Mar 19, 2018

ஆலிங்கனா-09


ஆலிங்கனா-09
*****************
ரியின் வலக்கரை. வெள்ளாடுகள் வளர்ப்பவர்கள் ஆடுகளுக்குத் தழை வெட்டிவெட்டியே மொட்டையாகி நிற்கும் இரட்டைக்கிளை  ஆலமரத்தடியில் பிள்ளையார் நம் முப்பாட்டன்மார் காலத்திருந்தே நிலையாக அமர்ந்திருக்கிறார். அதனருகில் முண்டும் முடிச்சுமாக அடிபருத்து வளர்ந்த தேவஅரளி மரம்.
அதன் எதிரில் இருக்கும் புங்கமரத்தடியில் அமர்ந்தபடி ’எங்களையும் காப்பாத்து புள்ளையாரப்பா’ என வேண்டிக்கொண்டிருக்கையில் பழுத்த இலைக்காம்பு ஒன்று உச்சந்தலையில் விழுந்தது. எடுத்து உள்ளங்கையில் வைத்துப் பார்த்தேன். உன் இடக்கண் புருவம். உன் இன்னொரு புருவமும் அம்மரத்தடியில் கிடைக்குமென நம்பி சுற்றிலும் பார்த்தேன். தெரிந்தது. எடுக்கச்செல்கையில் தேவஅரளிப்பூ ஒன்று காற்றில் புரண்டு வந்தது. எடுத்துக்கொண்டு வந்து முன்பு அமர்ந்திருந்த இடத்தில் வட்டமாக மண்பரப்பைச் சுத்தம் செய்து விட்டு புருவங்களை வைத்தேன். உதிர்ந்திருந்த புங்கங்காய்களை எடுத்து கண்களாக்கினேன். தேவஅரளியை வைத்து உதடுகளாக்கினேன். கீழுதட்டைக் கிள்ள விழைகையில் ’என்னடா?’ என மிரட்டும் தொனியில்  வினவுவதைப்போல் இரண்டு புருவங்களையும் ஏற்றி இறக்கினாய். உன் புருவங்களின் அசைவுக்கேற்ப பூமிபரப்பே உயர்ந்து தாழ்ந்ததைக் கண்டு திகைத்தே போனேன்.

பூமிக்குள் படுத்திருந்தவளைப்போல தரையைப்பெயர்த்து எழ முயல்கிறாய். முடியாமல் போகவே எழுப்பிவிடச்சொல்லி கையை நீட்டுகிறாய். கையைப்பிடித்து இழுக்கிறேன். ஈரமண்ணிலிருந்து பிடுங்குகையில் நீண்டு வரும் மரவள்ளிக் கிழங்கைப்போல் வருகிறாய். தேகமெங்கும் மண். உன்னை நீயே பார்த்துவிட்டு ’ஒரே மண்ணாயிருக்கேன்ல, ஏரியில் குளிச்சிட்டு வரட்டுமா?’ எனக் கேட்கிறாய். ‘சரி’ என்றேன். கால்களில் அணிந்திருந்த கொலுசுகளைக் கழற்றிக்கொடுத்து ‘பத்திரமா வெச்சிக்க. தொலைஞ்சிடுச்சின்னா என் அம்மா அடிப்பா’, எனச்சொல்லி கொடுத்துவிட்டு துணியுடன் நீரில் இறங்குகிறாய்.

நீரில் பாதம், கணுக்கால், கெண்டைக்கால், முழங்கால், தொடை, இடையென உன்னுடலை விழுங்கும் நீர் உயர உயர பாவாடையும் வட்டமாக உயர்ந்து நீரின் மேற்பரப்பில் மிதக்கிறது. உடலை நீர் தீண்டும் சுகத்தில் உன் பிடரியின் மயிர்கள் சிலிர்க்கிறது. இப்பொழுது ஏரியைப் பார்க்கிறேன். நிறைந்திருக்கும் நீர் முழுதும் உன் பாவாடையாகிப் பரவுகிறது.

