Dec 21, 2009

புரிந்தால் சரி...



இரு
இரும்பு உருளைகளுக்கு
இடையில் சிக்கிய
கரும்பு
நான் .

உங்கள் 'கனவு' சாறாக ..!
என் 'கனவுகள்' சக்கையாக ...!

Dec 9, 2009

சுவாசம்



கண்ணிலும்
சுவாசித்தேன்
முதன் முதலாய்.

தூசி விழுந்த
என் கண்ணை
உதடு குவித்து
நீ
ஊதியபோது.

Dec 4, 2009

மறுநடவு



அவள் தரப்பிலும் யாரும் இல்லை
என் தரப்பிலும் யாரும் இல்லை

கடவுளாய் மாற்றப்பட்ட
கற்சிலை முன்பு நலமாகவே நடந்தேறியது
எங்களின்
கந்தர்வக் கல்யாணம்

அதே வருடம் ஒரு வாரிசு
அடுத்த வருடமே விவாகரத்து

அழுதுச் சொன்னேன்
அழுந்தச் சொன்னேன்
வேண்டாமே இந்த "ரத்து" என்று.

அவள் -
கேட்கவுமில்லை
கேட்பதாகவும் இல்லை .
பிரிந்தே விட்டாள்
பிள்ளையும் என்னையும் விட்டு.

அது அவள் குற்றமில்லை
அழகின் கர்வம்
உடலின் திமிர்

காலம்
கடிகார முள்ளில்
சுற்றிச் சுற்றிச் சுருங்கியது -அவளின்
சருமம் போலவே.

நீண்ட இடைவெளி.......................

ஒரு நாள்,
பெண்களின்
பேராயுதமாம் கண்ணீர் - அதை
கண்களில் ஏந்தி
உழுதாள்...என்னை.

அவள் மனதின் மறு நடவிற்கு
இவனின் மனம் வேண்டும் என்று .

என் கை விரலை இறுகப்பற்றியபடி
கண் சிமிட்டினான் என் கண்மணி .

இறுக்கம் தளர்த்தி
இதயம் சொல்லியது
"பிரிந்தால் பாவம்-மீண்டும்
இணைந்தால் தீரும்" என்று.

Dec 1, 2009

நிர்வாணமாய் நீ



உன்னைக்
கரம்
பிடிக்க ஆசைதான்.
என்
விரல் பட்டாலே
நீ
தான்
ஒரு
மாதிரியாகி விடுகிறாய் ...

ஊரறியும்

உலகறியும்
நீ யொன்றும்
கண்ணகி
வம்சமில்லை என ...

வெட்ட வெளியினில்
நிர்வாணமாய்
நீ
இருக்கையில்
இன்றும்
ஒருமுறையென 
உள்ளுக்குள்

ஓர்
சபலம் உதிப்பது
உண்மை
.

உன்னருகே

நான் நெருங்குகையில்
உன்
அச்சம்
உணரமுடிகிறது
என்னால் .

இருந்தும்

உன்

சிணுங்கல்
விரும்பியே
தேடி
வந்து -உன்னைத்
தீண்டி
மகிழ்கிறேன் .




தொட்டாச்சிணுங்கியே !



Nov 25, 2009

நீயே சொல்-02


நட்பென்றுதானே
நம்பிக்கொண்டிருக்கிறோம்

எப்போதாவது
தண்ணிக்குள்ளிருந்து
தலை தூக்கிப் பார்க்கும்
தண்ணீர் பாம்பை போல்

அவ்வபோது
நம்'முள்'ளிருந்து
தலை தூக்கிப் பார்க்கும்
காதலை
என்ன செய்யலாம்...?

Nov 15, 2009

நத்தை


மழை ஓய்ந்த பின்னிரவு
அரை தூக்கத்தில் பிறை நிலா

யாருக்கு பயந்தோ
இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறது
கூட்டை முதுகில் சுமந்தபடி
நத்தை


அதை பின்தொடர்ந்து
போய்க்கொண்டிருக்கிறது
என் தூக்கத்தைச் சுமந்தபடி

உன்

நினைவு.!

Nov 10, 2009

காதல் குழந்தை


கொடும்பசி கொண்டு ,
பால் சுரக்காத
தாயின் தனங்களை
சப்பி
ஓய்ந்து
பாலுக்காக வீரிட்டு அழும்
பச்சிளங் குழந்தையைப் போல்

உன்
காதலுக்காக
வீரிட்டபடி...

