Oct 5, 2012

ஆலிங்கனா-03


மாரளவு செடிகளை விலக்கிக் கொண்டு வரப்பில் நீ வருவதைக் கண்டதுமே மழைப்பொழிய தொடங்கும் முன் சிலுசிலுவென ஒரு மென்காற்று தரையோடு தவழ்ந்து வந்து உடலைத்தழுவி உயிரை வாங்குமே, அதுபோல உள்ளமெங்கும் ஒரு குளிர் பரவி ஓயாமல் பேரானந்ததைப் பிரசவித்தபடியே இருந்தது. 

வரும்போதே ஒரு வண்ணத்துப்பூச்சியைப் பிடித்த நீ, அதன் தவிப்பைத் தாளாது பறக்கவிட்டு வந்திருந்தாய். ஆனாலும், விரல் நுனியில் ஒட்டியிருந்த வண்ணங்கள் அழிந்துவிடாமலிருக்க நீ எடுத்த பிரயத்தனங்களைக் காண  கண்ணிரண்டு போதவில்லை போ. நானறிந்த வரையில், நான் ஆடு மேய்ப்பதை ஆனந்தமாய் பார்த்த முதல் மோகினி நீ மட்டும் தான் ஆலிங்கனா.

வெள்ளைச்சட்டை உனக்கு வெகு அழகு. சட்டையின் இட,வல பைகளில் ஒளித்து வைத்திருக்கும் பம்பரத்தை நினைவூட்டும் உன் கழுத்துக்குக் கீழான பகுதியைப் பார்க்காமல் தவிர்க்கும் பொருட்டு நான் பட்ட பாட்டை நீ பார்த்தாய். ஆனாலும் என்னை கடிந்துக் கொள்ளவில்லை நீ. தொடர்ந்தும் நான் பார்த்துப்பார்த்து பசியாகிக் கொண்டேன். பேச்சினூடே ”தொய்யாம்பால் சாப்பிடுவியா?’, எனக்கேட்டேன். பேந்தப்பேந்த விழித்தாய். செய்து தருகிறேன் எனச்சொல்லி ஒரு நொடியும் தாமதிக்காமல் தாயாய் செயல்பட்டேன்.

மேய்ந்துக்கொண்டிருந்த வெள்ளாட்டு மடியில் பால் கனத்திருந்தது. பசியாறக் கொண்டு வந்திருந்த கேழ்வரகு கூழை ஆட்டிற்கு உண்ணக்கொடுத்து பின்னங்கால்களை உன்னை பிடிக்கச்சொல்லி,  தூக்குச்சட்டியில் பால் பீய்ச்சி வெதுவெதுப்பு ஆறும் முன் வெப்பாலைக் கொழுந்துகளைக் கிள்ளிப்போட்டு மூடியிட்டு வைத்துவிட்டு,  சில நிமிடங்கழித்து உன் கையிரண்டை மலர்த்தி  கவிழ்த்துக் கொட்டினேன். உன் உள்ளங்கையில் மெல்ல அதிர்ந்த அந்த  ”பால் கட்டி” வெள்ளை இதயம் அசைவது போலிருந்ததைக் கண்டதும், ”உடலுக்குள் ரத்தத்திற்கு பதிலாக பால் ஓடினால் நம் இதயமும் கூட இப்படித்தான் இருக்கும் இல்லையா”, என  நீ கேட்டது நெஞ்சுக்குள் நங்கூரமிட்டபடியே இருக்கிறது  ஆலிங்கனா.

காய்ச்சாதபால் கட்டியானதை நம்ப முடியாமல் விழித்தாய். விவரித்தேன். சுவைத்து குதூகளித்தாய். எஞ்சியதை எனக்கும் ஊட்டிவிட்டாய். என் வாயைச்சுற்றி திட்டுதிட்டாய்  ஓட்டியிருந்த பால்கட்டியைக் கூச்சமின்றி துடைத்தெடுத்தாய் . தேவதை கூட தாயாகும் தருணத்தை உணர்ந்தேன் நான்.  அதற்கு முன் ஆயிரம் முறை தொய்யாம்பால் செய்து சாப்பிட்டவன் தான் என்றாலும், உன் கையால் உண்டதும் அமுதசுவை அறிந்தேன் அன்று ஆலிங்கனா. 

வெயில் சற்று உரக்க வீசியது.  கொன்றை மரத்தின் வேர்கள் மீதமர்ந்து பேசத்துவங்கினோம். அது ஆவணி மாதம். தங்க நிறத்தில் கொத்துக்கொத்தாய்ப் பூத்து தொங்கிக் கொண்டிருந்த கொன்றைப்பூக்கள் மெதுமெதுவாய் அசையும் காற்றுக்குங்கூட ஒன்றிரண்டு  பொன்னிறப்பூக்களை  நம்மீது உதிர்த்து பூரிப்பு கொண்டது கொன்றைமரம்.

குறிப்பு:- மேலே ”வெப்பாலை” என்னும் சொல்லின்மேல் சொடுக்கினால் படம் பார்த்து விளங்கிக் கொள்ளலாம்.




Sep 18, 2012

சூரியனே கதி - சுஜாதா



அணுசக்தி வேண்டாம்.



 அணுசக்தியைப் பிளப்பதால் ஏற்படும் அபரிமிதமான உஷ்ணத்தைக் கொண்டு டர்பைன்களை இயக்கி மின்சாரம் உண்டாக்குவதை மனிதனின் சக்தித் தேவைகளுக்கு முடிவான விடை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நூற்றுக்கணக்கான அணுமின் நிலையங்களை அமைத்தார்கள்.

எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள்.அணுசக்தியென்னும் ராட்சசனை அடக்கி நம் மனித இனத்தின் நலனுக்குப் பயன்படுத்துகிற
ோம் என்கிற திருப்தியில் விஞ்ஞானிகள் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் போது, ராட்சசன் அப்படியொன்றும் அடங்கிவிடவில்லை என்பது தெரிந்தது.


