Oct 11, 2013

இரை

குஞ்சுகளுக்கு
இரையூட்டி விட்டு
விருட்டென பறக்கும்
தூக்கணாங்குருவி போல்
அஞ்சல்பெட்டிக்குக் கடிதத்தையும்
என் நெஞ்சத்துக்குக் காதலையும்
ஊட்டிவிட்டு விரைந்து விட்டாய்
அடுத்தடுத்த நாளும்
அங்கேயே
நிறுத்தி வைத்திருக்கிறேன் என்னை.

*

Aug 30, 2013

ஆலிங்கனா-05


       லம் விழுது போல நிலவிலிருந்து ஒரு ஒளிக்கயிறு என் முன்னே இறங்கியது. ஆவலில் அதைத் தொட்டதும் என் கைகளை  அதிலிருந்து விலக்கவே முடியவில்லை. நிலவிலிருந்து யாரோ அக்கயிற்றை மேல்நோக்கி இழுத்தார்கள். உயரே போகப்போக உயிரே போய்விடும் போல் திகிலலடைந்து மனம். பயத்தில் நினைவிழந்துவிட்டேன். நினைவு திரும்பி கண்விழித்தபோது எதோவொரு புது இடத்தின் விளிம்பில்  விழுந்துக்கிடந்தேன். இப்போது அங்கே கயிறு எதுவும் இல்லை. படுத்தபடியே சுற்றிலும் பார்த்தேன்.ஒருவரையும் காணவில்லை. இரு கைகளாலும் விளிம்பினை உறுதியாகப் பிடித்துக் கொண்டு எட்டிப் பார்த்தேன். இதுவரையிலும் காணாத என்னென்னவெல்லாமோ தெரிந்தது. அவற்றின் பெயர் தெரியாததால் அவை பற்றி எதுவும் இங்கே விவரிக்க முடியாது என்னால்.  படுத்திருந்த தரை பளிங்கினால் ஆனது போல் இருக்கிறது. எழுந்து நிற்க முயன்றேன். கால்கள் நழுவியது. இப்போது புரிந்து விட்டது எனக்கு, நானிருக்கும் இடம் நிலா

இத்தனை ஆண்டுகளாய் நான் நினைத்திருந்ததைப் போல நிலா தட்டையாய் இல்லை. இங்கே வந்த பின்புதான் தெரிகிறது, ஒளியுமிழும் ஒரு வட்ட பரப்பு இது.  வட்டத்தின் நடுவில் குழிந்து குளம் போன்றதொரு  பள்ளத்தில் பால் நிரம்பியிருக்கிறது. நிலவின் விளிம்பையொட்டியே நடந்து பூமியை எட்டியெட்டிப் பார்த்து பரவசத்தில் இருந்தேன். நிலா மெல்ல குலுங்கியது. மீண்டும் பயம்.  ஓரிடத்தில் நின்று குளத்தை உற்றுக் கவனித்தேன். நிலவின் கரையில் நிற்கும் என்னை பொருட்படுத்தாமல் பால்குளக் கரையோரத்தில் நின்று மேலாடைகளை மெல்லக் களைந்து வீசியெறிந்தாய். அது காற்றில் அலைந்து அலைந்து நிலவின் மறுவிளிம்பில் சிக்கித் தொங்கியது. அனுதினமும்  குளிக்க ஆடைகளைக் களைந்து நீ வீசும்போது ஒழுங்கற்று விழுந்து நிலவின் சில பகுதிகளை மூடிக்கொள்வதால் வளர்பிறை, தேய்பிறை நிகழ்வதையும், உனதாடை தவறுதலாய் நிலா முழுவதையும் மூடிக்கொள்ளும் நாளில் பிரபஞ்சமே இருண்டு போய் அமாவாசை யாவதையும் புரிந்துக் கொண்டேன். ஆளரவமே இல்லாத இங்கே நீ மட்டும் எப்படி வந்திருப்பாய் என்பதை நினைத்துப் பார்த்தேன். சாத்தியமே இல்லை. சத்தியமாய் நீ நிலவின் மகளாய்த்தான் இருக்க முடியும் என முடிவு கொண்டேன்.

பாவடையின் நாடாவைத் தளர்த்தி இடுப்பிலிருந்து உயர்த்தி திமிரும் தனங்களுக்கு மேலே நெருக்கிக் கட்டி பால் குளத்தில் இறங்கி நீந்தினாய். பல்லவன் உளி பெற்றெடுத்த கரிய கற்சிலையொன்று பாலில் நீந்துவதைக் கண்ட என் கண்கள் வியப்பில் இமைக்க மறந்து போயின. கண் திரைகள் உலர்ந்து விட்டன. நிலவின் விளிம்பில் நான் நின்றிருந்த இடம் மட்டும்  பாரந்தாங்காமல் அலுமினியத் தட்டினைப் போல் நெகிழ்ந்து வளைவதை என் உள்ளங்கால்கள் உணர்த்துகின்றன. இங்கிருந்து நகர்ந்து விடலாம் என நினைக்கையில், இனி ஒரு அடி கூட நடக்கவே முடியாது என்னால். ஆமாம், என் பாதத்திலிருந்து நிலவிற்குள் வேர் பாய்ந்துக்கொண்டிருக்கிறது. வேறு வழியின்றி குளத்தையே பார்த்துக் கொண்டு நின்றேன். பாலுக்குள் மூழ்கி நெடுநேரம் கழித்து வெடுக்கென தலைநீட்டிய நீ அடக்கியிருந்த மூச்சை அவசர அவசரமாய் வெளியேற்றி,உள்ளிழுக்கும் போது அந்தக் குளமே சுருங்கி விரிவது விந்தையாய் இருக்கிறதெனக்கு.  