திடீரென நீர்க்கோழியைப்போல் மூழ்கினாய். அலையும் கூந்தலை இழுத்துக்கொண்டு நீரும் சுழிந்து உன்னுடன் நீருக்குள் மூழ்கியது.  சிறிது தூரத்தைக் கடந்து நீர் மலர அதிலிருந்து நீயும் மலர்கிறாய். ஏரியில் சூரியகாந்தியின் நீராடல். சூரியகாந்தியின் தேகத்தில் கிளைத்திருக்கும் மலரா வரம்பெற்ற கமலங்கள் இரண்டு. வெயில் முகத்தில்பட்டு வழிந்து உடலை விட்டிறங்க மனமினல்லை என்றாலும் வேறுவழியின்றி வழிந்து நீரில் விழுகிறது. தென்கரையிலிருக்கும் பனைமரத்தில் கூடுகட்டி முட்டையிட்டு அடைகாக்கும் காகம் ஒன்று கண்களைச் சாய்த்துச்சாய்த்து உன்னைப் பார்க்கிறது. நீயெழுப்பிய அலைகள் தவழ்ந்து வந்து கரையைத் தொட்டுயர நீரருகில் ஓய்ந்திருந்த உடும்புகள் இரண்டும் அருகிருந்த உன்னிச்செடிப் புதருக்கு இடம்பெயர்கின்றன.

நூறாண்டுகளாக பிரிந்திருந்த மீன் ஒன்று மீண்டும் நீருடன் கலந்ததைப்போல சுற்றிலும் நடக்கும் எதையும் கண்டுகொள்ளாமல் நீராடி களிக்கிறாய் நீ. காதுகளைப் பிடித்து முயலைத் தூக்குவதைப்போல நீ தந்துபோன கால்கொலுசுகளை என் முகத்திற்கு நேராக உயர்த்திப் பிடித்து முத்தமிட்ட நொடியில் உன்னுடல் சிலிர்க்க ஏரியின் நடுவிலிருந்து என்னைப் பார்க்கிறாய். நெடுநேரமாக நீரில் ஊறியதால் சிவந்திருக்கும் கண்களால் சிரித்துவிட்டு, கரையேறும் உத்தேசம் இல்லாதவளாக நீரில் கரைந்துகொண்டிருக்கிறாய். பொழுதுபோக்கத் தெரியாமல் நான் தடுமாறிய கணத்தில் உன் கால்களுக்குப் பூங்கொலுசு செய்யலாமென உதிக்கவும் சாணிப்பூட்டன்செடிகளின் பூக்களைக் காம்புடன் கிள்ளிப் பறிப்பதை இரைத்தேடி போயிருக்கும் தாயின் வருகைக்காகக் காத்திருக்கும் கிளிக்குஞ்சுகள் இரண்டு ஆலமரப் பொந்திலிருந்து ஒன்று மாற்றி ஒன்றென எட்டியெட்டி பார்க்கின்றன. குஞ்சம் வைத்த சடைப்பின்னலைப் போல துவங்கி  ஒருஜோடி கொலுசுகள் செய்து வைத்தேன். உதிர்ந்திருந்த புங்கம்பூக்களைச் சேகரித்து பனையோலையில் நார் உரித்து காரைமுள்ளால் கோத்து கழுத்துக்கு மணி செய்து  முடிக்கும்  தருவாயில் கரையேறி நீர் சொட்டச்சொட்ட வந்து நிற்கிறாய். தரைப்புரளக் கட்டியிருந்த பாவாடையைக் கொஞ்சமே உயர்த்திச் சேர்த்துப்பிடித்து  கால்களை நீட்டி எதிரில் அமர்கிறாய். பூங்குலுசுகளைப் பூட்டுகிறேன்.  பக்கவாட்டில் சாய்த்த கழுத்தில் புங்கம்பூ மணியைச் சூட்டுகிறேன். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மலைவாசப் பெண்ணாக ஜொலிக்கிறாய். உன் நாணத்தில் உடையின் ஈரம் உலர்ந்தே விட்டது.

நீராடிய களைப்பில் கண்கள் செருக ‘கொஞ்ச நேரம் தூங்கட்டுமா’ எனக்கேட்டு பெயர்ந்தெழுந்த இடத்தில் படுக்கிறாய். முத்தம் வேண்டுமென முணுமுணுத்து கேட்கிறது பூங்கொலுசு பாதம். மெல்லமெல்ல மண்ணுக்குள் இறங்குகிறது உன்னுடல். பதைப்பதைத்து உன்னை அள்ளியெடுக்க முயல்கிறேன். எஞ்சியது இலைக்காம்பு புருவங்களும், புங்கங்காய் கண்களும், தேவஅரளி உதடுகளும் தான். ஆற்றாத துயரத்துடன் புங்கங்காயை எடுத்துச் சென்று வீட்டின் மண்வாசலில் நடுகிறேன். முளைத்து வளர்ந்து உன் கண்களைத்தான் காய்களாய் காய்க்கும். காலமெல்லாம் உன் நிழலில் படுத்து உன் கண்களைப் பார்த்தபடியே வாழ்ந்து மடிவேன் ஆலிங்கனா.
*