விபத்துகள்:-



  முதலில் விபத்துகள். அமெரிக்காவில் 'மூன்று மைல் தீவு' என்கிற இடத்தில் வைத்திருந்த அணுமின்நிலையத்தில் விபத்து. அப்புறம் பற்பல அணுமின் நிலையங்களில் தெரிந்த, தெரியாத விபத்துக்கள். கல்பாக்கம் கூட விலக்கல்ல. அதன்பின் சமீபத்தில் செர்னோபில்.
அணுமின் நிலையங்களில் விபத்து என்பதை ஒரு அணுகுண்டு இலவசமாக வெடிபபதற்குச் சமானமாக, அவ்வளவு தீவிரமாகப் போகவிடமாட்டார்கள் என்கிற நம்பிக்கையில் நாமெல்லாம் நகத்தைக் கடித்துக்கொண்டிருக்க, விஞ்ஞானிகள் இன்னமும் கான்க்ரீட், இன்னமும் பாதுகாப்புச் சாதனங்கள், ஏதாவது எங்கேயாவது தப்பு என்றால் உடனே எல்லாவற்றையும் அணைத்து விடும்படியான இருமடங்கு மும்மடங்கு பாதுகாப்புகள் என்றெல்லாம் செய்தும், அணுமின் நிலையத்தில் உள்ள மற்றொரு தீவிரமான பிரச்சினையை அவர்கள் நிஜமாகவே மூடி மறைக்கிறார்கள் - அதன் சாம்பல்.


ஆபத்தான கதிரியக்கம்:-



 அணுமின் நிலையங்களில் எரிபொருளாக உபயோகிக்கப்படும் யுரேனியம், ப்ளுடோனியம் போன்றவை அதீத கதிரியக்கம் கொண்டவை. அதிலிருந்து வெளிப்படும் கதிர்கள் நம்மேல் பட்டால் நம் எலும்புக்குள் இருக்கும் குருத்து அழிக்கப்பட்டு உத்திரவாதமாகச் செத்துப்போவோம்.
அணுமின் நிலையத்தின் சாம்பலில் இவ்வாறான கதிரியக்கம் அதிகப்படியாகவே இருக்கும். அதைத் தண்ணீரில் கரைக்க முடியாது; காற்றில் தூற்ற முடியாது; அதன் கதிரியக்கம் ஆய்ந்து அவிந்து பத்திர அளவுக்கு வர ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஆகும்.



சாம்பலை என்ன செய்வது:-



 அதனால், அந்தச் சாம்பலை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று விழிக்கிறார்கள். துப்பறியும் நாவல்களில் 'டெட்பாடி' போல எப்படி மறைப்பது, எங்கே புதைப்பது என்று அலைகிறார்கள். அவைகளை 'நாடுயுல்ஸ்' (nodules) என்று கெட்டியாக்கி ஆழக்கடல் தாண்டிச் சென்று சமுத்திரத்திற்குக் கீழே புதைக்கலாம்; இல்லை, பூமியில் பள்ளம் தோண்டிப் பத்திரப்படுத்தலாம்.இவ்வளவு தகிடுதத்தம் ப்ண்ணி அந்தச் சனியனை உற்பத்தி செய்து தான் ஆக வேண்டுமா என்று ஒரு கோஷ்டி கேள்வி கேட்க, அதற்கு விஞ்ஞானிகளிடமிருந்து சரியான பதில் இல்லை. அதுவும் இளைய தலைமுறையினர் இந்தக் கேள்விகளை கேட்கிறார்கள்.

ஆர்ப்பாட்டம், எதிர்ப்பு:-



 உலகில் எங்கே அணுமின் நிலையம் வைப்பதாகச் சர்க்கார் அறிவித்தாலும் அங்கே போய் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். கர்நாடகத்தில் 'கைகா' வில் ஓர் எதிர்ப்பு இயக்கம் தோன்றியுள்ளது. அதுபோல் தமிழ்நாட்டில் திருநெல்வேலி ஜில்லாவில் கூடங்குளம் என்கிற இடத்தில் சோவியத் உதவியுடன் ஆயிரம் மெகாவாட் அணுமின் சக்தி நிலையம் கொண்டுவரப் போகிறார்கள். அதற்கும் ஓர் எதிர்ப்பு இயக்கம் உருவாகி வருகிறது என்று படித்தேன்.

எரிபொருள்கள்:-



 இந்த எதிர்ப்புகள் நியாயமானவை தான் என்றாலும், எதிர்காலத்தில் மின்சாரம் தயாரிக்க எரிபொருள்கள் காலியாகிக் கொண்டிருக்கின்றன என்பதும் உண்மையே. உலகத்தில், கைவசம் உள்ள பெட்ரோலியம் சம்பந்தப்பட்ட எரிபொருள்கள் அடுத்த நூற்றாண்டின் முற்பகுதியில் காலியாகிவிடும். எண்ணெய்க் கிண்றுகள் வற்றிவிடும். நம் இந்தியாவில் மிக அதிகப்படியாக நிலக்கரி இருக்கிறது. அது இன்னும் பல நூற்றாண்டுகளுக்குத் தாங்கும். ஆனால், நிலக்கரியில் சிக்கல்கள் பல உள்ளன. முதலில் நிலக்கரியைத் தோண்டியெடுப்பதில் உள்ள சங்கடங்கள். ஆழமாகத் தோண்ட வேண்டும்; ஆபத்து அதிகம்; தோண்டுபவர்களுக்கு விபத்துக்கள்; அவர்கள் மூச்சில் ஏறும் கார்பன் கலந்த காற்றினால் அவர்கள் சீக்கிரம் இறந்துபோகிறார்கள். இவ்வாறு இரக்கமற்றுத் தோண்டுவதற்குப் பதிலாக முழுக்க முழுக்க ரோபாட் மெஷின்களை வைத்துக் கொண்டே செய்தால் மிக அதிகமான செலவாகும்.