நீந்தி களைத்துக் கரையேறுமிடத்தில் தும்பைப் பூக்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கிறது. குளத்திலிருந்து வெளிவந்து அப்பூக்களை அள்ளியெடுக்கிறாய். பூந்துவாலையைப் போல் பின்னி விரிகிறது அவ் உதிரிப்பூக்கள்.  முகத்திலிருந்து பாதம்வரை துடைக்கிறாய். உன் உடலைத் துடைக்கையில் அத்துவாலையிலிருந்து உதிரும் தும்பைப்பூக்கள் கண் கூசாத அளவிற்கு ஒருவிதமான மென்னொளி வீசுகின்றன.  உதிர்ந்த பூக்களின்மேல் வானம் நோக்கி நீண்டு படுத்துக் கொண்டாய். சிதறிக்கிடந்த பூக்களை எடுத்து அங்கத்தின் அந்தரங்கத்தை மூடினாய்.


சற்றுநேர இளைப்பாறலுக்குப் பின் மீண்டும் குளத்தில் இறங்கி நீந்தத் துவங்கிவிட்டாய். நீந்துவதும் இளைப்பாறுவதும் தான் உன் வேலையா? உனக்கு பசியே எடுக்காதா? பசிக்காது தான். உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் எனக்கே பசிக்கவில்லையே. உனக்கு மட்டும் எப்படி பசிக்கும்? இங்கே எதை உண்டு இத்தனை வனப்பாக வளர்ந்தாய் நீ? பெண் அங்கத்திற்கென உருவகித்திருக்கும் அத்தனை இலக்கணங்களுக்கும் உரியவளாய் எப்படி உருவெடுத்தாய் நீ? ஒருவேளை மந்திரமோகினியா நீ? இங்கிருந்து உன்னை நான் பார்க்க முடிகிறதென்றால் அங்கிருந்து என்னை உன்னால் பார்க்க முடியுந்தானே? பிறகேன் என்னைக் காணாதவள் போலவே ஆடை அவிழ்ப்பதும், நீந்துவதும், கரையில் புரள்வதுமாய் செய்கிறாய்.  ஒருவேளை பார்வையற்றவளா நீ?

அட! நின்றவிடத்திலிருந்து நான் உன்னையே பார்த்துக் கொண்டிருந்ததை எப்படியோ உணர்ந்து விட்டாய். நீர்க்கோழி போல் மீண்டும் பாலுக்குள் மூழ்கி உன்னை மறைத்து கொண்டு விட்டாய். மூச்சுத்திணறி இறந்துவிட போகிறாய். வெளியே வந்துவிடு சிலையம்மா. வா. வந்து விடு. குளத்தினருகில் வந்து உன்னைத் தேடலாமென்றாலும், வேரூன்றி விட்ட கால்களை விடுவிக்க முடியவில்லை என்னால். உனக்கு என்னாகுமோ என தவித்து, எப்போது வெளியே வருவாயென எதிர்பார்த்து காத்து களைத்திருந்தேன்.  நான் போய்விட்டிருக்கக் கூடும் என்றெண்ணி, நீரினடியில் அமிழ்த்து வைக்கப்பட்டிருந்த வளி நிரம்பிய பந்து பிடி நழுவி வெளியேறும் வீச்சில், குளத்திலிருந்து   வெளியே தலையை நீட்டி கூந்தலை ஒரு வீசுவீசினாய். கூந்தலிலிருந்து தெரித்த பால் துளிகள் என் கண்ணுக்குள் வந்து விழுந்தன. அனிச்சையாய் கண்களைக் கசக்க, கலைந்துவிட்டது கனவு. 

*

Aug 19, 2013



கண்கொத்திப் பறவை - ஒரு பார்வை 

  

     சத்ரியனை முகநூலின் வழியாகவே பழக்கம். உண்மையில் அவர் கவிதைகளைப் படிக்கும் முன்னரே அவர் அறிமுகம் கிடைத்து விட்டது என்றே சொல்லலாம். ஆனால் அவர் கவிதைகளைப் படிக்கும்போதுதான் அவரின் நெறிமுகம்(நானே யோசிச்ச வார்த்தையாக்கும்) தெரிந்தது. என்னால் முடிந்த அளவு நடு நிலையோடு விமர்சித்து இருக்கிறேன் நண்பனின் கவிதைகளை. சில (+) களும், (-) களும் இங்கே.