Feb 20, 2018

ஆலிங்கனா-08


மாட்டுக்குப் புல் பிடுங்கிவர அனுப்பியிருந்தாள், பாட்டி. வெயிலேறுவதற்குள் பிடுங்கிக்கொண்டு கொல்லையிருந்து வெளியேறிவிட வேண்டும். வெயில் நேரத்தில் சிக்கிக்கொண்டால் சொணை பிடுங்கித் தின்றுவிடும். புளியம்புற்களை மாடுகள் மிகவும் விரும்பி திண்ணும். தொடர்ந்து கொடுத்து வந்தால் எலும்பும் தோலுமாக இருக்கும் மாடுகளும் கொழுக்மொழுக்கென மினுமினுப்புக் கூடிவிடும். பால்கறக்கும் மாடுகள் என்றால் கூடுதலாக ஒருசொம்பளவுக்குப் பால் சேர்த்துச் சுரக்கும்.


புரட்டாசி மாதத் துவக்கம். சாமை புடைதள்ளும் பருவம். முதன்முறை தாய்மையடைந்த பெண்ணின் மூன்றாம் மாதத்து மேடுதட்டிய அடிவயிறும், புதுவித வனப்பூறிய உடலையும்போல சாமைக்கொல்லை தளதளப்புடன் நின்றநிலையில், வீசும் காற்றுக்கு அசைந்தாடியபடி இருக்கும். அதிகாலைவேளையின் பனித்திரள் பூத்த பயிர்வாசமும், வசீகர இளம்பச்சையும் காண்பவர்களை வசமிழக்கச் செய்யும். வரப்பின்வழியே நடந்துச்சென்றாலும் கீழமர்ந்து மாரளவு என்பதாகக் கைகளை விரித்து அப்படியே சேர்த்து ஆரத்தழுவி ஆனந்தமடைய விரும்பும் மனத்தைக் கட்டுப்படுத்துவது இயலாத காரியம். குளிருக்குப் போர்த்தியிருந்த காடாத்துணியை விலக்கிச் சுருட்டி வரப்பிலிருந்த துறிஞ்சி மரத்தின் சிறுகிளையில் போட்டுவிட்டு வெற்றுடம்புடன் பனிக்குளத்தில் இறங்குவதைப்போல பயிருக்குள் இறங்கினேன். எட்டநின்று பார்த்தால் சாமைப்பயிர் எது, புல் எதுவென்றே பிரித்தறிய முடியாதபடி சாமைக்கு சக்களத்தியாக ஈடுகொடுத்து வளர்ந்திருக்கிறது புளியம்புற்கள். வெறும்புற்களை மட்டும் போட்டல் மாடுகளுக்கு திகட்டிவிடும். கால்களால் மிதித்து சாணம், கோமியத்துடன் கலந்து வீணடித்துவிடும் என்பதால் புளியம்புற்களுடன், எருதுக்கொம்பு புல், கொட்டைத்தாதரை, குட்டிக்கொடி, பண்ணைக்கீரைச்செடி என என்னால் சுமக்கக்கூடிய அளவுக்கு கலந்துக்கட்டிப் பிடுங்கி அரிஅரியாகச் சேகரித்தேன். நீண்டு பரவிப் படர்ந்திருந்த சவுரிக்கொடியைப் பிடுங்கி கயிறாக்கி புற்களைத் திண்டாகக் கட்டினேன். இளங்காலைச் சூரியனின் கதிர்வரவால் கூதற்புகை, புற்தோகைகளில் துளிர்த்திருந்த பனிநீர் முத்துகளும் மறையத் துவங்கின. கிளையில் தொங்கிக்கிடந்த துணியின்மேல் கருப்பு எறும்புகள் சில நடமாடிக்கொண்டிருந்தன. காடாவை எடுத்து உதறும்போதுதான் நேற்று நீ கேட்டிருந்தது ஞாபகத்திற்கு வந்தது. புல்திண்டை வீடு சேர்த்துவிட்டு மாடுகளை மேய்க்க வரும்போது பார்த்துக்கொள்ளலாம் எனப் புறப்பட்டேன்.