என் இதயம் !




Nov 4, 2009

பருவ ஞாபகம்



வானிலை
ஆய்வாளர்கள்
சிரித்துக் கொண்டே அறிவித்தார்கள்
இவ்வாண்டு
பருவமழை பொய்க்கக் கூடுமென !


என்னில்
உன்
மழைநாள் ஞாபகங்கள்
வரண்டு விடக்கூடுமோ?

Nov 3, 2009

"எனக்கு மகனாக"





கல்லூரிக்குப் போயிருப்பதாகவே
என்னுள் இருக்கிறாய்.
காலன் வீட்டிற்குப் போய்விட்டதாய்
எப்படி நான் ஏற்றுக்கொள்ள?

உன் சிதைக்கு "தீ" மூட்டி
நான் அழுதுக்கொண்டிருக்கையில்
நம் பகை சிரித்து மகிழ்ந்ததை
எப்படி உன்னிடம் சொல்வேன்?

வேலையிருக்கு விரைந்தெழுடா என்றால்
அதிகாலை குளிருதுடா என்பாயே,
வெந்நீர் எடுத்து வைத்து
குளிக்கவாடா என்றழைத்தால்
சுடுகிறதென்று குளிர் நீர் கேட்பாயே

அன்று மட்டும் ,
அதிகாலை என்றும் பாராமல்
கொழுந்து விட்டெறிந்த
கட்டைக் குவியலுக்குள்
அமைதியாய் எப்படிடா படுத்திருந்தாய் ?

நம்மைப் பெற்றெடுத்த
அம்மா சொல்கிறாள்:
உன்னைச் சுமந்த கருப்பை
மறந்து போனதாம்.
உன்னைச் சுமக்கும் நினைப்பை
மறக்க முடியவில்லையாம் .


நீ
வாங்கவிருந்த பட்டங்களுக்கும்
சூடவிருந்த வெற்றிகளுக்கும்
மாலைச் சூட்ட வேண்டிய கரங்கள்
உன் நிழல் அடைத்திருக்கும்
மரச் சட்டங்களுக்கு
மலர்கள் குவித்து........,

எங்கள்
பதினெட்டு வயது கனவை
தீயின் நாவிற்கு உணவாய்
கொடுத்துவிட்ட
ஓராண்டு நினைவில்
அழுகிறோம்.

எங்கிருக்கிறாய்
உடன் பிறப்பே?
ஏங்கித் தவிக்கிறோமே
ஏதும் உணராமல் இருப்பாயோ?
எனக்கு மகனாகப் பிறப்பாயோ?

Oct 30, 2009

"தொல்லை வரம்"




பிள்ளை வரம் வேண்டி
அரசமரம் சுற்றும்
அறிவிலிப் பெண்கள் போல்

தொல்லை (காதல்) வரம் வேண்டி
உன்னைச் சுற்றிக் கொண்டிருக்கிறது

ஒன்றுமறியாத
என் மனம்...!


Oct 27, 2009

"அன்னை பூமி "

ஒரு காலை வேளை (தூங்கி எழுந்தவனைத்) தோரணம் கட்டி அழைக்கும் வானவில் ...!

இதுதான் எங்கள் வாழ்விடம் . எப்போதுமே இதேபோன்று பசுமையாக இருப்பதில்லை. பருவகாலத்திற்கு ஏற்றாற்போல் மாறும். இது கடந்த செப்டம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் ஒரு நாள் காலை நேரத்தில் எடுக்கப்பட்ட படம்.



மின்சாரக் கம்பியில் வரிசையாக அமர்ந்து இயற்கையை ரசிக்கும் கிளிகள்.



எங்களின் நெல் வயல்.



மலையும், மலையைச்சார்ந்த நிலமும்.


எங்களின் கூரை வீடு.


எங்களுக்கும் தாய் . ( பால் தருவதால் )

எங்க வீட்டு காவலன் .(வடிவேலு)


எங்கள் வாழ்வு இப்படி இயற்கையோடு ஒன்றியது. இன்னும் சில ஆண்டுகளில் இந்த நிலத்தோற்றம் சிதைக்கப் படலாம்.