(+) உவமை - சத்ரியனின் பலம். சரியும் வளையல்கள் தோழிகள் ஆவதும் வெட்டுப் படாத தாளின் முனை தெற்றுப் பல் ஆவதும் சில உதாரணங்கள்.. தக்கை நோக்கும் மீன் பிடி சிறுவன் நம் காதல் நோக்கி காத்திருந்த கணங்களை நினைவுபடுத்திப் போகிறான்.

(+) காதல் - எத்தனையோ கவிஞர்களை இயக்கும் சக்தி. சத்ரியனின் கவிதைகளில் இது நிரம்பி வழிகிறது. காதலில் இருப்போர் கண் கொத்திப் பறவையிடம் அடிமைப் பட்டுப் போவார்கள்.. ஒரு கிராமத்துக் காதலின் தவிப்பான சுவடுகள் நூலெங்கும் கிடைக்கிறது. 

(+) நிஜம் - நூலெங்கும் கவிஞனின் ஆத்மாவைக் காண முடிகிறது. அவர் குழந்தையின் பிறந்த நாள் உட்பட.. படித்து முடிக்கையில் ஓர் புலம் பெயர்ந்த கிராமத்துக் காதலனின் போராட்டம் புரிந்து விடுவது இந்தப் புத்தகத்தின் வெற்றி.

(+) நூல் வடிவமைப்பு - நிறைய உழைத்து இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.. அட்டைப் படம் ஒன்றே போதும் அலமாரியில் இருந்து எடுக்கப் பட..

(+/-) நடிகைகள் - புத்தக வடிவமைப்பில் உபயோகித்து இருக்கும் நடிகைகள் படங்களைத் தவிர்த்து இருக்கலாம். கவிதைகளின் உண்மை நாடி அதில் அடிபட்டுப் போகிறது என்பது என் சொந்த அபிப்பிராயமே.. இதையே பலர் விரும்பவும் செய்யலாம். குறிப்பாக சினிமாவின் மூலம் காதலிப்பவர்கள்..

(-) முன்னுரைகள் - நிறைய பக்கங்கள்.. சிலவற்றை கடைசியில் வைத்து இருந்தால் கவிதைகளை விரைவில் அடையலாம்..

மொத்தத்தில் சத்ரியனின் கவிதைகளில் தெரியும் காதலும் உவமைகளும் அவருக்கு நிறைய வாசகர்களைப் பெற்றுத் தரும் என்பது என் உறுதியான எண்ணம். இது அவர் முதல் படி என்றாலும் உறுதியாகவே எடுத்து வைத்து இருக்கிறார். மீண்டும் வாழ்த்துக்கள் ஒரு உண்மையான கவிஞனுக்கு...!

கவிஞர் ஷான் அவர்களின் பக்கத்தில் படிக்க “இங்கே” சொடுக்கவும்.


 நன்றி : ஷான்.


Aug 12, 2013

தேடித்தேடி

தேவையின் நிமித்தமே
தேடலைத் துவக்கி வைக்கிறது

இவ்வுயிரிக் கோளத்தின்
இடைவிடாத் தேடலின்
இறுதி கண்டுபிடிப்பு மனித இனம்

நிர்வாண மனிதன்
நிர்வாணமாய் இருந்த வரையிலும்
சொர்க்கமாகவே இருந்தது பூமி

இடையை மறைக்கும் தேவை
மரவுரியையும்
மிருகத்தை விரட்டும் தேவை
நெருப்பையும்
உணவுத் தேவை உழவையும்
உணர்வுப் பறிமாற்றத்தேவை
மொழியையும்
மகிழ்ச்சித்தேவை கலையையும்
இனப்பெருக்கத் தேவை கலவியையும்
தற்காப்பு தேவை போரையும்
நாட 
கட்டாயப்படுத்தியது காலம்

நிலம் கடக்க சக்கரம்
கடல் கடக்க கலம்
கோள் அளக்க வானவியல் என
தொடர்ந்த தேடலால்
விருத்தியடைந்தது அறிவியல்
அறிவியலின் விரல் பிடித்து
அணு பிளக்கும் வல்லமைக் கண்டு
இயற்கையை மார் பிளந்து
மனிதனே இங்கு மாபெறும் ஆற்றலென
இறுமாப்போடு உயர்ந்து
சக உயிரினங்களை ஒழித்து ஓய்ந்து
இளைப்பாறும் நேரத்தில்

எஞ்சியிருக்கும்
கொஞ்சம் தாவரங்களும்
கூடுதலான எந்திரங்களும்
இன்றோ நாளையோ
பாலையாகி விடுவோம் என்னும்
பயத்திலிருக்கும் மண் பரப்பும்
மன்றாடி பணித்தபடி இருக்கிறது
மனிதா
நீ மட்டுமாவது வாழ
தேடிக்கொள்
மற்றோர் உயிரிக்கோளத்தை என!

