Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Mar 19, 2018

ஆலிங்கனா-09


ஆலிங்கனா-09
*****************
ரியின் வலக்கரை. வெள்ளாடுகள் வளர்ப்பவர்கள் ஆடுகளுக்குத் தழை வெட்டிவெட்டியே மொட்டையாகி நிற்கும் இரட்டைக்கிளை  ஆலமரத்தடியில் பிள்ளையார் நம் முப்பாட்டன்மார் காலத்திருந்தே நிலையாக அமர்ந்திருக்கிறார். அதனருகில் முண்டும் முடிச்சுமாக அடிபருத்து வளர்ந்த தேவஅரளி மரம்.
அதன் எதிரில் இருக்கும் புங்கமரத்தடியில் அமர்ந்தபடி ’எங்களையும் காப்பாத்து புள்ளையாரப்பா’ என வேண்டிக்கொண்டிருக்கையில் பழுத்த இலைக்காம்பு ஒன்று உச்சந்தலையில் விழுந்தது. எடுத்து உள்ளங்கையில் வைத்துப் பார்த்தேன். உன் இடக்கண் புருவம். உன் இன்னொரு புருவமும் அம்மரத்தடியில் கிடைக்குமென நம்பி சுற்றிலும் பார்த்தேன். தெரிந்தது. எடுக்கச்செல்கையில் தேவஅரளிப்பூ ஒன்று காற்றில் புரண்டு வந்தது. எடுத்துக்கொண்டு வந்து முன்பு அமர்ந்திருந்த இடத்தில் வட்டமாக மண்பரப்பைச் சுத்தம் செய்து விட்டு புருவங்களை வைத்தேன். உதிர்ந்திருந்த புங்கங்காய்களை எடுத்து கண்களாக்கினேன். தேவஅரளியை வைத்து உதடுகளாக்கினேன். கீழுதட்டைக் கிள்ள விழைகையில் ’என்னடா?’ என மிரட்டும் தொனியில்  வினவுவதைப்போல் இரண்டு புருவங்களையும் ஏற்றி இறக்கினாய். உன் புருவங்களின் அசைவுக்கேற்ப பூமிபரப்பே உயர்ந்து தாழ்ந்ததைக் கண்டு திகைத்தே போனேன்.

பூமிக்குள் படுத்திருந்தவளைப்போல தரையைப்பெயர்த்து எழ முயல்கிறாய். முடியாமல் போகவே எழுப்பிவிடச்சொல்லி கையை நீட்டுகிறாய். கையைப்பிடித்து இழுக்கிறேன். ஈரமண்ணிலிருந்து பிடுங்குகையில் நீண்டு வரும் மரவள்ளிக் கிழங்கைப்போல் வருகிறாய். தேகமெங்கும் மண். உன்னை நீயே பார்த்துவிட்டு ’ஒரே மண்ணாயிருக்கேன்ல, ஏரியில் குளிச்சிட்டு வரட்டுமா?’ எனக் கேட்கிறாய். ‘சரி’ என்றேன். கால்களில் அணிந்திருந்த கொலுசுகளைக் கழற்றிக்கொடுத்து ‘பத்திரமா வெச்சிக்க. தொலைஞ்சிடுச்சின்னா என் அம்மா அடிப்பா’, எனச்சொல்லி கொடுத்துவிட்டு துணியுடன் நீரில் இறங்குகிறாய்.

நீரில் பாதம், கணுக்கால், கெண்டைக்கால், முழங்கால், தொடை, இடையென உன்னுடலை விழுங்கும் நீர் உயர உயர பாவாடையும் வட்டமாக உயர்ந்து நீரின் மேற்பரப்பில் மிதக்கிறது. உடலை நீர் தீண்டும் சுகத்தில் உன் பிடரியின் மயிர்கள் சிலிர்க்கிறது. இப்பொழுது ஏரியைப் பார்க்கிறேன். நிறைந்திருக்கும் நீர் முழுதும் உன் பாவாடையாகிப் பரவுகிறது.

