறாய்.

நீரில் பாதம், கணுக்கால், கெண்டைக்கால், முழங்கால், தொடை, இடையென உன்னுடலை விழுங்கும் நீர் உயர உயர பாவாடையும் வட்டமாக உயர்ந்து நீரின் மேற்பரப்பில் மிதக்கிறது. உடலை நீர் தீண்டும் சுகத்தில் உன் பிடரியின் மயிர்கள் சிலிர்க்கிறது. இப்பொழுது ஏரியைப் பார்க்கிறேன். நிறைந்திருக்கும் நீர் முழுதும் உன் பாவாடையாகிப் பரவுகிறது.

திடீரென நீர்க்கோழியைப்போல் மூழ்கினாய். அலையும் கூந்தலை இழுத்துக்கொண்டு நீரும் சுழிந்து உன்னுடன் நீருக்குள் மூழ்கியது.  சிறிது தூரத்தைக் கடந்து நீர் மலர அதிலிருந்து நீயும் மலர்கிறாய். ஏரியில் சூரியகாந்தியின் நீராடல். சூரியகாந்தியின் தேகத்தில் கிளைத்திருக்கும் மலரா வரம்பெற்ற கமலங்கள் இரண்டு. வெயில் முகத்தில்பட்டு வழிந்து உடலை விட்டிறங்க மனமினல்லை என்றாலும் வேறுவழியின்றி வழிந்து நீரில் விழுகிறது. தென்கரையிலிருக்கும் பனைமரத்தில் கூடுகட்டி முட்டையிட்டு அடைகாக்கும் காகம் ஒன்று கண்களைச் சாய்த்துச்சாய்த்து உன்னைப் பார்க்கிறது. நீயெழுப்பிய அலைகள் தவழ்ந்து வந்து கரையைத் தொட்டுயர நீரருகில் ஓய்ந்திருந்த உடும்புகள் இரண்டும் அருகிருந்த உன்னிச்செடிப் புதருக்கு இடம்பெயர்கின்றன.

நூறாண்டுகளாக பிரிந்திருந்த மீன் ஒன்று மீண்டும் நீருடன் கலந்ததைப்போல சுற்றிலும் நடக்கும் எதையும் கண்டுகொள்ளாமல் நீராடி களிக்கிறாய் நீ. காதுகளைப் பிடித்து முயலைத் தூக்குவதைப்போல நீ தந்துபோன கால்கொலுசுகளை என் முகத்திற்கு நேராக உயர்த்திப் பிடித்து முத்தமிட்ட நொடியில் உன்னுடல் சிலிர்க்க ஏரியின் நடுவிலிருந்து என்னைப் பார்க்கிறாய். நெடுநேரமாக நீரில் ஊறியதால் சிவந்திருக்கும் கண்களால் சிரித்துவிட்டு, கரையேறும் உத்தேசம் இல்லாதவளாக நீரில் கரைந்துகொண்டிருக்கிறாய். பொழுதுபோக்கத் தெரியாமல் நான் தடுமாறிய கணத்தில் உன் கால்களுக்குப் பூங்கொலுசு செய்யலாமென உதிக்கவும் சாணிப்பூட்டன்செடிகளின் பூக்களைக் காம்புடன் கிள்ளிப் பறிப்பதை இரைத்தேடி போயிருக்கும் தாயின் வருகைக்காகக் காத்திருக்கும் கிளிக்குஞ்சுகள் இரண்டு ஆலமரப் பொந்திலிருந்து ஒன்று மாற்றி ஒன்றென எட்டியெட்டி பார்க்கின்றன. குஞ்சம் வைத்த சடைப்பின்னலைப் போல துவங்கி  ஒருஜோடி கொலுசுகள் செய்து வைத்தேன். உதிர்ந்திருந்த புங்கம்பூக்களைச் சேகரித்து பனையோலையில் நார் உரித்து காரைமுள்ளால் கோத்து கழுத்துக்கு மணி செய்து  முடிக்கும்  தருவாயில் கரையேறி நீர் சொட்டச்சொட்ட வந்து நிற்கிறாய். தரைப்புரளக் கட்டியிருந்த பாவாடையைக் கொஞ்சமே உயர்த்திச் சேர்த்துப்பிடித்து  கால்களை நீட்டி எதிரில் அமர்கிறாய். பூங்குலுசுகளைப் பூட்டுகிறேன்.  பக்கவாட்டில் சாய்த்த கழுத்தில் புங்கம்பூ மணியைச் சூட்டுகிறேன். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மலைவாசப் பெண்ணாக ஜொலிக்கிறாய். உன் நாணத்தில் உடையின் ஈரம் உலர்ந்தே விட்டது.