மாட்டு கொத்திலிருந்த சாணியை அள்ளிக் கூட்டி குப்பையில் கொட்டிவிட்டு குட்டைக்குச் சென்று குளியலை முடித்துக்கொண்டு வீடு வந்ததும் பாட்டி பழைய சாமைச்சோறு, தயிருடன் உரித்த சிறுவெங்காயமும் கொடுத்தாள். சாப்பிட்டபின், கன்றுகளைக் கொட்டகையில் கட்டி சிறிது புற்களைப் போட்டேன். மாடுகள் இரண்டையும் பிடித்துக்கொண்டு கிளம்பினேன். மேய்வதற்குத் தோதான இடத்தில் மாடுகளைக் கட்டிவிட்டு துறிஞ்சி மரத்தடியில் அமர்ந்தேன். மழைவெயில் உடம்பில் சுளீரென உறைத்தது. சிலிசிலுக்கும் காற்று வெயிலின் சூட்டைச் சிதறடிக்கிறது.

அமர்வதற்கு வாகான இடம்தேடி பொன்வண்டு ஒன்று மரங்களுக்கு மேல்பரப்பில் பறப்பதைப்போல் தளிர்பச்சை ரவிக்கை, அதேவண்ண பாவாடை, ரத்தச்சிவப்பு நிற தாவணி உடுத்தி, பச்சைப்பசேலென விரிந்திருக்கும் சாமைக்கொல்லையில் மிதந்து வருகிறாய். கிளைத்துச் செழிப்பாக வளர்ந்திருக்கும் பண்ணைக்கீரையின் உச்சிக்காம்பின் முனையில் இரு இலைகளின் கதுப்பில் பிதுங்கியிருக்கும் வெண்ணிறப் பூக்கள் உன் பாவாடையில் பூத்திருப்பதைப் போன்று தோற்றம்காட்டி என் கண்களை ஏமாற்றுகிறது. என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறாய். மேய்ந்துக்கொண்டிருந்த மாடுகள் தலையை உயர்த்தி காதுகளைச் சிலிர்த்து முதலில் உன்னைப் பார்த்தன. தொடர்ந்து என்னையும் பார்த்தன. ஒன்றும் ஆபத்தில்லை என்பதைப்போல் கையால் சைகை செய்தேன். புரிந்துக்கொண்டு மேய்வதைத் தொடர்ந்தன.

எதிரில் நிற்கிறாய். தாயின் வயிற்றிலிருந்து பிறப்பு வாசல் கடந்ததும் எனைச்சூழ்ந்த பேரொளியொன்று இத்தனை ஆண்டுகளுக்குப்பின் இன்றென்னை மீண்டும் சூழ்ந்தது, ஆலிங்கனா. உண்மையில் சூரியனை மங்கலாக்கிய பேரொளி நீ. உன்னால் நான் உணரும் மகிழ்ச்சியை என்ன பேர்ச்சொல்லி விளக்குவேன் நான்!? மலர்ந்த முகத்தில் மேலுதட்டுப் பூனைமயிர்க்கால்களில் குட்டிக்குட்டியாக வியர்வை அரும்புகள் குறும்பாக முறைக்கின்றன. ஒற்றி எடுத்துவிட என்னுதடுகள் துடியாய் துடிக்கின்றன. ஆண்பிள்ளைக்குப் பொறுமைதான் அழகு; பொறுமைசாலியைப் போன்று நடிக்கவாவது செய்யென என்னை நானே எச்சரித்துக்கொள்கிறேன். எல்லை மீறிவிடுமோ என்ற அச்சத்தில் என் உள்ளங்கைகள் வியர்க்கிறது. கைகளைப் புல்பரப்பில் தேய்க்கிறேன். உடல் நரம்புகள் உண்டாக்கும் அதிர்வுகளை உனக்குத் தெரியாமல் மறைப்பதற்கு பெரும்பாடு படவேண்டியதாக இருக்கிறது. செம்போத்து பறவை இணைகள் ஆவிலி மரக்கிளையின்மேல் அமர்ந்து ஒன்று விலக மற்றொன்று நெருங்க, விலக நெருங்க என காதல் சரசத்தில் குரலெழுப்பி மகிழ்வது நம்மிருவரின் கவனத்தையும் கவர்ந்தன.

உன் முகத்தின் வியர்வையைக் காற்று உறிஞ்சிக்கொண்டது. கையில் காலி தீப்பெட்டிகள் இரண்டும், நூற்கண்டும் வைத்திருந்தாய். ’பூ கட்ட இங்க எதுக்கு வந்த?’ என்றேன். முகத்திலிருந்த மலர்ச்சி மெல்லக் குழைந்தது. கோபமூட்டி உன்னைக் குழையச்செய்து மீட்டெடுப்பதில்தானே பேரானந்தம் எனக்கு. தீப்பெட்டிகளை ஒரு திசையிலும் நூற்கண்டை என் முகத்திலும் வீசினாய். காரிமாடு மீண்டும் என்னைப் பார்த்தது. மீண்டும் சைகையால் அமர்த்தினேன்.