(குறிப்பு:- இந்தப் படங்கள் அனைத்தும் கைத்தொலைப்பேசி மூலம் எடுத்தது.)

Oct 23, 2009

"இன்னும் இருக்கிற ...காதல்"


இதுவரை
என்னால் எழுதப்படாத
சொற்களில்தான்
அதிகமாக இருக்கிறாய்
நீ!

பகிரப்பகிரப்
பெருகும்
அன்பைப்போல்
எழுதயெழுத - என்னுள்
எங்கிருந்து வருகிறாயோ
நீ?

என் எழுத்துக்களின்
ஏதாவதொருச் சொல்
இன்றல்லது என்றாவது
அடயாளப் படுத்தக்கூடும்
நம்மை....உரியவர்களிடம்...!

Oct 22, 2009

"காதல்"



நெடுகிலும்...
பல்லாயிரம் பொய்கள்

நடுநடுவே
ஒன்றிரண்டு மெய்கள்


ஆனாலும்
இனிக்கிறது

காதல்!

Oct 20, 2009

"மலர்கள் மீண்டும் மலரும் "



அன்னையே,

என்னைக்
'கருப்பை ' தொட்டிலில் சுமந்த
உன்னை
மருத்துவமனைக் கட்டிலில்
கிடத்தி வைத்திருக்கிறேன்.

உன் உயிரைக்
கவர்ந்துச் செல்ல
வாசல் வரை வந்துவிட்ட
காலன் * கூட
கனிவான உன்
முகம் பார்த்து
கை பிசைந்து
நின்றிருக்கக் கூடும்.

அவனின்
அந்த கணப்பொழுது
தயக்கம் தான்
தாயுன்னைக் காப்பாற்றும்
வாய்ப்பைத் தந்தது.

நெடுநாளாய்
நலம் குன்றிய உன்னை
மொய்த்திருக்கும்
மௌனநிலை
எம் மனதைக் கொல்கிறது.

ஆனாலும்
நம்பிக்கை இருக்கிறது.

உன்
உதட்டுப் புன்னகை
மலர்கள் மீண்டும் மலரும்!

(காலன்*=எமன்)



குறிப்பு:- "மலர்கள் மீண்டும் மலரும்" என்ற தலைப்பின் கவிதைப் போட்டியில்
பரிசு பெற்ற கவிதை. தலைப்புத் தந்தவரும், கவிதை தேர்ந்தேடுத்தவரும் "கவிஞர் திரு.மு.மேத்தா " அவர்கள்.

இக்கவிதை எழுதிய அன்று என் தாயார் மிகவும் கடுமையாக உடல்நலம் பாதிக்கப் பட்டிருந்தார். ( தற்போது மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறார்.)

(படத்தில் "கவிதாயினியும் தோழியுமான" சுகுணா , கவிஞர் மு.மேத்தா, அருகில்அடியேன் .)

Oct 14, 2009

"...த்தேன் நினைவுகள் "


கலைக்கப்பட்ட
தேன் கூட்டில்
கரைந்தொழுகும்
தேன்நெய் போல்

புதைக்கப்பட்ட
உன் நினைவில்
கரைந்துக் கலைகிறது

பழக்கப்பட்ட
என்
தனிமை.

Oct 13, 2009

சாரலின்பா


(தூளியில் துயில்கிறாள் )

என் செல்ல மகளுக்கு "சாரலின்பா" என்னும் பெயரை ஒன்பது பேரும், "சாரலினியா" என்னும் பெயரை ஏழு பேரும் பரிந்துறைச் செய்திருந்தார்கள். ஆக "சாரலின்பா" பெரும்பான்மைப் பெற்றதைத் தொடர்ந்து ,

முதன்மை நீதிபதியாக அங்கம் வகித்த னதருமை "மனைவி"யின் தீர்ப்பினை ஏற்று ,

"
சாரலின்பா"


என்னும் பெயரைச் சூட்டி பெருமகிழ்வடைகிறோம்.


உதவிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி.



இன்பா
(இவர் புதுமுகம் ஆதலால் இங்கிட்டு முக்கியமா பாத்துட்டுப் போங்க.)

இவர்கள் அனைவருக்கும் என் அன்பு மகளின் இன்ப முத்தங்கள்.