நீராடிய களைப்பில் கண்கள் செருக ‘கொஞ்ச நேரம் தூங்கட்டுமா’ எனக்கேட்டு பெயர்ந்தெழுந்த இடத்தில் படுக்கிறாய். முத்தம் வேண்டுமென முணுமுணுத்து கேட்கிறது பூங்கொலுசு பாதம். மெல்லமெல்ல மண்ணுக்குள் இறங்குகிறது உன்னுடல். பதைப்பதைத்து உன்னை அள்ளியெடுக்க முயல்கிறேன். எஞ்சியது இலைக்காம்பு புருவங்களும், புங்கங்காய் கண்களும், தேவஅரளி உதடுகளும் தான். ஆற்றாத துயரத்துடன் புங்கங்காயை எடுத்துச் சென்று வீட்டின் மண்வாசலில் நடுகிறேன். முளைத்து வளர்ந்து உன் கண்களைத்தான் காய்களாய் காய்க்கும். காலமெல்லாம் உன் நிழலில் படுத்து உன் கண்களைப் பார்த்தபடியே வாழ்ந்து மடிவேன் ஆலிங்கனா.
*

Feb 20, 2018

ஆலிங்கனா-08


மாட்டுக்குப் புல் பிடுங்கிவர அனுப்பியிருந்தாள், பாட்டி. வெயிலேறுவதற்குள் பிடுங்கிக்கொண்டு கொல்லையிருந்து வெளியேறிவிட வேண்டும். வெயில் நேரத்தில் சிக்கிக்கொண்டால் சொணை பிடுங்கித் தின்றுவிடும். புளியம்புற்களை மாடுகள் மிகவும் விரும்பி திண்ணும். தொடர்ந்து கொடுத்து வந்தால் எலும்பும் தோலுமாக இருக்கும் மாடுகளும் கொழுக்மொழுக்கென மினுமினுப்புக் கூடிவிடும். பால்கறக்கும் மாடுகள் என்றால் கூடுதலாக ஒருசொம்பளவுக்குப் பால் சேர்த்துச் சுரக்கும்.


புரட்டாசி மாதத் துவக்கம். சாமை புடைதள்ளும் பருவம். முதன்முறை தாய்மையடைந்த பெண்ணின் மூன்றாம் மாதத்து மேடுதட்டிய அடிவயிறும், புதுவித வனப்பூறிய உடலையும்போல சாமைக்கொல்லை தளதளப்புடன் நின்றநிலையில், வீசும் காற்றுக்கு அசைந்தாடியபடி இருக்கும். அதிகாலைவேளையின் பனித்திரள் பூத்த பயிர்வாசமும், வசீகர இளம்பச்சையும் காண்பவர்களை வசமிழக்கச் செய்யும். வரப்பின்வழியே நடந்துச்சென்றாலும் கீழமர்ந்து மாரளவு என்பதாகக் கைகளை விரித்து அப்படியே சேர்த்து ஆரத்தழுவி ஆனந்தமடைய விரும்பும் மனத்தைக் கட்டுப்படுத்துவது இயலாத காரியம். குளிருக்குப் போர்த்தியிருந்த காடாத்துணியை விலக்கிச் சுருட்டி வரப்பிலிருந்த துறிஞ்சி மரத்தின் சிறுகிளையில் போட்டுவிட்டு வெற்றுடம்புடன் பனிக்குளத்தில் இறங்குவதைப்போல பயிருக்குள் இறங்கினேன். எட்டநின்று பார்த்தால் சாமைப்பயிர் எது, புல் எதுவென்றே பிரித்தறிய முடியாதபடி சாமைக்கு சக்களத்தியாக ஈடுகொடுத்து வளர்ந்திருக்கிறது புளியம்புற்கள். வெறும்புற்களை மட்டும் போட்டல் மாடுகளுக்கு திகட்டிவிடும். கால்களால் மிதித்து சாணம், கோமியத்துடன் கலந்து வீணடித்துவிடும் என்பதால் புளியம்புற்களுடன், எருதுக்கொம்பு புல், கொட்டைத்தாதரை, குட்டிக்கொடி, பண்ணைக்கீரைச்செடி என என்னால் சுமக்கக்கூடிய அளவுக்கு கலந்துக்கட்டிப் பிடுங்கி அரிஅரியாகச் சேகரித்தேன். நீண்டு பரவிப் படர்ந்திருந்த சவுரிக்கொடியைப் பிடுங்கி கயிறாக்கி புற்களைத் திண்டாகக் கட்டினேன். இளங்காலைச் சூரியனின் கதிர்வரவால் கூதற்புகை, புற்தோகைகளில் துளிர்த்திருந்த பனிநீர் முத்துகளும் மறையத் துவங்கின. கிளையில் தொங்கிக்கிடந்த துணியின்மேல் கருப்பு எறும்புகள் சில நடமாடிக்கொண்டிருந்தன. காடாவை எடுத்து உதறும்போதுதான் நேற்று நீ கேட்டிருந்தது ஞாபகத்திற்கு வந்தது. புல்திண்டை வீடு சேர்த்துவிட்டு மாடுகளை மேய்க்க வரும்போது பார்த்துக்கொள்ளலாம் எனப் புறப்பட்டேன்.