*

சிங்கப்பூரில் தங்கமீன் வாசகர் வட்டம் இம்மாதம் (11/08/13) நடத்திய  (தலைப்பு : “தேடல்”)  கவிதைப் போட்டியில் பரிசு பெற்ற கவிதை.

Jun 30, 2013

காதல் கடிதம்



ப்படி துவங்குவதென்றே தெரியவில்லை மனோரஞ்சிதா.

அன்புள்ள தோழி என்று துவங்க வெட்கமாய் இருக்கிறது. 

ப்ரியமான காதலி என்று துவங்க பயமாய் இருக்கிறது. 

இதுநாள் வரை தோழியென தான் நம்பியிருந்தேன். அந்த நம்பிக்கையில் மண் வந்து விழுந்தது,   என் அம்மா சொன்ன உன் கல்யாணம் குறித்தான தகவல்  அறிந்த போது தான்.  ஆமாம்,  இவ்வாண்டு பள்ளிப்படிப்பு முடிந்ததும் உன்னை, உன் தாய் மாமனுக்கு கல்யாணம் கட்டிவைக்கப் போவதாக  உன் அம்மா சொன்னளாம். அதை, என் அம்மா சொல்லக் கேட்ட நொடியிலிருந்து  கட்டுப்படுத்த முடியாத ஒருவகையான அதிர்வு என்னுடலில் புகுந்துக் கொண்டது.   நிமிடத்திற்கு எண்பது என்ற எண்ணிக்கையை மறந்து  தறிக்கெட்டு துடிக்கிறது இதயம். இறகுகள் முளைக்கும் முன்னமே  தொலைத்து விடுவேனா என் வானத்தை என அஞ்சும் ஒரு குருவிக் குஞ்சினைப் போல் அஞ்சுகிறது  நெஞ்சம். கைப்பிடியளவு நுண்மணல் எடுத்து இமைக்குள் இட்டு நிரப்பியதைப் போல் உறுத்துகிறது கண்ணில் உரக்கம்.   ஒற்றையடி பாதையை வழிமறித்து படுத்திருக்கும் பாம்பினைப் போல  நீண்டு படுத்துக் கொண்டு என்னை மிரட்டுகிறது இந்த இரவு. கவிஞர் வைரமுத்து சொன்ன   வயிற்றுக்கும், தொண்டைக்கும் நடுவில் உருவமில்லா பந்து ஒன்று எனக்குள்ளும் உருளத் துவங்கியிருக்கிறது. ஒருவேளை, நம்மைக் காதலித்துப் பார்க்கச் சொல்லி கலகம் செய்கிறதோ காலம்! 

ரே ஊரில் பிறந்து, வளர்ந்து ஒரே வகுப்பில் படித்து ஓடியாடி விளையாடி மகிழ்ந்த நமக்கிடையிலான இத்தனை ஆண்டுக்கால நட்பில் யாதொரு வித்தியாசத்தையும் அறிந்திராத உள்ளம், உனக்கு கல்யாணம் என்பதை கேள்விப்பட்ட மாத்திரத்தில்  அறுந்த பல்லியின் வால் போல துடிப்பதின் மர்மம் எதுவாக இருக்கும் என்ற கேள்வி தொல்லை செய்கிறது என்னை. கண்ணுக்குத் தெரியாமல் நம் நட்பின் தோளில் கை போட்டுக் கொண்டு ஒட்டுண்ணியாய் வளர்ந்திருக்குமோ இந்த காதல் ? இதோ இப்போது அது எனக்குள் மெல்லமெல்ல ஊடுருவி மூலாதார முடுக்கில் ஒளிந்துக் கொண்டு,  நீயில்லாததொரு வாழ்வு வாழ்வாகவே இருக்காது என்று சதா ஜபித்தபடி பித்தனாக்குகிறது என்னை. என் மனக்கட்டுப்பாட்டை இழந்துதான் இந்தக் கடித்தை எழுதிக் கொண்டிருக்கிறேன். எழுதி முடிப்பதற்குள்ளாகவே மனநிலை பிறழ்ந்திடுவேனோ என பயமாய் இருக்கிறது. 

என்னையும், உன்னையும் கேட்காமலேயே இத்தனைக் காலமாய் உன்னைக் காதலியாய் அமரவைத்து அழகு பார்த்திருக்குமோ என் இதயம் என்று இப்போது சந்தேகம் வலுக்கிறது. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா எனக் கேட்டு  நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறது மனசாட்சி.  “இந்தக் காதலின் அவஸ்தை என் எதிரிக்கும் கூட வரக்கூடாது  இறைவா!”, என  இறைஞ்சத் தோன்றுகிறது. 