காற்று மண்டலத் தூய்மைக்கேடு:-



 நிலக்கரியைச் சுரங்கங்களிலுருந்து மின் உற்பத்தி ஸ்தலத்திற்குக் கொண்டு வர ஆகும் செலவு, அங்கேயே உற்பத்தி செய்தால் மின்சார விரயம். அது மட்டுமன்றி, நிலக்கரியை எரிப்பதால் நம் காற்று மண்டலத்தில் அதிகமாகும் கார்பன் டையாக்ஸைடின் அளவு ஒரு பெரிய ஆபத்து. 1900-த்தில் நம் காற்று மண்டலத்தில் கார்பன் டையாக்ஸைடு வாயு பத்தாயிரத்தில் 29 பகுதி இருந்தது. இப்போது 32 ஆக உயர்ந்திருக்கிறது. கி.பி. 2000-க்குள் 36 ஆகிவிடும். இந்தக் கார்பன் டையாக்ஸைடு அதிகமானால் பூமி மெல்ல மெல்லச் சூடேறிக் கொண்டு வருகிறது. இதை க்ரீன் ஹவுஸ் எஃபெக்ட் (Green house effect) என்று சொல்வார்கள்.

துருவப் பிரதேசப் பனி உருகலாம்:-



 அந்த அதிகப்படி உஷ்ணம் நாம் உணராமல் மெல்ல மெல்ல நம் துருவப் பிரதேசங்களில் உள்ள பனிப் பாளங்களை உருக்கி, நம் சமுத்திரங்களில் தண்ணீர் லெவல் அதிகமாகி, கொஞ்சம் கொஞ்சமாக தினமணி ஆபீசின் மாடிக்கு கடல் வந்துவிட சாத்தியக்கூறுகள் உள்ளன!. மேலும் சமுத்திர நீர் அதிக உஷ்ணத்தால் ஆவியாகி, அதில் கரைந்துள்ள கார்பன் டையாக்ஸைடு காற்றில் அதிகமாகி, வீனஸ் கிரகம் போல் சூடு ஆயிரக்கணக்கான டிகிரிகளுக்கு எகிறும்.

மாற்று வழிகள்:-



நிலக்கரி எல்லாவற்றையும் எரிப்பதால் ஆபத்து; அணுசக்தி ஆகாது; பின் என்ன தான் நல்லது? பற்பல மாற்று சாத்தியக்கூறுகள் நம்பிக்கை தருகினறன. முதலில் இங்கிருந்து புரசவாக்கம் போவதற்கு பாட்டரி கார்கள் அமைக்கலாம். ஸோலார் பாய்மரங்கள் விரித்துச் சூரிய ஒளியைப் பயன்படுத்திக் காலேஜ் போகலாம்; இல்லை, சைக்கிள்களை அதிகம் பயன்படுத்தலாம்.


ஹைட்ரஜன் வாயு:-



 ஹைட்ரஜன் - ஜலவாயு நம்மிடம் நிறைய இருக்கிறது. பூமியின் கைவசம் உள்ள 3000 கோடி கனமைல் தண்ணீரில் கரைந்திருக்கும் இந்த ஹைட்ரஜன் வாயுவை எப்படியாவது எரி பொருளாக உபயோகிக்க முடிந்தால் நம் பிரச்சினைகள் எல்லாமே தீர்ந்துவிடும். இதனால் நம் வாயுமண்டலம் பாழாகாது. ஹைட்ரஜன் எரியும் போது அது விடுவிக்கிற, பிராண வாயுவுடன், ஆக்ஸிஜனுடன் சேர்ந்து கொண்டு மறுபடி நீராவியாகிறது. ஆனால் விஷயம் அத்தனை சுலபமில்லை. ஜலவாயு ரொம்ப லேசானது. அதைச் சேமித்து வைப்பதற்கு ராட்சசக் குடுவைகள் வேண்டும். மேலும் ஜலவாயு முணுக்கென்றால் பற்றிக்கொள்ளும். ஆரம்பக் காலத்தில் ஹைட்ரஜன் நிரப்பின பிரம்மாண்டமான மிதக்கும் கப்பல்கள் பண்ணி பல பேர் எரிந்து போயிருக்கிறார்கள்.

"சைவ" பெட்ரோல்:-



 அதனால் பல மாற்று முறைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். இரும்பு, டைட்டேனியம் கலந்த ஒரு கலப்பு உலோகத்திற்கு ஜலவாயுவை உறிஞ்சிக் கொள்ளும் குணம் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் அல்லது கார்பன் டையாக்ஸைடுடன் கலந்து மிதைல் சாராயம், மீதேன் என்று பொருள்களாக மாற்றிச் சேமித்து வைக்கலாம். அதிலிருந்து அவைகளையே மறுபடி பெட்ரோலாகவும் பண்ணலாமா என்று முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பெட்ரோல் 'சைவ பெட்ரோல்'. இதை எரிப்பதால் முதலில் ஆரம்பித்த கார்பன் டையாக்ஸைடைத் திரும்பப் பெறுவோம் அவ்வளவே. சுத்தம்!. இவை யாவும் பரிசோதனைச்சாலைக் கனவுகள்.

சூரியனே கதி:-


 சூரியன் தான் நமக்கு எப்படியும் கடைசி சரணாக இருக்கப் போகிறது. சூரியன், பத்திரமான தூரத்தில் உள்ள அணு உலை என்று தான் சொல்லலாம். பதினைந்து கோடி கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அணு உலை அதன் சக்தியின் பெரும்பாலான பகுதி விண்வெளியில் வீணாகிறது. அதிலிருந்து ஒரு கடுகளவு தான், மொத்தத்தில் 220 கோடியில் ஒரு பகுதி தான், நமக்குக் கிடைக்கிறது. இதுவே நமக்கு அதிகம்.