மாட்டு கொத்திலிருந்த சாணியை அள்ளிக் கூட்டி குப்பையில் கொட்டிவிட்டு குட்டைக்குச் சென்று குளியலை முடித்துக்கொண்டு வீடு வந்ததும் பாட்டி பழைய சாமைச்சோறு, தயிருடன் உரித்த சிறுவெங்காயமும் கொடுத்தாள். சாப்பிட்டபின், கன்றுகளைக் கொட்டகையில் கட்டி சிறிது புற்களைப் போட்டேன். மாடுகள் இரண்டையும் பிடித்துக்கொண்டு கிளம்பினேன். மேய்வதற்குத் தோதான இடத்தில் மாடுகளைக் கட்டிவிட்டு துறிஞ்சி மரத்தடியில் அமர்ந்தேன். மழைவெயில் உடம்பில் சுளீரென உறைத்தது. சிலிசிலுக்கும் காற்று வெயிலின் சூட்டைச் சிதறடிக்கிறது.

அமர்வதற்கு வாகான இடம்தேடி பொன்வண்டு ஒன்று மரங்களுக்கு மேல்பரப்பில் பறப்பதைப்போல் தளிர்பச்சை ரவிக்கை, அதேவண்ண பாவாடை, ரத்தச்சிவப்பு நிற தாவணி உடுத்தி, பச்சைப்பசேலென விரிந்திருக்கும் சாமைக்கொல்லையில் மிதந்து வருகிறாய். கிளைத்துச் செழிப்பாக வளர்ந்திருக்கும் பண்ணைக்கீரையின் உச்சிக்காம்பின் முனையில் இரு இலைகளின் கதுப்பில் பிதுங்கியிருக்கும் வெண்ணிறப் பூக்கள் உன் பாவாடையில் பூத்திருப்பதைப் போன்று தோற்றம்காட்டி என் கண்களை ஏமாற்றுகிறது. என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறாய். மேய்ந்துக்கொண்டிருந்த மாடுகள் தலையை உயர்த்தி காதுகளைச் சிலிர்த்து முதலில் உன்னைப் பார்த்தன. தொடர்ந்து என்னையும் பார்த்தன. ஒன்றும் ஆபத்தில்லை என்பதைப்போல் கையால் சைகை செய்தேன். புரிந்துக்கொண்டு மேய்வதைத் தொடர்ந்தன.

எதிரில் நிற்கிறாய். தாயின் வயிற்றிலிருந்து பிறப்பு வாசல் கடந்ததும் எனைச்சூழ்ந்த பேரொளியொன்று இத்தனை ஆண்டுகளுக்குப்பின் இன்றென்னை மீண்டும் சூழ்ந்தது, ஆலிங்கனா. உண்மையில் சூரியனை மங்கலாக்கிய பேரொளி நீ. உன்னால் நான் உணரும் மகிழ்ச்சியை என்ன பேர்ச்சொல்லி விளக்குவேன் நான்!? மலர்ந்த முகத்தில் மேலுதட்டுப் பூனைமயிர்க்கால்களில் குட்டிக்குட்டியாக வியர்வை அரும்புகள் குறும்பாக முறைக்கின்றன. ஒற்றி எடுத்துவிட என்னுதடுகள் துடியாய் துடிக்கின்றன. ஆண்பிள்ளைக்குப் பொறுமைதான் அழகு; பொறுமைசாலியைப் போன்று நடிக்கவாவது செய்யென என்னை நானே எச்சரித்துக்கொள்கிறேன். எல்லை மீறிவிடுமோ என்ற அச்சத்தில் என் உள்ளங்கைகள் வியர்க்கிறது. கைகளைப் புல்பரப்பில் தேய்க்கிறேன். உடல் நரம்புகள் உண்டாக்கும் அதிர்வுகளை உனக்குத் தெரியாமல் மறைப்பதற்கு பெரும்பாடு படவேண்டியதாக இருக்கிறது. செம்போத்து பறவை இணைகள் ஆவிலி மரக்கிளையின்மேல் அமர்ந்து ஒன்று விலக மற்றொன்று நெருங்க, விலக நெருங்க என காதல் சரசத்தில் குரலெழுப்பி மகிழ்வது நம்மிருவரின் கவனத்தையும் கவர்ந்தன.

உன் முகத்தின் வியர்வையைக் காற்று உறிஞ்சிக்கொண்டது. கையில் காலி தீப்பெட்டிகள் இரண்டும், நூற்கண்டும் வைத்திருந்தாய். ’பூ கட்ட இங்க எதுக்கு வந்த?’ என்றேன். முகத்திலிருந்த மலர்ச்சி மெல்லக் குழைந்தது. கோபமூட்டி உன்னைக் குழையச்செய்து மீட்டெடுப்பதில்தானே பேரானந்தம் எனக்கு. தீப்பெட்டிகளை ஒரு திசையிலும் நூற்கண்டை என் முகத்திலும் வீசினாய். காரிமாடு மீண்டும் என்னைப் பார்த்தது. மீண்டும் சைகையால் அமர்த்தினேன்.