கூரையின் சந்து பொந்துகளில் எல்லாம் நுழைந்து வந்து விளக்கை அணைப்பதிலேயே முனைப்பாய் இருக்கிறது காற்று. ஏழையின் குடிசை என்றால் ஆடிக்காற்றுக்கும் இளப்பம் தான் போல!.  விளக்கு புட்டியில் இருக்கும் மண்ணெண்னை தீர்வதற்குள்  இந்த கடிதத்தை எப்படியாவது எழுதி முடித்துவிட வேண்டும் என்ற மன உந்துதலுக்கேற்ற வேகத்தில் வந்து விழ மறுக்கின்றன சொற்கள். வெட்கம் விட்டுச் சொல்கிறேன். ஆறு மாதக் குழந்தை நான்கு காலில் தவழ்ந்து நடக்க முயன்று விழுந்து  மீண்டும் மீண்டும் நடைப்பயில முயல்வதைப்போல , என் விருப்பத்தை எழுத முயன்றதில் இந்த இருவத்தி மூன்றாவது தாள்தான் கடிதம் போன்றதொரு தோற்றத்தை அடைந்திருக்கிறது. இப்போதும் கூட நான் சொல்ல வந்ததை சரியாக எழுதியிருக்கிறேனா என ஒரு சந்தேகம் வந்து தொலைக்கிறது.

உண்மையில் காதல் என்பதின் பூரண அர்த்தம் என்னவாக இருக்கும் என்பது எனக்குத் தெரியவில்லை. என் காதலின் ஒரே நோக்கம் மரணத்தின் எல்லை வரை நீ என் உடன் இருக்க வேண்டும் என்பதே.

இந்தக் கடிதத்தைப் படித்த உடனே உன் விருப்பத்தைச் சொல்ல வேண்டும் என்கிற கட்டாயமெதுவும் கிடையாது. சாவகாசமாக ஒருநாள் எடுத்துக்கொள். அதற்கு மேலான தாமதத்தைத் தாங்குவது எனக்கு சிரமமாக இருக்கும். இறுதியாய், உன்னிடம் கெஞ்சிக் கேட்டுக்கொள்வது  ஒன்றே ஒன்றுதான், 

“நானும் நல்லா யோசிச்சி பாத்தேன், இதெல்லாம் தப்புடா?  நாம எப்பவும் நட்பாவே இருந்துடலாம்” என கெஞ்சித் தொலையாதே. காரணம், 

ஒரேயொரு நொடி உன்னை காதலியாய் ருசி கண்டுவிட்ட அந்த இதயம், மீண்டும் ஒருபோதும் தோழியாய் ஏற்கவே ஏற்காது.  ஒருவேளை, காதலை நீ ஏற்றுக் கொள்ளாமல் போனால், தோற்றுப் போனதாவே இருந்து விடட்டும் என் காதல்!

காத்திருப்புக்களுடன்,
சத்ரியன்.


# குறிப்பு :  திடங்கொண்டு போராடு” வலைத்தள நண்பர் சீனு நடத்தும் காதல் கடிதப் போட்டியில் “காதலிக்கு எழுதிய கடிதம்” என்ற தலைப்பிற்காக புனையப்பட்டது.





Jun 12, 2013

வல்லமை

என்னை 
வீழ்த்தும் ஆயுதம் செய்ய 
பத்து மாதம் தேவையாய் இருந்திருக்கிறது 
என் அத்தைக்கு

அந்த 
ஆயுதத்தைக் கூர் தீட்ட
எண்ணிரண்டு ஆண்டுகள்
தேவையாய் இருந்திருக்கிறது
காலத்திற்கு

அந்த
ஆயுதத்திற்கு என்னை இரையாக்க
ஒரேயொரு நொடிதான் தேவையாய் இருந்தது
காதலுக்கு.


May 18, 2013

பெயர்




எழுதுகோல்
வாங்கும்போதெல்லம்
எதற்கு உந்தன்
பெயர் எழுதினேன் என்பதை
இன்று தான் உணர்ந்தேன்

கவிதை எழுத
தவழ்ந்திருக்கிறேன்.

*

Apr 8, 2013

காத்திருப்பு


நேரம் கடத்த
சிறு கற்களெடுத்து
குளத்து நீரில் எறிந்துக் கொண்டிருந்தேன்.

எனக்கும்
நிழல் விரித்துக் கொண்டே
பழுத்த இலைகளை
கிள்ளியெறிந்துக் கொண்டிருந்தது மரம்.

என் காத்திருப்பு
அவளின் வருகைக்காக

மரத்தின் காத்திருப்பும்
அவளுக்காகத்தான் இருக்குமோ?