Oct 12, 2009

இனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள்




வாருங்கள் ,

சகோதர சகோதரிகளே,
மாமன் மச்சான்களே,
பாசமுள்ள மச்சினிகளே,(யாரும் இல்லையா?)


இனிப்பை எடுத்துக்கொள்ளுங்கள் .

இனிப்புச் சுவையுடன்,
எங்கள் ...ம்ம்ஹூம் .... நம் குட்டி தேவதைக்கு ,

பெயர்ச் சூட்டி விடலாம். சூட்டும் முன்,

அ). சாரலினியா, (சாரல் இனியா )
ஆ). சாரலின்பா (சாரல் இன்பா)



மேற்கண்ட இரண்டில் (உங்களுக்கு மிகவும் பிடித்த) ஒரு பெயரைக் குறிப்பிட்டு பின்னூட்டமிடவும்.



"எப்பதான் எனக்கு பேர் சூட்டப் போறீங்கப்பா?" -ன்னு நாள்தோறும் என்னைத் தூங்கவிடாமல் துவம்சம் செய்கிறாள்.

பெரும்பான்மையோருக்குப் பிடித்த பெயரைச் சூட்டலாம் என்று காத்திருக்கிறோம்.

பெயரினைத் தெரிவு செய்ய உதவிய இணையதளம் நம் விடுதலைப் புலிகளின் " நிதித்துறை.காம்" .

குறிப்பு:-
இதற்கு முன்னையப் பதிவிற்கு பின்னூட்டமாக ஏராளமான பெயர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பிய உறவினர்கள் அனைவருக்கும் நன்றி.

Oct 1, 2009

தேவதையைக் காணுங்கள்

வணக்கம் வலைத் தோ(ழி)ழர்களே!

நேற்றுதான் ஊரிலிருந்துத் திரும்பி வந்தேன். நீங்கள் எல்லோரும் நலம்தானே?

நான் விடுப்பில் சென்றதால் என்னைப்பற்றி என்னென்ன கற்பனைச் செய்து வைத்திருந்தீர்கள் ? உண்மையாய்ச் சொல்லுங்கள் ! பரிசாக ஒரு முத்தம் கிடைக்கும் , எங்கள் தேவதையிடமிருந்து !

ஊருக்குச் சென்றதன் மர்மத்தை அவிழ்க்கும் நேரமிது.






எங்கள் குல தேவதையை வரவேற்கத்தான் தாயகம் சென்றேன் .
மற்றாக , தேவதைக் காத்திருந்தாள் என்னை வரவேற்க! (அவசரக்காரி)




வரதட்சணையை எதிர்க்கும் எங்களுக்குக் இறைவன் கொடுத்த 'இறைதட்சணை" இவள்.






அப்பாவை வரவேற்ற நிம்மதியில் ஆழ்ந்து உறங்குகிறாள்.





விடுப்பு முடிந்து,பிறந்த பதினெட்டாம் நாளே பிரிந்துச் செல்லும் துர்பாக்கியத் தந்தையைப் பார்த்து பொக்கை வாய்ப் புன்னகையைப் பரிசாகத் தந்து வழியனுப்பி வைத்தாள்.


இப்படியொரு இனிப்புச் செய்தியை யாரும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டீர்கள் ! நான் சொல்வது சரிதானே?



சரி . பெயர் சூட்ட வேண்டும் . சின்னதாக , அழகாக , அம்சமாக உங்களுக்குப் பிடித்த தமிழ்ப் பெயர்களைக் கூறுங்கள். ஒரேயொரு நிபந்தனை மட்டும்.

தொடக்க எழுத்து , "ச " அல்லது "சா " ஆங்கிலத்தில் எழுதும்பொழுது "CH" எனத் தொடங்கும்படி யோசித்துச் சொல்லுங்கள்.


Sep 14, 2009

விடுப்பு விண்ணப்பம்

விடுநர்,

படத்தில் உள்ளவர்



பெறுநர்,

அன்பு (வலை) நண்பர்கள்.


படத்தில் உள்ள நான்,

15/09/09 - லிருந்து இரண்டு வார விடுப்பில் தாயகம் செல்லவிருப்பதால் , எதிர்வரும் சிறிது நாட்களுக்கு உங்களுடன் தொடர்புக் கொள்ள இயலாமல் போகலாம்.