அருகிலிருந்த கல் ஒன்றைத் தலைக்குமேல் தூக்கிப்பிடித்தபடி ‘அடேய் கொரங்கு என்னை கொலைக்காரி ஆக்காத’ என்றாய். சிரித்தபடி, ‘இந்த வயசுலயும் பொன்வண்டு புடிச்சி அதன் கழுத்தில நூல்கட்டி பறக்கவிட்டு ரசிப்பிபாயா?’ எனக்கேட்டதுக்கு ‘நான் என்னவோ செய்வேன், உன்னால பிடிச்சித்தர முடியுமா? முடியாதா? என முகத்தைச் சுண்டவைத்தாய். குழந்தைத்தனமான இவ்வகை குணத்தாலும் செயலாலும்தான் என்னை என்னிடமிருந்து முழுதுமாக ஈர்த்துகொண்டு வெற்றுக்கூடாக இங்கே உலவ விட்டிருக்கிறாய் பிசாசே- மனத்துக்குள் சொல்லிக்கொண்டு,’ முடியாது போடி. என்ன பண்ணுவ? கொல்லுவியா? கொன்னுக்க. என்னைக்கொன்னுட்டு பொன்வண்டு புடிச்சி விளையாடிட்டிரு’, எனச் சொல்லிக் கொண்டிருக்கையில் அமர்ந்திருந்த மரத்தின் உச்சியிலிருந்து கொம்பேறிமூக்கன் பாம்பொன்று குதித்தோடியது. பயமும் பதற்றமும் அடைந்த நீ கையிலிருந்த கல்லைக் கீழே போட்டுவிட்டு அருகில் வந்து நின்றாய். இருவருக்குமிடையில் இருந்த மூன்றடி இடைவெளியை மூக்கும் மூக்கும் உரசும் நெருக்கத்தில் கொண்டுவந்து நிறுத்தியது அந்தக் கொம்பேறிமூக்கன்.

அந்நேரம் பார்த்து அருகில் எங்கோ பொன்வண்டு பறக்கும் சத்தம் கேட்கவும் முட்டைக்கண்களைச் சுழலவிட்டுத் தேடுகிறாய். விலகிப்போய் தேடவிடாமல் உன்னை என்னிடத்திலேயே தேக்கிவிட்டது பாம்பு. பொன்வண்டின் சத்தம் தேய்வதும் வளர்வதும் உன்னை என்னவோ செய்கிறது. நான் எழுந்து போவதைக்கண்டு புன்னகைத்த உன்னுதட்டுச் சுளைகள், மாடுகளை நோக்கிப்போவதை அறிந்ததும் களையிழந்தன. மாடுகள் போட்டிருந்த சாணத்தை அள்ளி கொல்லையில் வீசிவிட்டு கைகளை சீத்தா இலையில் துடைத்தேன். மாடுகளைப் பிடித்து வேறிடத்தில் மாற்றி கட்டிவிட்டு வந்து அதே இடத்தில் அமர்ந்தேன். என்மீதான எரிச்சல் உச்சிக்குப் பயணிப்பதை உன் பார்வையே உணர்த்தியது. சற்றுத் தொலைவில் இருக்கும் கொன்றை மரத்திற்குமேல் ஒரு பொன்வண்டு பறப்பதைக் கண்டு பதைப்பதைத்து அதையும் என்னையும் மாறிமாறி பார்க்கிறாய். ஓய்ந்து கொன்றை இலையில் அமர்ந்து தலையை ஆட்டியாட்டி இலையைத் தின்கிறது. மினுங்கும் அதன் கரிய தலையும் உடலும், சிவப்பு இறக்கைகளும் உன்னை நிலைக்கொள்ள விடாமல் செய்கிறது.

இயலாமையும், ஏமாற்றமும் தோய்ந்த உன் கண்களைப் பார்க்கவே பிடிக்கவில்லை. விட்டால் சில நொடிகளில் அழுதுவிடுவாய். உன் கோபங்களை ரசிக்கும் எனக்கு உன் அழுகையைத் தாங்கிக்கொள்ள முடியாது, ஆலிங்கனா. சுருட்டி வைத்திருந்த என் சட்டையை விரித்து மூன்று தீப்பெட்டிகளை நீட்டினேன். ஒன்றில் வெட்டைத்தாதரை இலையை வைத்து தலை, உடல், இறக்கை என முழுதும் பச்சை வண்ணம் கொண்ட பொன்வண்டு, அடுத்ததில் துறிஞ்சி இலைகளை வைத்து தலையும் உடலும் பச்சை, இறக்கை மட்டும் சிவப்பு வண்ணம் கொண்ட பொன்வண்டு, மூன்றாவதில் கொன்றை இலை வைத்து தலையும், உடலும் கருப்பு, இறக்கை மட்டும் சிவப்பு வண்ணம் கொண்ட பொன்வண்டு – என மூன்று வகையானதைக் கொடுத்தேன். அழுதே விட்டாய். அது மகிழ்ச்சிக் கண்ணீர். இவ்வுலகில் நான் இறக்கும் வரையிலும் உன் கண்களில் இருந்து மகிழ்ச்சி மட்டும்தான் வழியவேண்டும்.
*