திடீரென நீர்க்கோழியைப்போல் மூழ்கினாய். அலையும் கூந்தலை இழுத்துக்கொண்டு நீரும் சுழிந்து உன்னுடன் நீருக்குள் மூழ்கியது.  சிறிது தூரத்தைக் கடந்து நீர் மலர அதிலிருந்து நீயும் மலர்கிறாய். ஏரியில் சூரியகாந்தியின் நீராடல். சூரியகாந்தியின் தேகத்தில் கிளைத்திருக்கும் மலரா வரம்பெற்ற கமலங்கள் இரண்டு. வெயில் முகத்தில்பட்டு வழிந்து உடலை விட்டிறங்க மனமினல்லை என்றாலும் வேறுவழியின்றி வழிந்து நீரில் விழுகிறது. தென்கரையிலிருக்கும் பனைமரத்தில் கூடுகட்டி முட்டையிட்டு அடைகாக்கும் காகம் ஒன்று கண்களைச் சாய்த்துச்சாய்த்து உன்னைப் பார்க்கிறது. நீயெழுப்பிய அலைகள் தவழ்ந்து வந்து கரையைத் தொட்டுயர நீரருகில் ஓய்ந்திருந்த உடும்புகள் இரண்டும் அருகிருந்த உன்னிச்செடிப் புதருக்கு இடம்பெயர்கின்றன.

நூறாண்டுகளாக பிரிந்திருந்த மீன் ஒன்று மீண்டும் நீருடன் கலந்ததைப்போல சுற்றிலும் நடக்கும் எதையும் கண்டுகொள்ளாமல் நீராடி களிக்கிறாய் நீ. காதுகளைப் பிடித்து முயலைத் தூக்குவதைப்போல நீ தந்துபோன கால்கொலுசுகளை என் முகத்திற்கு நேராக உயர்த்திப் பிடித்து முத்தமிட்ட நொடியில் உன்னுடல் சிலிர்க்க ஏரியின் நடுவிலிருந்து என்னைப் பார்க்கிறாய். நெடுநேரமாக நீரில் ஊறியதால் சிவந்திருக்கும் கண்களால் சிரித்துவிட்டு, கரையேறும் உத்தேசம் இல்லாதவளாக நீரில் கரைந்துகொண்டிருக்கிறாய். பொழுதுபோக்கத் தெரியாமல் நான் தடுமாறிய கணத்தில் உன் கால்களுக்குப் பூங்கொலுசு செய்யலாமென உதிக்கவும் சாணிப்பூட்டன்செடிகளின் பூக்களைக் காம்புடன் கிள்ளிப் பறிப்பதை இரைத்தேடி போயிருக்கும் தாயின் வருகைக்காகக் காத்திருக்கும் கிளிக்குஞ்சுகள் இரண்டு ஆலமரப் பொந்திலிருந்து ஒன்று மாற்றி ஒன்றென எட்டியெட்டி பார்க்கின்றன. குஞ்சம் வைத்த சடைப்பின்னலைப் போல துவங்கி  ஒருஜோடி கொலுசுகள் செய்து வைத்தேன். உதிர்ந்திருந்த புங்கம்பூக்களைச் சேகரித்து பனையோலையில் நார் உரித்து காரைமுள்ளால் கோத்து கழுத்துக்கு மணி செய்து  முடிக்கும்  தருவாயில் கரையேறி நீர் சொட்டச்சொட்ட வந்து நிற்கிறாய். தரைப்புரளக் கட்டியிருந்த பாவாடையைக் கொஞ்சமே உயர்த்திச் சேர்த்துப்பிடித்து  கால்களை நீட்டி எதிரில் அமர்கிறாய். பூங்குலுசுகளைப் பூட்டுகிறேன்.  பக்கவாட்டில் சாய்த்த கழுத்தில் புங்கம்பூ மணியைச் சூட்டுகிறேன். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மலைவாசப் பெண்ணாக ஜொலிக்கிறாய். உன் நாணத்தில் உடையின் ஈரம் உலர்ந்தே விட்டது.