**

Feb 14, 2013

ஆலிங்கனா-04


துநாள் வரை உன்னிடம் சொல்லாத ஒரு உண்மை இருக்கிறது. என்னுடன் நீ பழகத் தொடங்கிய நாளிலிருந்து என் உடலெங்கும் ஒருவகையான விஷம் ஊறத் தொடங்கியிருப்பதாய் உணர்கிறேன், ஆலிங்கனா. நடிக்கவே தெரியாத நயணத்தை எப்படி அருளினான் உனக்கு!?  எத்தனை அன்பையும், ஏக்கத்தையும் ஒருசேர பிரசவிக்கின்றன உன் கண்கள்! அய்ய்ய்யோ! உன் பார்வையை எதிர்கொள்ளும் வல்லமை இன்னும் என் கண்கள் பெறவில்லை. அனைத்தையும் நிறைவாய் கொடுத்த ’அவன்’ உனக்கான அன்பிற்கு மட்டும் பஞ்சம் வைத்து விட்டிருக்கிறான்  ‘பரதேசி’. என் ஆயுளை இட்டு நிரப்பினாலும் நிரம்பாதது உன் விழிப்பள்ளத்தின் ஏக்கம், ஆலிங்கனா. 

முந்தைய சந்திப்பின் விடைப்பெறுதலின் போது அந்த தேன்கலை மலையினைச் சுட்டிக்காட்டி, என்றாவது ஒருநாள் அம் மலையுச்சியில் இருக்கும் பூமரத்து சுனைக்கு உன்னை அழைத்துச் செல்வதாய்ச் சொல்லியிருந்தேன். அன்றது வாய்க்கும் என்று எதிர்பார்க்கவில்லை நான். உன்னை எண்ணி வியக்கும் விசயங்களில்  அந்த நாளினை தேர்ந்தெடுத்ததும் அடங்கும். இயல்பாய் வாய்த்துவிட்டது அந்நன்னாள். ஆமாம், அன்று பிப்ரவரி 14.  ஆனால்  ‘காதலர் தினம்’ அது என்பதை நாமறியாத காலம் அது.   இருவருமாய்ச் சேர்ந்து  முழுநாளையும் கழித்தோம். என்னவொரு தேவசுகம்! இங்கிருப்பவர்களில் யாராலும் உணரமுடியாது அதை. ஒருவேளை நாகரீகம் காணாத  கற்கால முன்னோர்கள் உணர்ந்திருக்கலாம். 

காட்டுப்பாதைப் பயணம் உனக்கு புதிது. உன் உடை இழுக்கும் முட்செடிகளை  விடுவித்து நீ நடந்து வருவதைக் காண பாவமாக  இருந்தது. செடிகளின் மீது கோவம் கோவமாய் வந்தது எனக்கு. ஒரு செடி கூட உன்னைத் தொடக்கூடாதென்ற என் எண்ணத்தின் பின்னணியில் என்ன இருக்கும் ஆலிங்கனா? ஒரு கவைக்கழி கொண்டு வழியோரச் செடிகளை ஒதுக்கி நீ மலையேற வழியமைத்துக் கொண்டே முன் நடந்தேன். செடிகளை ஒதுக்குகையில் சிறு புற்றின் ஓரம் ஒரு மொட்டுக்காளான்  உன் கூர்மூக்கில் அணிந்திருக்கும் ஒற்றைக்கல் மூக்குத்தியைப் போல தெரிந்தது.  அந்தப் புற்றினைச் சுற்றிலும் இருந்த புதரினை இன்னும் சற்று ஒதுக்கிப் பார்க்கையில் மொட்டுக்காளான்கள் மொத்தமாய் விளைத்திருந்ததைக் கண்டோம். புதருக்குள் நுழைந்து நான் பறித்தெடுத்த காளான்களை நீ பாவாடை மடியில் ஏந்தி எடுத்துக் கொண்டாய். அதைச் சுமந்தபடி நடக்கத்தெரியாத உன்னழகை எந்த சொல் கொண்டும் விளக்க முடியாது என்னால்.

மலையுச்சியை நெருங்க நெருங்க  பெருஞ்சுவாசத்தின் சுதிக்கேற்ப ஜதி பிடித்து ஏறி இறங்கியது உன் நெஞ்சம். மலையுச்சியில் நின்று சுற்றியிருக்கும் ஊர்களையும், அலையலையாய் தெரியும் தூரத்து இளநீல மலைகளையும் கண்ட பரவசத்தில் மடியின் பிடியை மறந்த உன் கை கன்னத்திற்குக் குடியேறிவிட,  பிடி தளர்ந்து மடி பிறிந்த காளான்கள் சறுக்கு பாறையில் உருண்டோடின. காளான்களை நான் பார்க்க, பரவசம் தொலைத்து பயத்துடன்  என்னைப் பார்த்தாய். மெலிதாய்ச் சிரித்து, ’சுனையில் போய் விழும் எடுத்துக்கலாம் விடு என்றதும்’ மெல்ல நீயும் சிரித்தாய். காட்டு முல்லை பூத்தது போன்ற பற்கள் உனக்கு.