May 30, 2012

ஆலிங்கனா-02



முதலில் இதை படியுங்கள் ஆலிங்கனா-01

க்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் சுட்டெரிக்கிறது. வீட்டுக்குள் அடைபட்டிருக்க முடியவில்லை. ஊரை ஒட்டியிருக்கும் ஏரியின் பக்கம் சென்று குளிர்க்காற்றை தழுவி வரலாம் என கிளம்பி விட்டேன். ஒருமுறை நாம் அங்கே சென்றிருந்தபோது கடல்போல் காட்சி தந்து நம்மை மிரட்டிய நீர் நிரம்பிய ஏரி இல்லை இது ஆலிங்கனா. ஏரியின் அடி மடியில் மட்டும் நீர் ஒட்டியிருக்கிறது நீ இல்லாத நான் போல!

அந்த கொஞ்ச நீரையும் வெயில் குடித்துவிடக்கூடாதென மரகதப்போர்வை போர்த்தியிருக்கிறது பாசி (அலைதாவரம்). நீரின் போர்வையை உதறி போர்த்தத் தோன்றியது எனக்கு. சற்றே பெரிய கல் ஒன்றை தூக்கி நீரில் வீசினேன். கல் விழுந்த இடத்தில் துள்ளி தெரித்த நீர், ஆழ் தூக்கத்திலிருந்து பதறியெழும் பச்சிளங்குழந்தையாய் தெரிந்தது. அவ்விடத்தில் பாசி சற்றே விலகி பின் மெதுவாய் போர்த்தியது நீர் பரப்பை. அதை கண்டதும் நொடியும் தாமதிக்காமல் உன்னைத்தேடி ஓடியது மனம் ஆலிங்கனா.

முன்பொருமுறை இங்கே நாம் வந்திருந்தோமெனச் சொன்னேனே, அன்று நீ சரிகைநெய்த அரக்குநிற பார்டர் வைத்த பச்சைநிற பாவாடையும், அதே நிறத்தில் ரவிக்கையும், மாம்பழ மஞ்சள் நிறத்தில் தாவணியும் உடுத்தி வந்தாய். அநேக கோயில்களில் அம்மன் சிலைகளுக்கு இந்த நிற உடைகள் தான் பிரசித்தம். அன்றெனக்கு அலங்காரமற்ற அம்மன் போல் தெரிந்தாய் நீ. இருவரும் எதிரும் புதிருமாய் கால்கள் நீட்டி அமர்ந்திருந்தோம். நீரலையைத் தழுவி வந்த காற்று எதிர்பாராத நொடியொன்றில் உன் பாவாடையை கெண்டைக்கால் தெரிய உயர்த்திவிட உயிர் போனதைப் போல் பதறிய நீ, பளபளக்கும் உன் கால்களை கள்ளத்தனமாய் திண்ணும் என் கண்களைக் கண்டதும் பசியாறி போகட்டுமென்றோ என்னவோ மெதுமெதுவாய் பாதம் வரையில் இழுத்து மூடியது நினைவில் ஊர்கிறது.

என்னை என்னென்னெ செய்ய தீர்மானித்திருக்கிறதோ உன்னை அபகரித்துக்கொண்ட இந்த இயற்கை! உன்னை ஏன் இந்த அளவிற்கு காட்சிபடுத்துகிறது என் மனமும், கண்ணும்? என் கண்களை குருடாக்கிக் கொண்டு பைத்தியாமாகி யாரும் அறியாத தொலைதூரத்திற்குப் போய்விட வேண்டும் ஆலிங்கனா. கண் போனால் என்ன? மனக்கண்ணில் நீ இருக்கிறாய் அது போதாதா எனக்கு? கண் தெரியாத நான் உன் கரத்தினைப் பற்றிக்கொண்டு என் ஜீவன் சொட்டுச்சொட்டாய் வற்றி முற்றுமுழுதாய் அற்று போகும் வரை உன் பின்னாலேயே நடந்து அலையவேண்டும்.

உன்னைச்சேர முடியாது போன என் ஆற்றாமை உக்கிரமடைந்து இப்போது உன்னைத் திட்டச்சொல்லி தீச்சொற்களை உதடு நோக்கி உந்தித் தள்ளுகிறது அடிவயிறு. உதடுவிட்டு வெளியேற முடியாமல் நெஞ்சுக்கூட்டில் சுற்றிச் சுழல்கிறது கெட்டவார்த்தைகள். உனக்கு கேட்கும்படி ஒரேயொரு முறை உரக்க திட்டிவிடுகிறேன் உன் செவி கொடு ஆலிங்கனா.

“ என்னை விட்டு எங்கேடி போய் தொலைந்தாய் வேசிமகளே?”.