ஆகவே, ( குசும்பாக ) "குறித்த நபரைக் காணவில்லை" - என விளம்பரம் செய்து
கூடி கும்மியடிக்காதீர்கள் .

திரும்பி வரும் போது உங்கள் எல்லோருக்கும் ஒரு இனிப்பான செய்தி கொண்டு வருகிறேன்.

அதுவரை...........!

Sep 13, 2009

"தா... டீ "



அவலை நினைத்து
உரலை இடித்த
கதைப் போல,
உள்ளத்துள்
என்னை நினைத்து
ஏன்டி
விரலை கடித்த படி ?

.......

இப்படி இருக்குமா?
அப்படி இருக்குமா?
எப்படியிருக்கும்...... ? என
கனவுகளாய் நானும்
எத்தனைக் காலம்
சுமந்துத் திரிவது
பாதி காதலை..!


எதிர்வரும் என்...
'
ம்...
ஊஹும்' ...சரியல்ல
நம்...சந்ததிக்கு
'எது காதல்'

எடுத்துரைக்கும் கடமை
எனக்கிருக்கிறது.

அதற்காகவேனும்
தா...டீ..!
உன்னிடமுள்ள
மீதி காதலை...!

முதலில்
முழுமைப் பெறட்டும்
நம் காதல்.
பின்
செழுமைப் பெறட்டும்
நம் வாழ்வு!

Sep 11, 2009

"ச்சீ..ச்சீ "


ஓர் மதியவேளை.

உணவிற்குப் பின்
வேலைத்தளத்தில்
ஓய்வாய் படுத்திருக்கையில் ...

அருகே சிறு புதரில்
இரு சிட்டுக் குருவிகள்
விட்டு விட்டு
"கீச்... கீச் ..."
"ச்சீ...ச்சீ..." என
சிணுங்கல் ஒலியெழுப்பி
விளையாடிக் கொண்டிருந்தது.

புதரினை
உற்றுப் பார்த்தேன்.
சற்று நேரம்
அங்கே மௌனம்!

கண்டு கொண்டேன்.
காதலும், கூடலும்
அதுகளின்
களி விளையாட்டு.

கண்களை மூடி
காதுகளைத் திறந்து வைத்தேன்.

மீண்டும்
"கீச்...கீச்..."!
நான் உறங்கிவிட்டதாய்
அழைக்கிறது - ஆண்குருவி.

மீண்டும்
"ச்சீ...ச்சீ..."!
என் காதுகள்
உறங்கவில்லையென
எச்சரிக்கிறது - பெண்குருவி.

ஐந்தறிவுக் குருவியே
அருகில் ஆள் இருப்பதை
அறிந்து நாணம் கொள்கிறது.

பொது இடங்களிலும்
பொதுப் போக்குவரத்து
வாகனங்களிலும்
பயண நேரங்களில் ......
பக்கத்து இருக்கைக்
கூத்துக்களைக் கண்டு....

நம்ப முடியவில்லை
என்னால்!
மனிதனுக்கு ஆறறிவாம்...?!

Sep 9, 2009

எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க(ம்மா)ப்பா...!




நண்பர் ஜமால் என்னையத் தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார்.வேலைப்பளு காரணமாக சிறிது நாள் பொறுத்தருளும்படி கேட்டுக் கொண்டேன் . இப்போ தோழி ஹேமா வும் அழைத்திருக்கிறார் . இதுக்கு பிறகும் தாமதித்தால் (ஏற்கனவே தாமதமாகி விட்டது), நண்பர்களின் கோவத்திற்கு ஆளாக நேரிடும்.ஆதலால், "அ" முதல் "ஃ" வரையில் மட்டும் எழுதுகிறேன். "ஆங்கில அகரத்தை" நானும் தவிர்த்து விடுகிறேன். அதற்காக ,"எனக்கு ஆங்கிலம் பிடிக்காது", என்று பொருள் படாது. "ஆங்கிலத்திற்கு என்னைப் பிடிக்காது ", என்று பொருள் கொள்க!


ஆரம்பிக்கறேன்...