இதற்கு இன்றைய ரேட்டில் விலை போட்டால், ஒரு செகண்டுக்கு நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சக்தியைச் சூரியன் நம் பக்கம் அனுப்புகிறது. அதைச் சரியாகச் சிறைப்பிடிக்க முடிந்தால் போதும். யோசித்துப் பார்த்தால் நம் வாழ்வின் அத்தனை சக்திகளும் ஆதாரமாக சூரிய வெளிச்சத்திலிருந்து கிடைப்பவையே. மழை, மேகம், ஆறுகள், நிலக்கரி, பெட்ரோல் எல்லாமே சூரிய ஒளியின் வேறு வேறு வடிவங்கள் தாம். விதிவிலக்கு அணுசக்தி. அணுசக்தி ஆதிநாள்களில் சிருஷ்டி சமயத்தில் ஏற்பட்ட மகா வெடிப்பில் அணுக்கருகள் இருக்கும் துகள்கள் ஒட்டிக்கொண்ட போது சேமித்து வைக்கப்பட்டவை. சிருஷ்டியைக் கலைப்பதில் தான் எத்தனை சிரமம்!.

(1-10-1988 - தினமணியில் காலங்களை கடந்த எழுத்தாளர் சுஜாதா எழுதியது.)




நன்றி: இணைய பகிர்வாளர்களுக்கு.

Jul 26, 2012

காளியடியான்


நாற்புறமும்
நீ
நடுவில்
நான்.

இதுவரை
எனை காத்தவள் 
காளி
இனி 
நீ

காளிக்கும்
உனக்குமான வித்தியாசம்,

காளி கையில் ஆயுதம்
உன் கையில் காதல்.

*


Jul 21, 2012

களவொழுக்கம்




நிறைமாத கர்ப்பிணியின்
நடையைப் போல
தளும்புகிறது
நிரம்பிய ஏரி.

விதவிதமாய் ஒலியெழுப்பி
பயமுறுத்தும் முயற்சியில்
தவளைகள்

கரைக்குள் தவிக்கும்
அலைகளுடன் அலைந்து கொண்டிருக்கிறேன்
நான்.

ஜாமம் நெருங்கிக் கொண்டிருக்கிறதே
தூங்கி போயிருப்பாளோ?




Jun 26, 2012

தினந்தோறும்




காலை எழுந்தவுடன்
காதல்

பின்பு

காசுக்காக கொஞ்சம்
ஓடல்

மாலை முழுதும் மென்
ஊடல்

மாலை மங்கியதும்
........!



Jun 21, 2012

கண்ணி

பிரத்யேகமான இழை கொண்டு
பின்னவில்லை
உனக்கான வலை கண்ணியை.
உன்
பேச்சுக்களிலிருந்தே
பிரித்தெடுக்கிறேன்
உறுதியான நாரிழைகளை.

உனை வெல்ல
என் முதலீடு
வலை பின்னும்
விரல் நுணுக்கம் மட்டுமே.

வலைக்குள் சிக்காத
கலைமான் நீயென அறிவேன், எனவே
பின்னும் முன்னே
உள் வைத்து விட்டேன் உன்னை.

#

Jun 12, 2012

செவத்தா


நிலக்கடலைச் செடிக்கு களை கொத்திக் கொண்டிருந்தாள்.

“செவத்தா நல்லாயிருக்கியாம்மா” வரப்பு வழியில் நின்றபடியே கேட்டேன். எங்க நிலத்துக்கும், அவங்க நிலத்துக்கும் பொதுவான வரப்பு தான் எங்க கிராமத்துக்கு போகும் கொடிவழி. வரப்புகளின் வழியே வளைந்து நெளிந்து செல்லும் பாதைக்கு கொடிவழி என்று பேர்.

மிகுந்த கவனத்துடன் செடிகளை ஒதுக்கி விட்டு களைச்செடிகளைக் கொத்திக் கொண்டிருந்தவள் குரல் வந்த திசையில் திரும்பி பார்த்து தலையில் சுற்றியிருந்த முக்காட்டு துணியை எடுத்து கையில் வைத்துக் கொண்டு,

“கண்ணண்ணனா, எப்பண்ணா வந்த? நல்லாகீரயா?” என்றாள்.

தோற்றமே முற்றிலும் மாறிப்போயிருந்தாள். இவள் தான் செவத்தா என்றால் எங்கள் ஊர் காக்கா குருவிகள் கூட நம்பாது. 

”எனக்கென்னம்மா நல்ல்ல்லாருக்கேன். முந்தாநா வந்தேன். ஒன்றை மாசம் லீவு.”

“புள்ள குட்டிகள உட்டுபோட்டு என்னா வெளிநாட்டு பொழப்போ. காலாகாலத்துல ஊரு பக்கம் வந்து பொழைக்கிறத பாருண்ணா.”

“என்னாம்மா பன்றது? நம்மள பெத்தவங்க தான் இந்த மானம் பாத்த பூமிய நம்பியே இருந்துட்டு நமக்கும் ஒழுங்கான படிப்பு கெடைக்க வழியில்லாம உட்டுட்டாக. எதோ கத்துகின ‘அ’னா, ‘ஆ’வன்னாவ வெச்சி வயித்த கழுவுனா போதுமேன்னு கெடைக்கிற வேலைய செஞ்சி பொழைக்கிறோம். நம்ம பொழப்பு தான் இப்படியாகி போச்சி. புள்ளைகளயாவது நல்ல பள்ளிகோடத்துல படிக்க வச்சி கண்ண தெறந்து வெச்சிரலாமேன்னு தான் அங்க போயி சந்நாசி மாதிரி தனியா கெடக்கறேன்.”