ஹ்ம்ம்! மனம் லேசானது போல் உணர்கிறேன் ஆலிங்கனா. நீ நல்லவள். உன்னை திட்டியிருக்கக் கூடாது. நான் முரடன். முட்டாள். இத்தனைக் கேவலாமான திட்டினை வாங்கிக்கொண்டும் ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்து என்னை நோக்கி கரம் நீட்டும் பேரன்பு உன்னைத்தவிர யாரால் புகட்ட முடியும்? அனல் பட்ட வெண்ணை போல என் நெஞ்சம் உன் பாதம் நோக்கி நெகிழ்ந்து வழிகிறது. வேசிமகளே என்ற சொல் உன்னை வேதனை படுத்தவில்லையா ஆலிங்கனா? நீ என் போற்றுதலுக்குரியவள். கொஞ்சம் பொரு. உன்னை அர்ச்சிக்க ஏதேனும் பூக்கள் பறித்து வருகிறேன்.

ஐயோ...இந்த கடவுள் துரோகி ஆலிங்கனா. உன்னை பூசிக்க உகந்த மலர் ஒன்றுமே இவ்வுலகத்தில் படைக்காமல் விட்டிருக்கிறான் பாவி. கடவுளின் முகத்தில் காரி உமிழத்தோன்றுகிறது. நீயே சொல், என் கோபம் நியாயமானது தானே? நான் சூடவும் நீயில்லை.நீ சூடவும் ஒரு பூவில்லை. உன் பூசைக்கும் இங்கே பூக்களில்லை எனும்போது இப்பூமியை படைத்தவன் மேல் கோபம் கொள்ளாது வேறு யாரை சாடட்டும் நான்?

#



Nov 16, 2011

நூலிழை தவம்




அவளுக்கு பிடிக்காத ஒன்றை
அவளுக்கு பிடித்த சொல் கொண்டு
விளக்கியதும்
புன்னகையுடன்
தலை சாய்த்துக் கொண்டாள், தோளில்.

உயிர்ச்செல்கள் கூசியது
ஆனாலும் என்ன,
தோழிக்கில்லாத உரிமையா?!

***


இலக்கியத்தை
மொழி பெயர்த்தல் போல
எளிதாய் இருந்து விடுவதில்லை

அவள் பேசும்
சொற்களை மௌனப் படுத்தலும்
மௌனத்தை சொல் படுத்தலும்!

***

கழைக்கூத்தாடியின்
கயிற்று நடை தான்
ஆண் பெண் தோழமை.

நூலிழை இடைவெளியை
நூதனமாய் கையாளத் தவறி
இடறி விழும் தருணத்திற்காய்
வாய் பிளந்து காத்திருக்கிறது

துரோகம் அல்லது காதல்
என்னும் முதலை!


Oct 30, 2011

மரணம்



மரணம்
உயிரின்
இடப்பெயர்வு.

அப்பா மரணித்தபோதும்
தம்பி மரணித்தபோதும்

இருமுறை
நானும்
மரணித்திருக்கிறேன்.

நீங்களும் கூட
அதை அனுபவித்திருக்கக் கூடும்.
உயிருக்கு நெருக்கமானவரின்
மரணத்தை ஒன்றி பார்த்திருந்தால்!


மரணம்
உயிர் கொண்டாடும்
திருவிழா.

இல்லையென்றால்
எல்லா உயிர்களும்
மரணத்தை விரும்பும் மர்மம்
என்னவாக இருக்க முடியும்?



Sep 27, 2011

வெள்ளிப் பணம்


அலார அலரலுடன்
அவசர விழிப்பு அன்றாடம்.

எட்டு மணிக்குள்
வேலை துவக்கம் - என 
மூளைக்குள்
எட்டி உதைக்கும்
மணிமுள் ஓசை.

இங்கு எழுத
கை கூசும்
மேற்பார்வையாளனின்
வசீகர வசைகள்,

சுற்றங்களின்
குற்றங்களை
கொட்டி குமையும்
நடப்புக்கால நண்பர்கள்,

தாய்நாட்டு
நாணய மதிப்பை
ஒப்பிட்டு உணர்ந்து
உலர்த்தி கிடத்தும்
உயிரூக்கி நாளங்கள்,

தொலை தேசத்திலிருந்து 
தொலைபேசி உரையாடலில்
துணையாளுடன்
துவளும் தாம்பத்யம்!

இப்படியாக...
துறவறத்துடன் கழிகிறது
பொழுதுகளும், இரவுகளும்!

ஒருபுறம்
காலை நேர 
நிழலாய் தேயும்
இளமை,

மறுபுறம்
மாலை நேர
நிழலாய் நீளும்
பணத்தேவை

இடையில் சிக்கி ஊசலாடும்
மடமக்களைக் கண்டு
கெக்களித்துச் சிரிக்கிறது
வெள்ளிப் பணம்!

இப்படியே தொலைந்திடுமோ
வாழ்வு தினம் தினம்...!!!?



Jun 21, 2011

ஆதலால் என் கணவா...




என்
உயிர் ணவனே,

நம் ஊர் பற்றி
உணராதவரா நீர்?
கல்லடி கூட தாங்கிக் கொள்வேன்.
ஊரார் 
சொல்லடியை ...