அருகிலிருந்த கல் ஒன்றைத் தலைக்குமேல் தூக்கிப்பிடித்தபடி ‘அடேய் கொரங்கு என்னை கொலைக்காரி ஆக்காத’ என்றாய். சிரித்தபடி, ‘இந்த வயசுலயும் பொன்வண்டு புடிச்சி அதன் கழுத்தில நூல்கட்டி பறக்கவிட்டு ரசிப்பிபாயா?’ எனக்கேட்டதுக்கு ‘நான் என்னவோ செய்வேன், உன்னால பிடிச்சித்தர முடியுமா? முடியாதா? என முகத்தைச் சுண்டவைத்தாய். குழந்தைத்தனமான இவ்வகை குணத்தாலும் செயலாலும்தான் என்னை என்னிடமிருந்து முழுதுமாக ஈர்த்துகொண்டு வெற்றுக்கூடாக இங்கே உலவ விட்டிருக்கிறாய் பிசாசே- மனத்துக்குள் சொல்லிக்கொண்டு,’ முடியாது போடி. என்ன பண்ணுவ? கொல்லுவியா? கொன்னுக்க. என்னைக்கொன்னுட்டு பொன்வண்டு புடிச்சி விளையாடிட்டிரு’, எனச் சொல்லிக் கொண்டிருக்கையில் அமர்ந்திருந்த மரத்தின் உச்சியிலிருந்து கொம்பேறிமூக்கன் பாம்பொன்று குதித்தோடியது. பயமும் பதற்றமும் அடைந்த நீ கையிலிருந்த கல்லைக் கீழே போட்டுவிட்டு அருகில் வந்து நின்றாய். இருவருக்குமிடையில் இருந்த மூன்றடி இடைவெளியை மூக்கும் மூக்கும் உரசும் நெருக்கத்தில் கொண்டுவந்து நிறுத்தியது அந்தக் கொம்பேறிமூக்கன்.

அந்நேரம் பார்த்து அருகில் எங்கோ பொன்வண்டு பறக்கும் சத்தம் கேட்கவும் முட்டைக்கண்களைச் சுழலவிட்டுத் தேடுகிறாய். விலகிப்போய் தேடவிடாமல் உன்னை என்னிடத்திலேயே தேக்கிவிட்டது பாம்பு. பொன்வண்டின் சத்தம் தேய்வதும் வளர்வதும் உன்னை என்னவோ செய்கிறது. நான் எழுந்து போவதைக்கண்டு புன்னகைத்த உன்னுதட்டுச் சுளைகள், மாடுகளை நோக்கிப்போவதை அறிந்ததும் களையிழந்தன. மாடுகள் போட்டிருந்த சாணத்தை அள்ளி கொல்லையில் வீசிவிட்டு கைகளை சீத்தா இலையில் துடைத்தேன். மாடுகளைப் பிடித்து வேறிடத்தில் மாற்றி கட்டிவிட்டு வந்து அதே இடத்தில் அமர்ந்தேன். என்மீதான எரிச்சல் உச்சிக்குப் பயணிப்பதை உன் பார்வையே உணர்த்தியது. சற்றுத் தொலைவில் இருக்கும் கொன்றை மரத்திற்குமேல் ஒரு பொன்வண்டு பறப்பதைக் கண்டு பதைப்பதைத்து அதையும் என்னையும் மாறிமாறி பார்க்கிறாய். ஓய்ந்து கொன்றை இலையில் அமர்ந்து தலையை ஆட்டியாட்டி இலையைத் தின்கிறது. மினுங்கும் அதன் கரிய தலையும் உடலும், சிவப்பு இறக்கைகளும் உன்னை நிலைக்கொள்ள விடாமல் செய்கிறது.