சரி வா சுனைக்குச் செல்லலாம் என சரிவான பாறையில் லாவகமாய் இறங்கினேன். அனுபவம் இல்லாததால் சிலையாக நின்றாய் நீ. மேலேறி வந்து உன் கரம் பற்றின போது தான் கண்டேன், பள்ளத்தைக் கண்டு பயத்தில் நடுங்கும் உன் பாதத்தையும். அப்படியே உன்னை அமரச் செய்து பயத்தால் வியர்த்திருந்த பாதங்களைக் கையால் துடைத்து விட்டு பயம் போக்க என்னென்னவோ சொல்லிப் பார்த்தும் பயனின்றி போகவே  ‘உப்பு மூட்டை’ சுமந்தேன் உன்னை. உள்ளங்கையில் சிறை பட்ட புறாவின் கதகதப்பையும், நடுக்கத்தையும் முதுகில் உணர்ந்தேன். நம்பினால் நம்பு, பூமி சுழல்வதை அப்போது தான் உணர்ந்தேன் நான்.

சுனையில் மிதந்துக்கொண்டிருந்த காளான்களை ஒவ்வொன்றாய் எடுத்து உன்னிடம் வீசினேன். எடுத்து பத்திரப்படுத்தினாய். கூட்டாஞ்சோறு செய்துண்ணும் ஏற்பாட்டுடன் சென்றிருந்தோம். அதை கை விட்டுவிட்டு காளான் சமைக்க ஆயத்தமானோம். மூன்று கற்களால் அடுப்பு வைத்து அருகிலிருந்த சுள்ளிகள் எடுத்து தீ மூட்டி உடன் எடுத்துச் சென்றிருந்த அலுமினிய கும்பாவில் சுனைநீர் விட்டு சிறிது உப்பு, சில காய்ந்த மிளகாய்களைக் கிள்ளிப் போட்டு, அதனுடன் களான்களையும் சேர்த்து சிறிது நேரம் வேக வைத்து பாறைமீது வைத்து பறிமாறினேன்.  பசி தீர்ந்தது. குடிக்க நீர் கேட்டாய். மண்டியிட்டு சுனையில்  குடித்துக் காட்டினேன். அந்தமுறை உனக்கு எளிதாய் இல்லை.ஆனாலும் முயற்சித்துக் குடித்தாய். பின் சுனைக்கருகிலான குகையில் அமர்ந்து இளைப்பாறினோம்.

‘இத்தனை எளிமையாய் சமைக்க எப்படி கற்றாய்?’ என்றாய். கிராமத்து ஜனங்களுக்கு எளிமை மட்டும் தானே தெரியும் என்றேன். என்னில் வியக்க எதுவுமே இல்லை. ஆனாலும் உன் ஒவ்வொரு மிடறு பார்வையிலும் என்னை வியந்தே விழுங்கினாய், ஆலிங்கனா.  என்மீதான ஈர்ப்பு எந்த கணத்தில் உதித்தது உனக்குள்?. என்னிலிருந்தே உன் உலகை முற்றுமுழுதாய் உணர்ந்துவிடும் எண்ணம் எப்படி வந்தது உனக்குள்?  எனக் கேட்டுவிடும் முடிவோடு தான் இன்றுன்னை அழைத்து வந்தேன். ஏதோவொரு தயக்கம்.  வேறொரு நாளில் கேட்டுக்கொள்கிறேன் விடு.

‘கோரை ஜோசியம் தெரியுமா உனக்கு’ என்றேன். உதடு பிதுக்கிய நீ ‘எப்படின்னு எனக்கு சொல்லிக் கொடேன்’ என்றாய். ஒரு கோரைப்புல் எடுத்து ஆளுக்கொரு முனையில் பிடித்து சரி பாதியாக பிளக்க வேண்டும். சிக்கல் விழாமல் பிளந்துக் கொண்டால் நாம் நினைத்தது நிறைவேறும். சிக்கலாக பிளந்தால் நிறைவேறாது’ எனச்சொல்லி விளக்கினேன்.  ‘சரி சரி நாம் கோரை ஜோசியம் பார்க்கலாம்’ என்றாய். சுனையின் கரையில் வளர்ந்திருந்த கோரைப்புற்களில் ஒன்றை பிடுங்கி வந்து ஆளுக்கொரு முனையைப் பிடித்துகொண்டு  ‘மனதுக்குள் ஏதாவது நினைத்துக் கொள்’ என்றேன். ‘ம்’ என்றவுடன் பிளக்கத் துவங்கினோம். சிக்கலாய்ப் பிரிந்தது. கண்கள் கலங்கினாய். ஏனென்று கேட்டதும் வெடித்தழுது வெளிப்படுத்தினாய்.  ‘நாம் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன்’ என்று. என் கண்கள் நீர் அவிழ்க்க ஆயத்தமானது.

பொழுது சாயத் தொடங்கியது. அமைதியிழந்த மனதுடன் வீட்டிற்குப் புறப்பட்டோம்.  வழியெங்கும் அமைதி நிறைந்திருந்தது. பொதுவாக காட்டிற்கு நிசப்தமாய் இருக்கப் பிடிக்காது. இப்பொழுது எந்த முட்செடியும் உன் உடையைப் பிடித்திழுக்கவில்லை. ஆனாலும், கவக்கழியால் வழியேற்படுத்திக் கொண்டே வந்தேன். என்னின் இந்த வழித்துணை வாழ்நாளெல்லாம் உன்னைத் தொடரும் என்றே நானும் நம்பினேன். காலமும், காலனும் கூட்டுக்களவாணிகள் என்பது புரிய ஆண்டுகள் தேவையாய் இருந்தது.   