நீராடிய களைப்பில் கண்கள் செருக ‘கொஞ்ச நேரம் தூங்கட்டுமா’ எனக்கேட்டு பெயர்ந்தெழுந்த இடத்தில் படுக்கிறாய். முத்தம் வேண்டுமென முணுமுணுத்து கேட்கிறது பூங்கொலுசு பாதம். மெல்லமெல்ல மண்ணுக்குள் இறங்குகிறது உன்னுடல். பதைப்பதைத்து உன்னை அள்ளியெடுக்க முயல்கிறேன். எஞ்சியது இலைக்காம்பு புருவங்களும், புங்கங்காய் கண்களும், தேவஅரளி உதடுகளும் தான். ஆற்றாத துயரத்துடன் புங்கங்காயை எடுத்துச் சென்று வீட்டின் மண்வாசலில் நடுகிறேன். முளைத்து வளர்ந்து உன் கண்களைத்தான் காய்களாய் காய்க்கும். காலமெல்லாம் உன் நிழலில் படுத்து உன் கண்களைப் பார்த்தபடியே வாழ்ந்து மடிவேன் ஆலிங்கனா.
*

Oct 11, 2013

இரை

குஞ்சுகளுக்கு
இரையூட்டி விட்டு
விருட்டென பறக்கும்
தூக்கணாங்குருவி போல்
அஞ்சல்பெட்டிக்குக் கடிதத்தையும்
என் நெஞ்சத்துக்குக் காதலையும்
ஊட்டிவிட்டு விரைந்து விட்டாய்
அடுத்தடுத்த நாளும்
அங்கேயே
நிறுத்தி வைத்திருக்கிறேன் என்னை.

*

Jun 12, 2013

வல்லமை

என்னை 
வீழ்த்தும் ஆயுதம் செய்ய 
பத்து மாதம் தேவையாய் இருந்திருக்கிறது 
என் அத்தைக்கு

அந்த 
ஆயுதத்தைக் கூர் தீட்ட
எண்ணிரண்டு ஆண்டுகள்
தேவையாய் இருந்திருக்கிறது
காலத்திற்கு

அந்த
ஆயுதத்திற்கு என்னை இரையாக்க
ஒரேயொரு நொடிதான் தேவையாய் இருந்தது
காதலுக்கு.


May 18, 2013

பெயர்




எழுதுகோல்
வாங்கும்போதெல்லம்
எதற்கு உந்தன்
பெயர் எழுதினேன் என்பதை
இன்று தான் உணர்ந்தேன்

கவிதை எழுத
தவழ்ந்திருக்கிறேன்.

*

Apr 8, 2013

காத்திருப்பு


நேரம் கடத்த
சிறு கற்களெடுத்து
குளத்து நீரில் எறிந்துக் கொண்டிருந்தேன்.

எனக்கும்
நிழல் விரித்துக் கொண்டே
பழுத்த இலைகளை
கிள்ளியெறிந்துக் கொண்டிருந்தது மரம்.

என் காத்திருப்பு
அவளின் வருகைக்காக

மரத்தின் காத்திருப்பும்
அவளுக்காகத்தான் இருக்குமோ?

**

Jan 5, 2013

காதல் காலம்-01



இன்றென்ன
காதல் ஜெயந்தியா?

என் 
வீடெங்கும்
உன்
கா(த)ல் தடங்கள் பதிந்திருக்கிறதே!

*

என் உள்ளம் 
பல்லாங்குழியாகவா தெரிகிறது?
பின்னே ஏனடி
கண்ணுமுழி ரெண்டையும்
அதில் போட்டு
விளையாடிக் கொண்டிருக்கிறாய்?

**


Jul 26, 2012

காளியடியான்


நாற்புறமும்
நீ
நடுவில்
நான்.

இதுவரை
எனை காத்தவள் 
காளி
இனி 
நீ

காளிக்கும்
உனக்குமான வித்தியாசம்,

காளி கையில் ஆயுதம்
உன் கையில் காதல்.

*


Jul 21, 2012

களவொழுக்கம்




நிறைமாத கர்ப்பிணியின்
நடையைப் போல
தளும்புகிறது
நிரம்பிய ஏரி.

விதவிதமாய் ஒலியெழுப்பி
பயமுறுத்தும் முயற்சியில்
தவளைகள்

கரைக்குள் தவிக்கும்
அலைகளுடன் அலைந்து கொண்டிருக்கிறேன்
நான்.

ஜாமம் நெருங்கிக் கொண்டிருக்கிறதே
தூங்கி போயிருப்பாளோ?




Jun 26, 2012

தினந்தோறும்




காலை எழுந்தவுடன்
காதல்

பின்பு

காசுக்காக கொஞ்சம்
ஓடல்

மாலை முழுதும் மென்
ஊடல்

மாலை மங்கியதும்
........!