“ஹூம்! என்னமோ. நீ சொல்றதும் மெய்தான். என் கண்ண தான் எங்கப்பன் அம்மாவே குருடாக்கி உட்டுட்டாக. போன காலம் இனி திரும்ப போதா? உடுண்ணா.”

“ஹூம்! நீ ஏம்மா தனியா கள கொத்தினு இருக்கிற. கூலிக்கு ஆளுங்கள கூப்ட்ருக்கலாமில்ல?”.

“இப்பல்லாம் யார்ணா வராங்க? நாசமா போன கெவர்மெண்ட்டுகாரன் நூறுநாளு வேலன்னு ஒன்ன கொணாந்து கொல்லி வேலைக்கி ஆளுக வரவுட்டாம பண்ணிட்டாக. ஒடம்பு வளஞ்சி வேல செய்யினும்னா ஜனங்களுக்கும் வலிக்குது.”

அவள் சொல்வதும் உண்மை தான். இன்னும் கிராமத்தில் ஒட்டிக்கிடக்கும் கொஞ்ச நஞ்ச ஆட்களும் நடையா நடந்து கெஞ்சினாலும் விவசாய வேலைக்கு ஒருத்தரும் வருவதில்லை. நூறுநாள் வேலை திட்டத்தை அறிமுகப்படுத்தி விவசாய வேலைக்கு ஆட்கள் வராமல் கெடுத்து விட்டது அரசு. போதாக்குறைக்கு இலவச அரிசி வேறு. எப்படியாவது “தன் கட்சி” ஆட்சியை பிடித்தாக வேண்டும் என்ற ஆசையில் கண்டதையெல்லாம் இலவசமா கொடுக்க ஆரம்பித்து விட்டது அரசாங்கம். அநேகமாக அடுத்த தேர்தல்களில் இலவச மனைவி, இலவச கணவன், இலவச குழந்தை என தேர்தல் அறிவிப்புகள் வந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை. நான் கூட இன்னும் திருமணப்பதிவு செய்யவில்லை. அடுத்த தேர்தலுக்குப் பின் பதிவு செய்துக்கலாமே!

“அப்பிடிதாம்மா ஆகிப்போச்சி இப்ப. நம்ம கொல்லிலையும் கொஞ்சம் அளவுக்குதான் வெரை போட்ருக்குது. மீதியெல்லாம் கரம்பா தான் கெடக்குது.”

”பாவம்ணா ஒம்பொண்டாட்டி தனியாளா ஒருத்தி புள்ளைகள பாப்பாளா? கொல்லி வேலைய பாப்பாளா? நான் இந்த கொல்லில கல்லக்கொட்ட போடறதுக்கே தம்பி சின்னவன ராவும் பகலுமா கெஞ்சி ஏறு ஓட்ட வெச்சேன். அவன் எப்ப பாத்தாலும் படிக்கிறேன், படிக்கிறேன்னு சொல்லி பொழுத கழிக்கிறான். மத்த நேரமெல்லம் கிரிகெட்டு ஆடறதுக்கு ஓடிர்ரான்.”

”ஆமாம்மா. இந்த காலத்து பசங்களுக்கு படிக்கிறத விடவும் கிரிக்கெட்டு தான் பொழப்பா போச்சி. சொன்னா எவன் கேக்கறான். நாள பின்ன அஞ்சுக்கும், பத்துக்கும் அல்லாடும் போது தெரியும் உடு. நல்லத சொன்னா கேக்கற காலமா இது?”

“வெவசாய பொழப்பு இப்பிடியே போனா சோத்துக்கு வழியத்து சாகப்போது ஜனம். செரிண்ணா. வெகுலு ஏர்ரதுக்குள்ள உன்னம் அமுட்டு கொத்திட்டு ஊட்டுக்கா போறன். நேரங்கெடச்சா புள்ளைகள கூட்டிக்கினு சாயங்காலமா ஊட்டானக்கி வா.”

சரியெனச் சொல்லி விட்டு வீட்டுக்கு நடையை கட்டினேன். ஆடிமாத காற்று சுழற்றி வீசி நெட்டிநெட்டி தள்ளியது. ஆடிக்காற்றுக்கு எதிர்திசையில் நடப்பதுகூட பெரும் சாகசம் தான்.

பாவம் செவத்தா. அவள் தான் எதையுமே எதிர்க்காமல் வாழ்க்கை போகும் திசையிலேயே போய் கொண்டிருக்கிறாள். நக்கீரனே மீண்டும் பிறப்பெடுத்து வந்தாலும் அவளிடம் குற்றங்குறை காண முடியாது. இறை நம்பிக்கை உள்ளவன் நான். ஆனாலும், இவளது வாழ்வை நினைத்தால் மட்டும் இறை என்பது பொய்யோ என்னும் ஐயம் வருவதை தவிர்க்க முடியவில்லை என்னால். வாழைக்கன்று போல இருந்தவளின் வாழ்வு ஆடிக்காற்றில் கிழிந்து தொங்கும் வாழையிலைப் போல மாறிப்போனதைக் கண்டால் யாருக்கு தான் மனம் வெம்பி போகாது?

இளவயது செவத்தா, பெயருக்கேற்றார் போல நல்ல சிவந்த நிறம். அழகும் கூட.  மீசை முளைக்காத முறை பையன்கள் கூட இவள் மேல் காதல் ஆசை கொண்டிருந்ததை ஊரே அறியும். சுறுசுறுப்பில் எறும்பும் தோற்கும் அவளிடம். அம்மாவுடன் சேர்ந்து ஒன்பது மணிக்குள்ளாக அவ்வளவு வீட்டு வேலைகளையும் இழுத்து போட்டு செய்து முடித்து விட்டு, மேய்ச்சலுக்கு ஆடுகளை ஓட்டிக்கொண்டு காட்டுக்கு போவாள். மாலை திரும்பி வரும்போது பெரிய சுமையாக விறகும் சுமந்து வருவாள். உள்ளூரில் சில அத்தைமார்கள் என் வீட்டுக்கு தான் மருமகளாக வரப்போகிறாள் என பெருமையாய் சொல்லிக்கொள்வார்கள். அத்தனை பேர் மனதிலும் அந்தளவிற்கு இடம்பிடித்திருந்தாள். ஆனால் இவள் மனதில் இடம் பிடித்திருந்தவன் எதிர்வீட்டு வெள்ளையன் தான்.