மழலையொன்று
இல்லையென்று
மலடி என்றென்னை ...

எழுத்துக்கள் 
அழியுமென்று
அழுகையை நிறுத்திவிட்டு...

இனியும்,
தொலைவில் இருந்தே
தொலைப்பேசி வழி என்னை
போற்றுவதை விட்டுத் தொலை!

ஊருக்கு விரைந்து வந்து...
உன் நெற்றிக்கண்ணை
என் நெற்றிப் பொட்டில் பதித்திடு .
போர்வைக்குள் வேர்வை நீரில் 
என்னை வேக வை.

உன் உதிரச் சூட்டால்
என் உடலை அதிரச் செய்.
நம் உயிர்ச் செல்லால்
என் கருப்பையை
கனக்கச் செய் .

பத்தாம் மாதம் ...
மூச்சடக்கி மூச்சுத்திணறி
முகம் சுளிக்கும்படி
அசிங்கச் சொற்களால் உன்னை
அர்ச்சனை செய்தபடி
கருப்பையின் 
உள்திரையோடு
 உரித்து 
உன்
 கையில் தருவேன்.

தொப்புள் கொடியை நீயே அறு
தாய்மையின் புனிதம் நீயாய் உணர்.

இப்போது அங்கே ...
என்னை
 நினை.
உன்னை அறி.

வருவாய் விரைவாய்
உன் வெளிநாட்டு
வருவாய் மறந்து.

நம் 
எதிர்க்காலம்

வரவாய் வரட்டும்
என்னுள்ளிருந்து...!

ஆதலால்,
என் கணவா...வா!







குறிப்பு:- இது ஒரு மீள்பதிவு. 

Apr 23, 2011

நலம். நலமா?


         ருக்கு போய் ஒரு மாசம் ஆகிப்போச்சாம். பையில இருந்த பாஸ்போர்ட்ட எடுத்து, கையில குடுத்து மறுபடியும் ‘கன்னித்தீவு’- க்கு அனுப்பி வெச்சிட்டாங்க....! (சரி விடுங்க. என் வயித்தெரிச்சல் என்னோட போகட்டும்.) உடம்பு மட்டும் பாஸ்போர்ட்டோட சேர்ந்து வந்துடுச்சே தவிர நெனைப்பு எல்லாம் இன்னும் ஊஊஊ............ர்லயேதான் இருக்கு.

                   அனைவருக்கும் வணக்கம் மக்கள்ஸ். நிச்சயம் எல்லாரும் நலமா இருப்பீங்க- ன்னு நம்பறேன். ஊருலேர்ந்து வந்து ஒரு பதிவு போடலைன்னா எப்புடி? அதான் !





சாரலின்பா - அவளின் பெரிய அத்தையுடன்...!





 தூங்கி எழுந்தவுடன் படப்பிடிப்பு...!




கிருஷ்ணகிரி அணையில் சாரலின்பா - அம்மாவுடன்...!



வீட்டுச் செல்லங்கள்..!



வீட்டின் முன் வயலில் நெல்லும், வரப்பில் வாழையும்.



இதே மாதிரிதாங்க , மூளைக்குள்ள வீட்டு நெனைப்பு பசுமையாவே இருக்கிறதால வேலையே ஓடமாட்டேங்குது. 

உங்க ‘ ப்ளாக் ‘  பக்கமெல்லாம் வந்து மேயுற வேலை இருக்குல்ல. நான் கெளம்பறேன்.



Sep 21, 2010

தேவகணம்



’உன்னை
மணந்ததால் தான்
இந்த நாரும் ( நானும்)
மணக்கிறது’ என்ற
உண்மையை நீ
உணராமல்,

வாழ்த்துச் சொல்ல
வாய் திறக்கும் முன்னே
நானுன்னை
மணந்த நாள் தான்
உனது பிறந்த நாள்
எனச் சொல்லி
பிடிவாதம் செய்கிறாய்.
புரியத் தொடங்கியது
என் பிறவிப்பயன்.

*
யாசித்தே பழகிப்போன
எனக்கு
வள்ளலாக எப்போதும் நீ!

இதோ
இந்த யாசகனின்
வாசகங்கள்
வாழ்த்துக்களாய்
மலர்கிறது - உன்
மலர் பாதங்களில்...!

கூடவே,
என் வாசகர்களின்
வாழ்த்துக்களும் ...!


* இன்று (22/09/10) என்னுயிர் மனைவியின் பிறந்த நாள்.


Aug 12, 2010

உசுரே போகுது





சூரியன்
ஒளியால்
நீரை
உறிஞ்சுவது போல்

கூரிய
விழியால்
என்னுயிரை
நீயும்.....!