May 30, 2012

ஆலிங்கனா-02



முதலில் இதை படியுங்கள் ஆலிங்கனா-01

க்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் சுட்டெரிக்கிறது. வீட்டுக்குள் அடைபட்டிருக்க முடியவில்லை. ஊரை ஒட்டியிருக்கும் ஏரியின் பக்கம் சென்று குளிர்க்காற்றை தழுவி வரலாம் என கிளம்பி விட்டேன். ஒருமுறை நாம் அங்கே சென்றிருந்தபோது கடல்போல் காட்சி தந்து நம்மை மிரட்டிய நீர் நிரம்பிய ஏரி இல்லை இது ஆலிங்கனா. ஏரியின் அடி மடியில் மட்டும் நீர் ஒட்டியிருக்கிறது நீ இல்லாத நான் போல!

அந்த கொஞ்ச நீரையும் வெயில் குடித்துவிடக்கூடாதென மரகதப்போர்வை போர்த்தியிருக்கிறது பாசி (அலைதாவரம்). நீரின் போர்வையை உதறி போர்த்தத் தோன்றியது எனக்கு. சற்றே பெரிய கல் ஒன்றை தூக்கி நீரில் வீசினேன். கல் விழுந்த இடத்தில் துள்ளி தெரித்த நீர், ஆழ் தூக்கத்திலிருந்து பதறியெழும் பச்சிளங்குழந்தையாய் தெரிந்தது. அவ்விடத்தில் பாசி சற்றே விலகி பின் மெதுவாய் போர்த்தியது நீர் பரப்பை. அதை கண்டதும் நொடியும் தாமதிக்காமல் உன்னைத்தேடி ஓடியது மனம் ஆலிங்கனா.

முன்பொருமுறை இங்கே நாம் வந்திருந்தோமெனச் சொன்னேனே, அன்று நீ சரிகைநெய்த அரக்குநிற பார்டர் வைத்த பச்சைநிற பாவாடையும், அதே நிறத்தில் ரவிக்கையும், மாம்பழ மஞ்சள் நிறத்தில் தாவணியும் உடுத்தி வந்தாய். அநேக கோயில்களில் அம்மன் சிலைகளுக்கு இந்த நிற உடைகள் தான் பிரசித்தம். அன்றெனக்கு அலங்காரமற்ற அம்மன் போல் தெரிந்தாய் நீ. இருவரும் எதிரும் புதிருமாய் கால்கள் நீட்டி அமர்ந்திருந்தோம். நீரலையைத் தழுவி வந்த காற்று எதிர்பாராத நொடியொன்றில் உன் பாவாடையை கெண்டைக்கால் தெரிய உயர்த்திவிட உயிர் போனதைப் போல் பதறிய நீ, பளபளக்கும் உன் கால்களை கள்ளத்தனமாய் திண்ணும் என் கண்களைக் கண்டதும் பசியாறி போகட்டுமென்றோ என்னவோ மெதுமெதுவாய் பாதம் வரையில் இழுத்து மூடியது நினைவில் ஊர்கிறது.

என்னை என்னென்னெ செய்ய தீர்மானித்திருக்கிறதோ உன்னை அபகரித்துக்கொண்ட இந்த இயற்கை! உன்னை ஏன் இந்த அளவிற்கு காட்சிபடுத்துகிறது என் மனமும், கண்ணும்? என் கண்களை குருடாக்கிக் கொண்டு பைத்தியாமாகி யாரும் அறியாத தொலைதூரத்திற்குப் போய்விட வேண்டும் ஆலிங்கனா. கண் போனால் என்ன? மனக்கண்ணில் நீ இருக்கிறாய் அது போதாதா எனக்கு? கண் தெரியாத நான் உன் கரத்தினைப் பற்றிக்கொண்டு என் ஜீவன் சொட்டுச்சொட்டாய் வற்றி முற்றுமுழுதாய் அற்று போகும் வரை உன் பின்னாலேயே நடந்து அலையவேண்டும்.

உன்னைச்சேர முடியாது போன என் ஆற்றாமை உக்கிரமடைந்து இப்போது உன்னைத் திட்டச்சொல்லி தீச்சொற்களை உதடு நோக்கி உந்தித் தள்ளுகிறது அடிவயிறு. உதடுவிட்டு வெளியேற முடியாமல் நெஞ்சுக்கூட்டில் சுற்றிச் சுழல்கிறது கெட்டவார்த்தைகள். உனக்கு கேட்கும்படி ஒரேயொரு முறை உரக்க திட்டிவிடுகிறேன் உன் செவி கொடு ஆலிங்கனா.