வெள்ளையன் செவத்தாளை விடவும் ஒரு வயது இளையவன். ஆனால் அவன் உடற்கட்டைப் பார்க்கும் போது வயது வித்தியாசம் தெரியாது. பணிரெண்டாம் வகுப்புவரை படித்திருந்தான். மேற்கொண்டு படிக்க வீட்டில் அனுமதிக்கவில்லை. பாவம் கூலிவேலை செய்யும் அவனது பெற்றோர்கள் இன்னும் உள்ள மூன்று பிள்ளைகளையும் படிக்க வைக்கனுமே. அதோடு மட்டுமில்லாமல் அவனது அப்பாவிற்கும், அம்மாவிற்கும் ஏழாம் பொருத்தம். எந்நேரமும் சண்டை தான். அவர்கள் எப்படி ஒன்றாய் படுத்து நான்கு பிள்ளைகள் பெற்றுக்கொண்டார்களோ தெரியவில்லை..

தருமபுரியில் இராணுவத்துக்கு ஆள் எடுப்பதாக செய்தித்தாளில் பார்த்தேன். வெள்ளையனுக்கு நல்ல உடற்கட்டு இருந்ததால் நானும், நண்பர்களும் அவனை இராணுவத்துக்கு முயற்சிக்க சொன்னோம். ஒரு வாரம் ஓடுவதற்கு பயிற்சி எடுத்துக்கொண்டு தருமரி சென்றான். முதல் முயற்சியிலேயே தேர்வாகி விட்டான். எழுத்து தேர்விற்கு சென்னைக்கு வரச்சொன்னார்களாம்.

வந்ததும் என்னிடம் சொன்னான்.

“கண்ணா. அந்த க்ரவுண்ட பாத்ததுமே ஒன்னுக்கு வரமாதிரியாயிடுச்சிடா. எவ்ளோ பெரிய க்ரவுண்டு தெரியுமா? தாயோளிக, நாலு ரவுண்டு ஓட வைக்கிறாக. மூணாவது ரவுண்டு ஓடும்போதே மூச்சு தெணருச்சி. ஒரு செகண்டு  மனசுக்குள்ளாற செவத்தா தெரிஞ்சா. அவளுக்காகவாவது ஜெயிச்சே ஆகனும்னு தம் கட்டி ஓடனேன். செவத்தா புண்ணியத்துல நானும் ஜெயிச்சிட்டேன்.” வெள்ளந்தியாய் சொல்லிவிட்டு என்னைப் பார்த்தான். தொடர்ந்து,

“ஆமாண்டா. அவள தான் கல்யாணம் கட்டப்போறேன். பாவம்டா அவ. ஆடு மேய்க்க பொறந்தவளாடா அவ. எங்கயோ ராஜகுமாரியா பொறந்திருக்க வேண்டியவ நம்ம குடியானவங்க வயித்துல வந்து பொறந்து தொலைச்சிட்டா. ட்ரைனிங் முடிஞ்சி மொத லீவுல வந்ததுமே கல்யாணம் பண்ணிக்க போறேன். இனிமே பட்டாளத்தான் பொண்டாட்டி அவ.” என்றான் உணர்ச்சி வசப்பட்டவனாக.

ஒரு மாதம் கழித்து ராணுவ பயிற்சிக்கு லக்னோ சென்று விட்டான். செவத்தா நல்லவனை தேர்ந்திருக்கிறாள் என என் மனம் அவளை ஆசீர்வதித்தது. ஆனால், அவளது பெற்றோருக்கு தான் அவர்களது வாழ்வை ஆசீர்வதிக்க மனமில்லாமல் போனது. செவத்தாளின் அம்மா ஒரு ராங்கி. வீம்புக்கு “எதோ” செய்வது என்பார்களே. அந்த ரக பொம்பளை தான் அவள்.

வெள்ளையனும், செவத்தாளும் ஒருவரையொருவர் விரும்பும் செய்தி அந்த ராங்கி காதுக்கு எட்டிவிட்டிருந்தது. “போயும் போய் எம்மகள அந்த கூறு கெட்ட குடும்பத்துக்கா குடுக்கப்போறேன். அவுக பொழைக்கிற பொழப்பே ஊரெல்லாம் நாறுது. எம்மவள அந்த குப்பையிலயா கொட்டுவேன். எம்மவளோட அலகுக்கும்,  நெறத்துக்கும் எப்பேர்பட்ட குடும்பத்துல இருந்தெல்லாம் வந்து கேக்கறாக”, என கொக்கரித்துக் கொண்டிருந்தாள்.  “எதும் நல்ல எடமா வந்தா சட்டு புட்டுனு கட்டி வெரட்டலாம் கழுதைய” என கணவனிடமும் சொல்லி சம்மதிக்க வைத்தாள். அவர் ஒரு அப்புறானி.

ஒருமாத காலத்துக்குள் அவசர அவசரமாக பேசி முடித்து ஒருவனுக்கு செவத்தாளை கல்யாணம் கட்ட ஏற்பாடு செய்து விட்டார்கள். மாப்பிள்ளை பற்றி விசாரித்ததில் முப்பது மைலுக்கு அப்பால் எதோ ஒரு ஊரின் பேரைச் சொன்னார்கள். பெங்களூரில் ஆட்டோ ஓட்டுகிறான் என்றார்கள். ஓரளவு சீர் செனத்தியுடன் ஒரு நன்னாளில் கல்யாணம் கட்டிக் கொடுத்தார்கள். ‘கொடுத்தார்கள்’ என்று சொல்வதை விட ‘கெடுத்தார்கள்’ என்று சொன்னால் மிக பொருத்தமாக இருக்கும்.