ட்டகாசம் பண்ணியது : என்னைப் பற்றி அப்படி யாரும் (குறிப்பா எங்க ஊர்ப் பெண்கள்) சொன்னதாகத் தெரியவில்லை. எதுக்கும் அம்மாவிடம் ஒருமுறை கேட்டு பாத்திடனும்.
ன்புக்குரியவர்கள் : இதையும் படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் எல்லாருமே.!

ள் மாறாட்டம் : கொஞ்ச வருசத்துக்கு முன் எனது படுக்கையறையில் எனக்கு பதில் தலையணை உறங்கிக் கொண்டிருக்க நான் நள்ளிரவுக் காட்சி பார்த்துக் கொண்டி( "பத்மா" திரையரங்கில் இடம் பிடித்தி)ருப்பேன்.இதுக்கு பேரும் ஆள்மாறாட்டம் தானே?
சைக்குரியவர்கள்: அன்னையும், பிதாவும் .(விரைவில் ...பட்டியல் கூடவிருக்கிறது )

ன்பமான செய்தி : என்னையும் ஒருத்தி ஏற்றுக் கொண்டது.
லவசமாய் கிடைப்பது : ஆசை.

யென பல்லிளித்து : பல் மருத்துவரிடம்.....! (ஒரேயொரு முறை, என்னைப் பார்த்து குரங்கும், குரங்கைப் பார்த்து நானும் ..!)
தலில் சிறந்தது : அன்பு.

ணர்வுகள் அழுதது : கேடு கெட்ட இந்த 21 ஆம் நூற்றண்டில் வாழ்கிறோமே என்று...!
லகத்தில் பயப்படுவது : .........யா - விற்கு ! (ஸ்ரேயாவா ...ச்சே ச்சே ... இல்லப்பா. இது வேற ...யா! )


னமாய் நின்றது : கடந்த நவம்பர் 3 - ஆம் நாள் எனது தம்பி திடீர் மரணத்தைத் தழுவிய செய்தியறிந்து.
மை கண்ட கனவு : உரியவளிடம் இன்னும் தெரிவிக்காத (முதல்) காதல் !

ன்ன கற்பனை : உலகை முழுதாய் சுற்றிப் பார்த்து விட வேண்டும்.(அதுக்காக யாரும் உலகப் படத்தை மின்னஞ்சல் அனுப்பி வைக்காதிங்க அப்பு ... கடுப்ப்ப்ப்பாயிருவேன்.)
ப்போதும் உடனிருப்பது : இதுவரை உயிர்!

ழைகள் பற்றி : போதுமான விழிப்புணர்ச்சி ஏற்படுத்தத் தவறி இருக்கிறோம்.
ன் இந்தப் பதிவு : வேறென்ன ? உங்களின் போறாத காலம்.

க்கியம் : நேரம் கிடைக்கும் போது என்னுள்!

ஸ்வர்யத்தில் சிறந்தது : இதையெல்லாம் "பொறுமை" யாப்படிக்கிறீங்களே. அதேதான் !


துங்கி நின்றது : ஹி...ஹி...வெட்கமாய் உள்ளது போங்கோ ..(?!)
ரு ரகசியம் : சொல்றேன். ஆனா, அது மட்டும் ரகசியம்.......!


லையின் கீற்றுக்கள் : நான் குடிசையில் பிறந்தவன்....(இதற்கு மேல் என்னச் சொல்ல ? )
சையில் பிடித்தது : சலசலக்கும் நீரின் ஓசை.


ஒளடதம் : புரியவில்லை .(ஹேமா சொன்ன பிறகு புரிஞ்சிடுச்சி ,எனது மூத்த தங்கை.)
ஒளவை மொழி ஒன்று : ஊக்கமது கைவிடேல் .


: ம்ம்ம்ம்ம்..... எதை மறுப்பது.?
(அ)றிணையில் பிடித்தது : "வடிவேலு"வும் (எங்கவீ ட்டு நன்றியுள்ளவன்), எங்க வீட்டு மாடுகளும் !


யப்பா ....ஒரு வழியா முடிஞ்சது ! இதுக்கே மூச்சுத் தெனருதே...!


பி. கு.:-

திட்டணும்னு நெனைக்கிறவங்களுக்கு மட்டும் ...

வெளிநாட்டிலிருந்தால் : ramheartkannan@gmail.com
உள்ளூரிலிருப்பவர்கள் :- கைத் தொலைப்பேசி வழி !