“ என்னை விட்டு எங்கேடி போய் தொலைந்தாய் வேசிமகளே?”.

ஹ்ம்ம்! மனம் லேசானது போல் உணர்கிறேன் ஆலிங்கனா. நீ நல்லவள். உன்னை திட்டியிருக்கக் கூடாது. நான் முரடன். முட்டாள். இத்தனைக் கேவலாமான திட்டினை வாங்கிக்கொண்டும் ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்து என்னை நோக்கி கரம் நீட்டும் பேரன்பு உன்னைத்தவிர யாரால் புகட்ட முடியும்? அனல் பட்ட வெண்ணை போல என் நெஞ்சம் உன் பாதம் நோக்கி நெகிழ்ந்து வழிகிறது. வேசிமகளே என்ற சொல் உன்னை வேதனை படுத்தவில்லையா ஆலிங்கனா? நீ என் போற்றுதலுக்குரியவள். கொஞ்சம் பொரு. உன்னை அர்ச்சிக்க ஏதேனும் பூக்கள் பறித்து வருகிறேன்.

ஐயோ...இந்த கடவுள் துரோகி ஆலிங்கனா. உன்னை பூசிக்க உகந்த மலர் ஒன்றுமே இவ்வுலகத்தில் படைக்காமல் விட்டிருக்கிறான் பாவி. கடவுளின் முகத்தில் காரி உமிழத்தோன்றுகிறது. நீயே சொல், என் கோபம் நியாயமானது தானே? நான் சூடவும் நீயில்லை.நீ சூடவும் ஒரு பூவில்லை. உன் பூசைக்கும் இங்கே பூக்களில்லை எனும்போது இப்பூமியை படைத்தவன் மேல் கோபம் கொள்ளாது வேறு யாரை சாடட்டும் நான்?

#



May 7, 2012

பரு காட்டி விரல்


இளம் இருளில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அரும்பும்
விண்மீன் போல
அவளின்
இளங்கறுப்பு கன்னத்தில்
ஒன்றிரண்டு
பருவ பருக்கள்.

அதை
அடிக்கடி தொட்டுத் தடவும்
அவளின்
ஆள்காட்டி விரல்
எனக்கு மட்டும்
பரு காட்டி விரலாக
தெரிவதேன்?

#



May 2, 2012

தாய்ப்பசு


கண் தானம்
சிறந்தது தான்.
என்றாலும்

என்
கண்களை தானம்
வழங்கும் அனுமதியை
நீங்கள்
அவளிடம் தான் கேட்க வேண்டும்.

*

தாய்ப்பசு
அவள்.

இளங்கன்று
நான்.

விளையாடச் செல்லும்
வேளைகளில்
தடுமாறிடுவேனோ என
எப்போதும் அச்சத்துடனே இருக்கிறாள்.

எங்கு சென்றாலும்
அவள் மடி தேடி வருவேன் என்பதை மறந்து.

**




Apr 9, 2012

தீயாடல்


தேய்பிறைக் காலம்.

பின்னிரவு.

நிலா
துழாவிப் பார்த்து கடந்திருக்கிறது
நம் மொட்டை மாடியை.

இனியெப்பவும்
வெளியூரில் ராத்தங்கல்
கூடாது நமக்கு.

*

தீ
நிரம்பிய
குளம்
நீ.

தீயாட வேண்டும்
நான்.

**


Apr 3, 2012

மைக்காரி



நம்மூர்
கோயில் திருவிழா நிறைவடைந்தது.
நம்முள்
காதல் திருவிழா ஆரம்பமானது.

திருவிழாவுக்கு வந்த
நம் உறவுகளெல்லாம்
ஊருக்குப் புறப்பட்ட
அன்றைய காலையில்...

என் அறைக்கு ஓடிவந்து
கண்ணாடிக்கு முன் நின்று
கண்ணுக்கு மையிட்டு
நுனிவிரலால் தொட்டெடுத்து
திருஷ்டியாய் கண்ணாடிக்கும்
வைத்துவிட்டுச் சென்றுவிட்டாய் .

அன்றிலிருந்து.....