று மாதம் கழித்து விடுப்பில் ஊருக்கு வந்த வெள்ளையனுக்கு எதிர்க்காலம் இருட்டாய் தெரிந்திருக்கும். அதுவரை நாங்கள் யாரும் அவனுக்கு இந்த செய்தியை தெரியப்படுத்தவில்லை. அவன் கனவுக்கோட்டை சிதிலமடைந்ததை பொறுக்காமல் அன்றிரவு அவன் கொண்டு வந்திருந்த மிலிட்டரி சரக்கை அடித்து விட்டு எங்களை எல்லாம் கெட்ட வார்த்தையால் திட்டித்தீர்த்து ஆற்றாமையால் அழுதான். எங்களால் வெறும் ஆறுதல் மட்டும் தான் சொல்ல முடிந்தது. விடுப்பு முடிந்து மீண்டும் சென்று விட்டான். போய் சேர்ந்ததும் எனக்கு கடிதம் எழுதியிருந்தான். “ செவத்தா நினைப்பாகவே இருக்கிறது. அவள் இல்லாத வாழ்வை நினைத்து பார்க்கும் போதே தூக்கிட்டுச் சாகலாம் எனத்தோன்றுகிறது. ஆனாலும், என்னை நிராகரித்த அந்த குடும்பத்தினர் கண்முன்னே ராஜ வாழ்க்கை வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைரக்கியம், தற்கொலை எண்ணத்தைத் தவிடு பொடியாக்கி விட்டது. வாழ்ந்து காட்டுகிறேன் பார்” என சபதம் போட்டு எழுதியிருந்தான். ”அவர்களை தண்டிக்க அது தான் சிறந்த வழி. உன் லட்சியம் நிறைவேற என் வாழ்த்துக்கள்”,  என பதிலிட்டேன்.

காலம் யாருக்காக காத்திருக்கப் போகிறது சொல்லுங்கள்? அது ரெக்கைக்கட்டி பறந்து கொண்டு தான் இருந்தது. நண்பர்கள் தன் பிழைப்புக்காக ஆளுக்கொரு திசையில் பறந்தார்கள். எல்லோரும் மீண்டும் எப்போது ஒன்றாய் கூடிக்களிப்போமோ! காலம் தான் பதில் சொல்ல வேண்டும். காலச்சுழற்சியில் சிக்கி செவத்தாவின் பெற்றோர்களும் நொடித்து போனார்கள். ஒழுகும் வீட்டிற்கு கூரைக் கூட மாற்ற முடியவில்லை அவர்களால். ஊர் மாறி விட்டது. மக்கள் மாறிவிட்டார்கள். செவத்தாளின் வாழ்க்கை விசயத்தில் தான் தவறு செய்து விட்டதை அவளின் அம்மா கூட உணர்ந்தவளாகி விட்டாள் என்றால் பாருங்களேன்.

எப்போதாவது கணவனுடன் செவத்தா ஊருக்கு வந்து போவாள். பார்க்கும் சந்தர்ப்பங்களில் வெள்ளையன் பற்றி விசாரிப்பாள். கண்களை துடைத்துக் கொள்வாள். யார் செய்த பாவமோ, செவத்தாளுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போனது. அவளது கணவன் பெங்களூரிலேயே ஆட்டோ ஓட்டி வருவதாகவும்,  இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கொரு முறை ஊருக்கு வந்து போவதாகவும், தன்னை அன்பாக கவனித்துக் கொள்வதாகவும் சொல்வாள். குழந்தைப் பேற்றுக்காக மருத்துவ சோதனை செய்து கொண்டார்களா எனத் தெரியவில்லை.

வெள்ளையனும் உள்ளூரிலேயே ஒரு கரியநிற தேவதையொருத்தியைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொண்டான். அந்த பெண்ணும் சிறந்த குணவதி தான். அவர்களுக்கு இரு குழந்தைகள். பழைய வீட்டை இடித்து விட்டு இரண்டடுக்கு மாடி வீடு கட்டியிருக்கிறான். வீட்டிற்கு வெள்ளைநிற பெயிண்ட் தான் அடித்திருக்கிறான். பார்க்க மாளிகைப்போல் தோற்றமளிக்கிறது.

நானும் வேலை கிடைத்து வெளிநாட்டிற்குச் சென்று விட்டேன்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. அம்மாவிற்கு போன் செய்த போது செவத்தாளின் கணவனை எங்கோ அநாதைப் பிணமாய் கண்டெடுத்ததாகவும், அவர் தனக்கு எய்ட்ஸ் நோய் இருந்த செய்தியறிந்து தற்கொலைச் செய்து கொண்டு இறந்து போனதாகவும், அதன் பின் தாலியருத்து அனைத்து சடங்குகள் முடிந்ததும் அந்த ஊர் பெரியவ்ர்கள் கூடி செவத்தாளுக்கு குழந்தையும் இல்லை, கணவனும் இல்லை என்பதைக் காரணம் காட்டி அம்மா வீட்டிற்கே அனுப்பி வைத்து விட்டதாகவும் சொல்லி முடித்தாள் எனது அம்மா. செவத்தாளின் வாழ்வு சூன்யமாகிப் போனதைக் கேட்டு ஒரு பாவமும் அறிந்திராத அந்த பெண்ணுக்கு மட்டும் ஏன் இத்தனை சோதனைகளோ என புழுங்கியது என் மனம்.