எளியவன் நான் என்ன செய்வேன் ஆலிங்கனா.

***

Jan 5, 2013

காதல் காலம்-01



இன்றென்ன
காதல் ஜெயந்தியா?

என் 
வீடெங்கும்
உன்
கா(த)ல் தடங்கள் பதிந்திருக்கிறதே!

*

என் உள்ளம் 
பல்லாங்குழியாகவா தெரிகிறது?
பின்னே ஏனடி
கண்ணுமுழி ரெண்டையும்
அதில் போட்டு
விளையாடிக் கொண்டிருக்கிறாய்?

**


Jan 2, 2013

கண்கொத்திப் பறவை


வணக்கம்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

நீண்ட இடைவெளிக்குப் பின் வலைப்பக்கம் வந்திருக்கிறேன். இந்த இடைவெளிக்கு காரணம் “கண்கொத்திப் பறவை” யை உங்களின் “மனங்களைக் கொத்தும்” வகையில் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தான். எதிர்பார்த்தது போலவே பலரும் பாராட்டும் வகையில் உருவாகியிருக்கிறது.


 (நூலின் அட்டைப்படம். பெரிதாக்கி பார்க்க படத்தின் மேல் சொடுக்கவும்.)

இப்புத்தகம் சிறப்பாக உருவாக உறுதுணைப் புரிந்த ,

   1.“மின்னல் வரிகள்” திரு.பா.கணேஷ்:

நான் இழுத்த இழுப்பிற்கெல்லாம் தன்னை இலகு படுத்திக்கொண்டு  தான் ஏற்றுக்கொண்ட வடிவமைப்பு பணியினைக் காலநேரம் பாராது ஒத்துழைப்பு தந்து உழைத்ததன் விளைவாக  நான் எதிர்பார்த்ததை விடவும் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது.

    2.கவிஞர் திரு.இசாக் (தமிழ் அலை பதிப்பகம்),

 ”இது இப்படி இருக்க வேண்டும். இந்த தேதிக்குள் கிடைத்தால் நலம்” - என்று எனது தேவையைச் சொல்லி  முழு பொறுப்பையும், சுதந்திரத்தையும் கொடுத்து விட்டு நேர இக்கட்டையும் கொடுத்தேன். அட்டையை வடிவமைத்து , அச்சிட்டு, புத்தகமாக்கி நான் எதிர்பார்த்த நேரத்துக்குள்ளாகவே கொடுத்து விட்டார்.

செய்நேர்த்தி என்பதின் விளக்கத்தை சுருங்கச் சொல்வதென்றால் “இசாக்” என்று சொல்வேன்.

    3.”Discovery" திரு.வேடியப்பன்.

புத்தகமாக உருபெறும் வரையிலும் கணேஷ் அண்ணா+ இசாக் அண்ணா+ நான் எங்கள் மூன்று பேரையும் ஒருங்கிணைத்து பெரும்பங்காற்றிய எனது அன்புக்குரிய மாப்பு. ”கண்கொத்திப் பறவை” நூல் விற்பனை உரிமையையும் தானே ஏற்றுக்கொண்டிருக்கிறார். 

இம் மூவருக்கும் ,  மற்றும் இதன் பின்புலத்திலிருந்து செயல்பட்ட அனைத்து தோழமைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

குறிப்பு: நூல் வாங்க Discovery Book Palace  வேடியப்பன் அவர்களைத் தொடர்புக் கொள்ளுங்கள்.
**************************************************************************************************************************

நூல் அறிமுக விழா (சிங்கையில்)


2013 - புத்தாண்டின் புன்னகையுடன் சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் எனது “கண்கொத்திப் பறவை ” - கவிதை நூல் அறிமுக விழாவிற்கு உங்கள் அனைவரையும் (உள்ளூரில் இருப்பவர்கள் நேரில் வந்து சிறப்பிக்கவும், தொலைதேசத்தில் இருப்பவர்கள் வாழ்த்தி சிறப்பிக்கவும்) அன்புடன் அழைக்கின்றோம். 





நாள் : 06 / 01/ 2013 - ஞாயிற்றுக்கிழமை

நேரம் : மாலை 6:30 - 8:30 வரை

இடம் : ஆனந்தபவன் உணவகம் (2 ஆம் தளம்),
              (முஸ்தஃபா சென்டர் எதிரில்)
              95 சையது அல்வி சாலை,
              சிங்கப்பூர்.

தொடர்புக்கு : கோ.கண்ணன் - 9623 5852.

மேலும் தகவல்களுக்கு இணைப்பில் உள்ள அழைப்பிதழைச் சொடுக்கி பெரிது படுத்திப் பார்க்கவும்.


உங்கள் ஆசிகளுடன்,
சத்ரியன்.