கண்ணாடி
முன்பாக நான் நின்றால்
முன்னாடி
பிம்பமாக நீ தான் தெரிகிறாய்.

உண்'மையைச் சொல்லேன்.
அன்று நீ
கண்ணாடிக்கு வைத்து போனது
வெறும்
கண் ‘மை’ தானா?



Mar 12, 2012

அவளுக்கு அமுதென்றும் பேர் - 06



பேசிப்பேசி
இமைகளின் மேல்
இமயக்கனவை
ஏற்றி விட்டு
நள்ளிரவு ஆகிப்போச்சு
“உறங்கு போடா” - என
இரக்கமற்ற சொல் உதிர்க்கும் அவளின்,
தீயில் 
ஊறிய 
பலாச்சுளைகளை
என் செய்வேனோ
தொலைதேசத்தில்
இருந்தபடி?


***


இரும்புக் கொல்லனின்
நெருப்பு உலையை எரிக்கும்
தோல் துருத்தியின் காற்றைப்போல

எரிக்கிறது
என் இரவுகளை
தொலைபேசியில்
துளைத்து வரும்
ஒருத்தியின்  ஏக்க மூச்சுக்காற்று .

***



Feb 23, 2012

அவளுக்கு “அமுதென்றும்” பேர் -05



பெருந்தீயின் 
நுனி ஜ்வாலை 
அறுந்து அறுந்து காற்றில் 
கரைந்து விடுவது போல 


என் 
ஜீவ செல்கள் 
ஒவ்வொன்றாய் 
அவளில் 
கரைந்துபோக 
சாபமிடுங்கள்..!
***

வழிப்பயணிக்கென 
விளைந்து நிற்கும் 
காட்டு கனிமரங்கள் போல


என் 
வழியெங்கும்
வியாபித்திருக்கும்
விநோதா
அவள்.


***

Feb 20, 2012

திமிருக்கு திமிர் அழகு



தான்
அழகென்ற திமிர் அவளுக்கு.

‘என்னிடம்
எது அழகு சொல்?’,  என
நிமிடத்திற்கு 
எண்பது தடவை
கேட்டு வைக்கிறாள்.

உங்களிடம்
சொல்வதற்கென்ன?

திமிர் தான் அழகு
அவளக்கு!


****

Feb 14, 2012

காதல் பரிசு

( வீட்டுத்தோட்டத்தில்...)


பறிக்காமல்
செடியுடன் காம்பை பிடித்து,

கொடுப்பது போல்
நான் பாவனை செய்ய,
பெறுவது போல்
நீ பாவனை செய்ய

நிறைவேறியது
நம்
காதலர் தின
பரிசு பரிமாற்றம்!

பறிக்கப்படாத
அந்த வண்ண ரோஜா
பகிர்ந்த வண்ணமிருக்கிறது
தோட்டத்துப் பூக்களிடம்.

நம்மையும்,
நம் காதலையும்!

**************************************

* காதலை போற்றும் அனைவருக்கும் எங்கள் அன்பு வாழ்த்துக்கள்.


Jan 12, 2012

அவளுக்கு “அமுதென்றும்” பேர் -04


எங்களை
பார்த்தவர்களில் பலரும்
‘கொஞ்சம் அழகானவளைப்
பார்த்திருக்கலாமே’ - என்றார்கள்.

‘என் கண்ணால்’
பார்க்கத் தவறிய அவர்களுக்கு
அழகைப்பற்றி என்ன தெரியும்...?

***

கையில்
இரு ஆரஞ்சு பழங்களைத் திணித்து
சாப்பிடச்சொல்லி விட்டு

சுவைமிகு
சுளையிரண்டையும்
அவளே எடுத்துச் செல்லும்
விநோதத்தை
யாரிடம் போய் சொல்ல...?


Jan 4, 2012

அவளுக்கு “அமுதென்றும்” பேர் -03




முற்றா இளம்புல்
அவளது எழுத்துக்கள்.

மீண்டும் மீண்டும்
தூண்டுகிறது படிக்கும் ஆவலை.

அடங்கா பசி கொண்ட கிழப்பசு
முற்றா இளம்புல்லை சப்பி மேயும் 
காட்சியைக் குறிக்கும்
குறுந்தொகைப் பாடலொன்று
நினைவில் நிழலாடுகிறது.

ம்ம்!
என்னாவாயிருக்கும்...?