*********************************************


நீங்கல்லாம் வந்து ,

இழுத்துக்கிட்டு போங்கப்பா...


திரு. கருணாகரசு :அன்புடன் நான் ,

திரு.அன்புடன் புகாரி : அன்புடன் புகாரி.

தோழி.யாழினி : நிலவில் ஒரு தேசம் ,

'கவிதை நதி' திரு.விசயபாரதி: நட்புடன் நான்

Sep 6, 2009

புதுப் பட்டியல்




பிச்சை எடுக்க
திருவோடு ஏந்தி
வருவது தானே வழக்கம்?

கடந்த
கால் நூற்றாண்டுக் காலமாக
பழத் தட்டேந்தி வருகிறார்கள்.

உழைத்து வாழ
வக்கற்றவனுக்கு
மணவாழ்க்கை என்ன
ம்ம்...யிருக்கா?

வாழ்க்கைத் துணையாய்
வருபவளுக்கு
உணவும்,உடையும் - தனது
உழைப்பால் கொடுக்க
முடியாதவனுக்கு
மனைவி என்பவள் எதற்கு?

இரவுக் கழிவு
வெளியேற்ற இயக்கத்திற்கா?

இத்தனைக்காலம் பழகிப்போனதை
இனி மாற்றுவதெப்படி
என வினவும்
மனம் முடமாகிப் போன
மானங்கெட்ட இளைஞனா நீ?

உனக்காகச் சொல்கிறேன்.

இனி
வழக்கமாய் கேட்கும்
வரதட்சணைப் பட்டியலில்
புதிதாய் இதையும்
இணைத்துக் கொள்.

மனைவியாய்
வரவிருப்பவளிடம்
வரதட்சணையாக
இரு பிள்ளைகளும்
பெற்றுக் கொண்டு
வந்து விடச் சொல்.

தாம்பத்தியச் சிரமம்
சிறிதுமின்றி
"நான்தான் அதுகளின்
தகப்பன் ",எனச்
சொல்லித் திரியலாம்
சொரணையின்றி......!

அடுத்தவன் உழைப்பிற்கு
ஆசைப்படுபவன் தானே நீ?

Sep 3, 2009

மனித நேயம்



'வணங்காமண் ' கப்பலில்
கொழும்புத் துறைமுகம்
வரைச் சென்று
இரு மாதங்களாகி

இன்னமும்
வன்னி முகாம்களுக்குச் செல்ல
வழி மறிக்கப்பட்டு

நங்கூரம் பாய்ச்சிய நிலையில்
நாதியற்று கிடக்கிறது.

மனித நேயம்...!!!!!!!


Sep 1, 2009

விழாக்காலம்



அறிவிப்பது என்னவோ
அம்மனுக்குத் திருவிழா
என்று.
அம்மனுக்குத்தான் தெரியும்
விழா யாருக்கென்று!

'என்னை ஒருமுறைப்
பாரேன்' என்று
அம்மனும் கூட

கண் சிமிட்டாமல்
உன் கண்
பார்த்துக் கொண்டிருக்க,

ஒற்றைக் கண்ணை
உருட்டி சிமிட்டி
உதட்டில் சிறிதாய்ப்
புன்னகைத் திரட்டி
கட்டை விரலை
முத்தமிட்டு
கலவரம் மூட்டுகிறாய்
காதல் கள்ளி.

உன்
தோழியிடமாவது
சொல்லி விட்டாயா?
நான்
'தோழனாய்' இருந்து
'காதலன்'
ஆகிவிட்டேன் என்று!

Aug 30, 2009

வழித்துணை



என்
வாழ்வின் உயர்விற்குக்
காரணியாய் நீயிருந்தாய் .
வாழ்வின் பயணத்திற்கும்
வழித்துணையாய் நீ வருவாய்

எனத் திளைத்திருந்த
மணித்துளியில்...
என்ன நிகழ்ந்ததோ ,
நஞ்சு என அறிந்தே
கஞ்சி போல் குடித்து
என்னை ஏங்க விட்டுத்
தூங்கி விட்டாய்
நிரந்தரமாய்....

மண் உண்டுப் போயிருக்கும்
என்னை மறைத்து வைத்த
உன் இதயத்தை.
என்னச்சொல்லி நான் தேற்ற
உன்னைச் சுமக்கும்
என் இதயத்தை ...?