இயலாமையும், ஏமாற்றமும் தோய்ந்த உன் கண்களைப் பார்க்கவே பிடிக்கவில்லை. விட்டால் சில நொடிகளில் அழுதுவிடுவாய். உன் கோபங்களை ரசிக்கும் எனக்கு உன் அழுகையைத் தாங்கிக்கொள்ள முடியாது, ஆலிங்கனா. சுருட்டி வைத்திருந்த என் சட்டையை விரித்து மூன்று தீப்பெட்டிகளை நீட்டினேன். ஒன்றில் வெட்டைத்தாதரை இலையை வைத்து தலை, உடல், இறக்கை என முழுதும் பச்சை வண்ணம் கொண்ட பொன்வண்டு, அடுத்ததில் துறிஞ்சி இலைகளை வைத்து தலையும் உடலும் பச்சை, இறக்கை மட்டும் சிவப்பு வண்ணம் கொண்ட பொன்வண்டு, மூன்றாவதில் கொன்றை இலை வைத்து தலையும், உடலும் கருப்பு, இறக்கை மட்டும் சிவப்பு வண்ணம் கொண்ட பொன்வண்டு – என மூன்று வகையானதைக் கொடுத்தேன். அழுதே விட்டாய். அது மகிழ்ச்சிக் கண்ணீர். இவ்வுலகில் நான் இறக்கும் வரையிலும் உன் கண்களில் இருந்து மகிழ்ச்சி மட்டும்தான் வழியவேண்டும்.
*

May 7, 2015

ஆலிங்கனா-07


ஆலிங்கனா-07


சித்திரையின் முதல்நாளில் கொட்டோ கொட்டென்று கோடைமழைக் கொட்டி இன்றோடு எட்டாண்டுகள் ஆகிவிட்டது. மழைக்குப்பின்னான நாளில் நிலம் சுற்றிப் பார்ப்பது தனிசுகம். இதோ கிளம்பி விட்டேன். வானம் பார்த்த பூமியில் தூசு படிந்து மழுங்கியிருந்த சின்னஞ்சிறு சரளைக் கற்களெல்லாம் மழைநீரால் கூர் தீட்டிய ஊசிகளாகக் குறுகுறுக்கிறது பாதத்துள். குகையிலிருந்து எட்டிப்பார்க்கும் புலிக்குட்டிகளைப் போல தரைக்குள்ளிருந்து தலைநீட்டி வெளிவருகிறது அருகம்புல் தளிர்கள். தரையில் அமர்ந்து நுனிப்புற்களைக் கவனிக்கிறேன். நினைவு பின்னோக்கி உன்னிடம் திரும்புகிறது.

து போன்றதொரு நாளில் நிலத்தைச்சுற்றி நடைப்போட்டுக் கொண்டிருக்கையில் தான் நெருஞ்சி முள்ளொன்று குத்தி விட்டது உன் காலில். முள்குத்திய காலை சற்றே உயர்த்தி கொக்கைப்போல் நின்றாய் நீ. காலைத் தரையில் தேய்த்தால் முள் தானாய் விழுந்து விடுமெனச் சொல்லியும் நீ அதைச் செய்யவே இல்லை. பாவம் பார்த்துக் கீழமர்ந்து முள்ளைப் பிடுங்க உன் பாதத்தை ஒரு கையில் தாங்குகையில், உன் வலக்கையை உயர்த்தி ஆசிவழங்குவதைப் போன்ற பாவனையில் நிற்கிறாய். என்ன திமிர் உனக்கு? போனால் போகட்டுமென்று பிடுங்கிய முள்ளைத் தூர எறிந்து விட்டு எச்சில் தொட்டு முள்குத்திய இடத்தில் தடவி தேய்த்து விட்டேன். தாங்கித்தாங்கி நடந்து என்னைப் பின்தொடர்ந்தாய்.

சுட்டெரிக்கும் வெயிலில் காய்ந்துக் கருகி விடும் புற்கள், மழைப்பெய்த ஓரிரு நாட்களில் முளைவிடுகிறதே எப்படி என்றொரு கேள்வியை எழுப்பினாய். உன்னிடம் பிடிக்காதவைகளில் அடிக்கடி கேள்வி கேட்டு துளைப்பதும் ஒன்று எனச்சொல்லி விட்டு,  “தனக்குள்ளிருக்கும் புற்களின் வேரினைச் சுற்றிலும் , மண்ணே ஒருவகை பூஞ்சையால் கூடுகட்டி காக்கும். பின் ஈரம் பட்டதும் வேரை மெல்ல விழிப்பூட்டி தளிரை வெளியனுப்பும்என்று, அனைத்தையும் அறிந்த அதிமேதாவி போல் ஒரு பதிலைச் சொன்னேன். அப்படியா! என ஆச்சரியங்காட்டி நம்பினாய். என்னுள்ளிருக்கும் உன் நினைவின் வேர்களுக்கும் இப்பூமியைப் போல்தான்  என் நெஞ்சமும் கூடுகட்டிக் காத்து வருவது, நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை.