*** *** ***

Aug 10, 2010

நட்பின்றி இயங்காது உலகு



ஜூன் 16 , 2010 அன்று 40 நாட்கள் விடுப்பில் தாய்த்தமிழகத்திற்குச் சென்றேன். சென்னை விமான நிலையத்தில் என்னை வரவேற்க (எனது தங்கையின் கணவர் வர சற்று தாமதமாகி விட்டது) நண்பர் கயிலை மு.வேடியப்பன் அவர்கள் வரவிருந்தார். தவிர்க்கவே முடியாத காரணத்தால் அவராலும் வரமுடியாமல் போகவே, அவருடைய நண்பர் ஒருவரை சுமோ வாகனத்துடன் அனுப்பி, அவரது “ டிஸ்கவரி புக் பேலஸ்”-க்கு அழைத்துப்போக ஏற்பாடு செய்திருந்தார்.

காலை உணவாக பூரி வாங்கி வைத்து காத்திருந்தார். முதன்முதலாக இருவரும் நேரில் சந்தித்துக் கொள்கிறோம். ஆனால், அப்படியொரு எண்ணமே இருவருள்ளும் இருக்கவில்லை.மாறாக, நெருங்கிய உறவினரை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திப்பதைப் போலவே உணர்ந்தோம்.
சென்று சேர்ந்ததும் முதல் வேலையாக பூரியை பதம் பார்த்தபின், சிறிது நேரம் பேசி மகிழ்ந்தோம். அன்று புத்தகக்கடைக்கு அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்களும் வந்திருந்தார்.அவரையும் அங்கே சந்தித்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி. பின், சில புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொண்டு ஊருக்குப் புறப்படத் தயாரானேன்.

சுமோ ஓட்டி வந்த அதே நண்பர் அதுவரை வாகனத்திலேயே காத்திருந்து (நான் அதை எதிர்ப்பார்த்திருக்கவில்லை), என்னை அழைத்துக் கொண்டு போய் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சேர்த்தார். எனது தகவலின் பேரில் தங்கையின் கணவர் அங்கே வந்து காத்திருந்தார். சுமோ ஓட்டிய நண்பருக்கு நன்றி சொல்லிவிட்டு,
“பாஸ் தண்ணிப்பழக்கம் உண்டா?”, என்றேன். (எனக்கும் அந்த பழக்கம் இல்லைங்க. நம்பனும். நம்பிக்கைதான் வாழ்க்கை.)

“ஆறு மாசம் ஆச்சுங்க பாஸ். கல்யாணத்துக்கப்புறம் விட்டுட்டேன்”, என்றார்.

“ரொம்ப சந்தோசம்”, என்று மீண்டும் ஒருமுறை கை குலுக்கி விடைப்பெறுகையில்,

இன்னொரு சந்தோசம் பாஸ் உங்களுக்காக விமான நிலையத்தில் காத்திருந்த போது உங்க தங்கச்சி (அவரின் மனைவி) போன் செஞ்சிருந்தாங்க. ”உண்டாகி இருக்காங்களாம்”, என்றார்.

முதல் சந்திப்பிலேயே உறவினராகிப்போன அந்த நட்பை என்ன பேர் சொல்லி அழைக்கலாம்?

அதைவிடவும் கவனிக்கவேண்டியது, மனைவி சொன்ன மகிழ்வானத் தகவலைக்கேட்டு உடனே வீட்டிற்குச் சென்று தனது அன்பையும் , மகிழ்வையும் வெளிப்படுத்துவதை தவிர்த்துவிட்டு , நண்பனின் நண்பனுக்காக மூன்று மணி நேரத்திற்கும் மேலாக (எனக்காக) காத்திருந்த அவரது அன்பை என்ன பேர் சொல்லி அழைக்கலாம்?

“இதை ஏன் மொதல்லயே என்கிட்ட சொல்லலை. நீங்க போய் தங்கச்சியப் பாத்திருக்கலாம். நான் ஆட்டோ புடிச்சி போயிருப்பனே”, என்றேன்.

“பரவாயில்ல விடுங்க பாஸ், உங்களை சந்திக்கறதும் கூட மகிழ்ச்சியான விசயந்தானே. நிலமைய சொன்னா வீட்ல ஏத்துக்குவாங்க பாஸ்” என்றார்.

அந்த நண்பரின் பெயர் “ சுரேஷ் ”. சென்னை தான் அவரது சொந்த ஊராம்.

இரு கைகளையும் பற்றிக் குலுக்கி அவருக்கு வாழ்த்துச் சொல்லி, அந்த புதுத் தங்கைக்கு எனதன்பை தெரிவிக்கச் சொல்லி விட்டு , ஊருக்குப் பயணமானோம். பயணம் இனிதாய் அமைந்தது. அதைவிட இனிது,

எனக்கு, பதிவுலகம் தந்த நட்புகள்......!


அகநாழிகை பொன்.வாசுதேவன் நண்பர்களுடன்.

வேடியப்பனுடன் நான்.


கீழே- “டிஸ்கவரி புக் பேலஸ்”- இன் புகைப்படங்கள்.




நம்ம ”டாபிக்”குல கூட நிறைய புத்தகங்கள் இருக்கே.

அகநாழிகை பொன்.வாசுதேவனுடன் வேடியப்பன்.




நட்பின் ப(பா)லம் அடுத்த பதிவிலும் தொடரும்.....