ஆன்மா உன்னைத்
தேடும்போதெல்லாம்
துறவியாய் - உன்
துயிலறை வருகிறேன்.

உன்
மடிமீது அமரும் நினைவில்
நீ படுத்துறங்கும்
மண்மேடு மீதமர்ந்து
மாண்டு மீள்கிறேன் ...

உனைத் தனியாய்த்
தூங்கவிட்டு
திரும்பி
நான் வருகையில்
எனக்குத் துணையாய்
உன் துயர நினைவுகள்...
......... ...........!

இன்று ...நான்
இன்பமாய் வாழ்வதாய்
எல்லோரும் எண்ணுகிறார்கள்
என்றாலும்,

நான்
நடமாடும் கல்லறை
கண்ணே!

Aug 28, 2009

புரியாத புதிர்



கடவுள்
மனித உருவில்
எப்போதாவது ஒருமுறை
காட்சியளிப்பார்
எனச் சொல்லக்
கேட்டிருக்கிறேன்.

எனக்கு மட்டும்
வாரந்தவறாமல்
வெள்ளி தோறும்
காட்சியளிப்பது

ஏனென்றும் புரியவில்லை
எப்படியென்றும் தெரியவில்லை ...!?

Aug 26, 2009

ஏன் ?



உன்னை நினைத்து
நான் அணைத்து
உறங்கும் தலையணை

என்னைப் பிரிந்து
தனித்திருக்க மறுத்து
உன்னைப்போன்றே
அடம்பிடிக்கிறதே
ஏன்?


Aug 24, 2009

மை


' முடிவென்பது
வேறொன்றின் தொடக்கமே '
என்பது நிஜம் தான் போல!

நம்மூர்
கோயில் திருவிழா நிறைவடைந்தது.
நம்மிடையே
காதல் திருவிழா ஆரம்பமானது.

திருவிழா முடிந்து
உறவுகளெல்லாம்
ஊருக்குப் புறப்படும்
பரபரப்புக் காலையில்...

என் அறைக்கு ஓடிவந்து
கண்ணாடிக்கு முன் நின்று
கண்ணுக்கு மையிட்டு
நுனிவிரலால் தொட்டெடுத்து
திருஷ்டியாய் கண்ணாடிக்கும்
வைத்துவிட்டுச் சென்றுவிட்டாய் .


அன்றிலிருந்துதான்.....

அடிக்கடி
கண்ணாடி பார்க்கத் தோனுது.
பார்த்தாலும்
உன் முகத்தை மட்டும் தான் காட்டுது.
பார்த்தபடியே
கண்டதையும் பேசத் தூண்டுது.
பேசினாலும்

பதிலுக்கு கண்ணைச் சிமிட்டுவதும்
உதட்டைச் சுழிப்பதுமாய்
கண்ணாடிக்குள் இருந்தபடியே ...நீ !

உண்'மை' யைச் சொல்லேன்.
அன்று நீ
' மை '
வைத்து போனது
கண்ணாடிக்கா...?
என் கண்ணுக்கா...?


பி. கு:-

ஆக்கம்- சத்ரியன்.
ஊக்கம் - ஹேமா .

Aug 21, 2009

உதிரும் மேகம்




மோதி
உடைந்து
ஒளிர்ந்து
கிளர்ந்து
மேகம்
உதிரத் தொடங்கியதும்,
வருடத்துவங்கி விடுகிறது

உன்
நினைவுகள் ...!



Aug 20, 2009

மழை




பெரும் மழை என்றில்லை
தொடர்த்தூறல் என்றாலும்
உன்னை நினைவூட்டாமல்
பொழிந்து விட்டுப்போக
இன்னும்,
பழகிக் கொள்ளவில்லை
மழை ...!

Aug 17, 2009

மீள்பார்வை




உலகம் சுழலும்
இத்தனை பரபரப்பிலும்
உனக்காக ஒதுக்கி
நான் தனித்திருக்கும்
தருணங்கள்

பின்னோக்கி
நிதானித்துச் சுழலும்
நினைவின் நொடிகளைத்
துரிதப்படுத்த
விரும்பவில்லை
மனம் ...!


Aug 15, 2009

கனவு