நிலத்தின் நடுவில் வகிடெடுத்தபடி இருக்கும் ஒத்தையடிப்பாதையில் நீண்டு பயணிக்கிறது என் கால்கள். மென்மையாய் ஜாதிமல்லியின் வாசம் நெருங்கியது என்னை. சுற்றிலும் பார்த்தேன். ஒருவரும் இல்லை. சற்று நெருக்கத்தில் ஒரு குறும்புதர்ச்செடி தரையோடு தவழ்ந்திருப்பதைக் கண்டேன். அருகே சென்று பார்த்தேன். அப் புதர்ச்செடியில் வெள்ளைநிறத்தில் ஒரு பூ மலர்ந்திருந்தது. சட்டென்று நினைவில் நீ முளைத்துப் படர்கிறாய். விரித்த கூந்தலில் ஒரேயொரு பூவை சூடிக்கொண்டு வெற்றுத்தரையில் நீ சுருங்கிப் படுத்திருப்பதைப் போன்று தோற்றம் பெறுகிறது அச்செடி. நீரிலிருந்து உயிரினம் தோன்றியதாக அறிவியல் சொல்கிறதுஎன்னவொரு அபத்தமான கூற்று அதுஇங்கிருக்கும் அனைத்துமே உன்னிலிருந்து பிறந்தவைமீண்டும் மீண்டும் சொல்வேன்உன் சாயல் இல்லாத ஒன்றுமே இவ்வுலகில் இல்லை. இதோ, அச்செடியில் பூத்திருந்த பூவைப் பறித்தெடுக்காமல் முழங்காலிட்டு குனிந்து முகர்ந்தேன். ஜாதிமல்லியின் அசல் வாசம். அசந்து போய் விட்டேன். ஏனெனில், அது உன்வாசம்.

தாமரையை ராஜமலர் என்பார்கள். இல்லவே இல்லை . என்னைப் பொறுத்தவரை ஜாதிமல்லி தான் ராஜமலர். எனக்கு மிகமிகப் பிடித்த பூ அதுதான். அதன் முகை ன் நீண்ட கூர்மூக்கை நினைவுப் படுத்தும்.  அதன் வாசம் உன்னை முழுதாய்க் கொண்டு வந்து என்முன் நிறுத்தும். என் உடலை இயக்கும் உயிர்க்காற்றையெல்லாம் வெளியே கடத்தி விட்டு ஜாதிமல்லியின் வாசத்தை மட்டுமே நுரையீரல் முழுதும் நிறைத்துக் கொள்வேன். அது உள்ளிருந்து அங்கமெங்கும் ஊறி மூளையின் நினைவடுக்குகளில் போய் பதுங்கிக்கொள்ளும். ஜாதிமல்லியின் வாசத்தை சுவாசிக்க வாய்க்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம், நுகரும் உணர்வை ஐம்புலன்களுக்கும் அளிக்காமல் ஏன் குறைவைத்தான்  இறைவன் என்று கோபம் பொங்கும்.

ன்னையொத்த அச்செடியருகில் சற்றுநேரம் நானும் ஒடுங்கிப் படுத்துக்கொண்டேன். இங்கே தான் நீ குடிகொண்டிருப்பதாய் நம்புகிறது என் மனம். அம்மலரிலிருந்து  பரவும் வாசம் நம்மிருவரையும் உயரத்தில் மிதக்கச் செய்து எங்கெங்கோ பயணித்து கடத்திக்கொண்டு போய் ஓர் அடர்வனத்தின் நடுவில் இறக்கிவிட்டு விட்டது.

வ்வனம் கொஞ்சம் பயமுறுத்தினாலும் குதுகலமாகத்தான் இருக்கிறது. இங்கே கொடிய விலங்குகள் நம்மை அச்சுறுத்தலாம். சாதுவான விலங்கினங்கள் நம்மோடு சிநேகம் கொள்ளலாம். எந்நேரத்திலும் எதுவும் நடக்கலாம். ஆனாலும், இது தான் நம் உலகம். இனிமேல் இங்குதான் நாம் ஜீவிக்கப்போகிறோம்.


அதோ அந்தப் பாறையில் இருக்கும் நீள் சுனையில் நீராடு
அருகே செடிமீது படர்ந்திருக்கும்
கொடிமுல்லை மலர்கள் கொய்துத் தருகிறேன்
கொஞ்சம் பூக்களால் உன்னைத் துவட்டிக்கொள்
மிச்சப் பூக்களை நீ உடுத்திக்கொள்
ஆதியுலகில் நுழையலாம்
ஆதாம் ஏவாள் ஆகலாம்
குகையொன்றில் குடிபுகலாம்
எரிநட்சத்திரம் ஒன்றை வேட்டையாடி வீழ்த்தி
வீட்டு வாசலில் ஒளியேற்றலாம்
காய் கனி தேன் கிழங்கு என தேடித்தேடி
வகைவகையாய் உண்ணலாம்
சிக்கிமுக்கிக்கல் உரசி தீ மூட்டலாம்
கட்டாந்தரையைக் கட்டிலாக்கலாம்
வில் நீ
அம்பு நான்
வினைபுரியலாம்
வினையின் விளைவால் விளையும்
நம் மேல்மூச்சு கீழ்மூச்சு இவ்வனமெங்கும் அலைந்து
வண்டு துளைத்த வன்மூங்கிலில் நுழைந்து
புல்லாங்குழல் இசையாக வெளியேறட்டும்
வனமே இசைந்தாடட்டும்
இம் மன்மத ஆண்டு மதங்கொள்ளட்டும்.

எழு ஆலிங்கனா.

*

இளவேனில்


வெண்பா - வாழ்த்து
*******************************

சித்திரைத் திங்களிலே செங்கமலம் நீபிறந்தாய்
கத்திரி வெம்மைத்தீக் கங்/கொத்/த வெப்பத்தால்
நித்திலமே கார்வண்ணம் நீயுற்றாய் என்றாலும்
பித்தேற்றும் பேரெழில் பூ.

பெட்டைக் குழந்தையென பெண்தாதி சொல்லிடவும்
மட்டற்ற பேரின்பம் மண்ணுலகைச் சூழ்ந்ததம்மா
பட்டுப் பதுமையே பைந்தமிழில் பேருனக்கு
இட்டோம் ‘இளவேனில்’ என்று.


ஞால மொழிகளில் நான்கேனும் கற்றுக்கொள்
காலத்தின் போக்கைக் கணிக்கும் திறமும்கொள்
ஆலம்போல் நீண்டநல் ஆயுள் நிலைத்துநீ

வாழ வழங்குகிறேன் வாழ்த்து.

*

06/05/2015- எங்கள் இளையமகள் இளவேனிலுக்கு மூன்றாம் பிறந்த நாள்.


Apr 11, 2015

ஊமத்தம்பூ உருவினள்


ருமைகள் மேயும் வனாந்தரத்தில்
நெருஞ்சிப்பூக்களைத் தேடி நடக்கிறேன்
நிற்க சொல்லி நிர்பந்திக்கிறது
முனை அலர்ந்த வெண்ஊமத்தை மொக்கு

முன்னாள் ஒன்றில்
நெற்றி உதிர்த்த திருநீறு
நிலைக்கொண்டிருந்தது என் நுனிமூக்கில்
ஒற்றி துடைத்திட உன் உள்ளங்கை பூத்த
வெண்பூ கைக்குட்டை விரிகிறது மனக்கண்ணில் 
நின்று நினைவில் மூழ்கும் நிலையில் இல்லை நான்
தொலைதூரம் அலைய வேண்டியதிருக்கும்
தொடர்ந்தேன் தேடலை

ந்திப் பொழுதாகியும் நெருஞ்சியைச் சந்திக்காமலே
திரும்புவது  கொஞ்சம் துயரம் தான் எனக்கு
காம்பின் பிடி தளர்த்தித்
தலைக்கீழாகக் கவிழ்ந்து வழிமறிக்கிறது
காலையில் எனை தடுத்த ஊமத்தம்பூ
பாவாடையை வட்டமாக பரப்பி
பசும்புற்களின் மீதமர்ந்த நீயாக உருமாறுகிறது
ஊமத்தையும், அதன் உள்ளிருந்து நீளும் மகரந்தக்குழலும்

மீளும் வழியடைத்து வேலியிட்டு விட்டாய் நீ
இனி
புதைக்குழியில் சிக்கி
கால் மாற்றி கால் பலம் செலுத்தி
மேலேற முயலும் களிறு போல நானும்
ஓயாது உள்ளிழுக்கும் சகதி போல உன் நினைவும

*

Jan 14, 2015

அன்பின் நிறம்

நம்
காதலுக்குப்பின் தான்
என் மேனியில்
கரியநிறம் கூடியவண்ணம் இருக்கிறது

பறிமாறப்படாத
உனக்கான அன்பு
உள் நிரம்பி
முற்றி
நஞ்சாவதின்
முதல் அறிகுறி அது

*