அடுத்தடுத்த வருடங்களில் செவத்தாளின் பெற்றோர்களும் இறந்து விட்டார்கள். அவளது கணவன் எய்ட்ஸ் நோயால் இறந்து போன காரணத்தால் அவளுடன் யாரும் சரிவர பேசுவதும் பழகுவதும் கிடையாது. அவளுக்கு அந்நோய்தொற்று இருக்குமோ இல்லையோ இன்று வரை அவளுக்கே தெரியாது. யார்யாரோ சொல்லிப் பார்த்தும் மருத்துவச் சோதனை செய்ய ஒப்புக்கொள்ளவில்லை அவள். நான் நோயற்றவள் என்று யாருக்கு நிரூபிக்க வேண்டும்? என்ற கேள்வியுடன் எளிமையாக மறுத்துவிடுவாள். இத்தனை இழப்புகளுக்கு பின்னும் இன்னாரால் தான் என் வாழ்வு கெட்டது என்று ஒருவரையும் சுட்டிக்காட்ட முனையவில்லை அவளின் சுட்டு விரல். இப்போது அவளின் இரண்டு தம்பிகள் சென்னையில் பேக்கரியில் வேலை செய்து வருகின்றார்கள். கடைசி தம்பி படிக்கிறான். அவர்களுக்காகத்தான் மாடாய் உழைக்கிறாள் இப்போதும். அவர்களுக்கு அவள் தான் எல்லாமும். ஆனால் அவளுக்கு?!

செவத்தா இன்னும் அந்த பழைய கூரை வீட்டில் தான் வசிக்கிறாள். எப்போதும் என்னை குடையும் ஒரு கேள்வி, படிக்கும் உங்களையும் ஒருமுறை குடையட்டும். எதிரே இருக்கும் வெள்ளையனின் மாளிகை வீடு இயல்பாய் தூங்க விடுமா செவத்தாளை? அல்லது எதிர்வீட்டு குடிசையை எதார்த்தமாய் பார்க்க நேரிட்டாலும்  நிம்மதியாய் தூங்க முடியுமா வெள்ளையனால்?

இவள் வாழ்வை படித்த பின்னும், உங்கள் பிள்ளைகளின் வாழ்விற்காக அனைத்து முடிவுகளையும் நீங்களே தான் எடுப்பீர்கள் என்றால், எக்கேடாவது கெட்டுப் போங்கள்.

இன்னொரு செவத்தா கதையை எழுத தெம்ப்பில்லை எனக்கு.

# # #
நன்றி: ‘அதீதம்’ இணைய இதழ்.

May 30, 2012

ஆலிங்கனா-02



முதலில் இதை படியுங்கள் ஆலிங்கனா-01

க்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் சுட்டெரிக்கிறது. வீட்டுக்குள் அடைபட்டிருக்க முடியவில்லை. ஊரை ஒட்டியிருக்கும் ஏரியின் பக்கம் சென்று குளிர்க்காற்றை தழுவி வரலாம் என கிளம்பி விட்டேன். ஒருமுறை நாம் அங்கே சென்றிருந்தபோது கடல்போல் காட்சி தந்து நம்மை மிரட்டிய நீர் நிரம்பிய ஏரி இல்லை இது ஆலிங்கனா. ஏரியின் அடி மடியில் மட்டும் நீர் ஒட்டியிருக்கிறது நீ இல்லாத நான் போல!

அந்த கொஞ்ச நீரையும் வெயில் குடித்துவிடக்கூடாதென மரகதப்போர்வை போர்த்தியிருக்கிறது பாசி (அலைதாவரம்). நீரின் போர்வையை உதறி போர்த்தத் தோன்றியது எனக்கு. சற்றே பெரிய கல் ஒன்றை தூக்கி நீரில் வீசினேன். கல் விழுந்த இடத்தில் துள்ளி தெரித்த நீர், ஆழ் தூக்கத்திலிருந்து பதறியெழும் பச்சிளங்குழந்தையாய் தெரிந்தது. அவ்விடத்தில் பாசி சற்றே விலகி பின் மெதுவாய் போர்த்தியது நீர் பரப்பை. அதை கண்டதும் நொடியும் தாமதிக்காமல் உன்னைத்தேடி ஓடியது மனம் ஆலிங்கனா.

முன்பொருமுறை இங்கே நாம் வந்திருந்தோமெனச் சொன்னேனே, அன்று நீ சரிகைநெய்த அரக்குநிற பார்டர் வைத்த பச்சைநிற பாவாடையும், அதே நிறத்தில் ரவிக்கையும், மாம்பழ மஞ்சள் நிறத்தில் தாவணியும் உடுத்தி வந்தாய். அநேக கோயில்களில் அம்மன் சிலைகளுக்கு இந்த நிற உடைகள் தான் பிரசித்தம். அன்றெனக்கு அலங்காரமற்ற அம்மன் போல் தெரிந்தாய் நீ. இருவரும் எதிரும் புதிருமாய் கால்கள் நீட்டி அமர்ந்திருந்தோம். நீரலையைத் தழுவி வந்த காற்று எதிர்பாராத நொடியொன்றில் உன் பாவாடையை கெண்டைக்கால் தெரிய உயர்த்திவிட உயிர் போனதைப் போல் பதறிய நீ, பளபளக்கும் உன் கால்களை கள்ளத்தனமாய் திண்ணும் என் கண்களைக் கண்டதும் பசியாறி போகட்டுமென்றோ என்னவோ மெதுமெதுவாய் பாதம் வரையில் இழுத்து மூடியது நினைவில் ஊர்கிறது.

என்னை என்னென்னெ செய்ய தீர்மானித்திருக்கிறதோ உன்னை அபகரித்துக்கொண்ட இந்த இயற்கை! உன்னை ஏன் இந்த அளவிற்கு காட்சிபடுத்துகிறது என் மனமும், கண்ணும்? என் கண்களை குருடாக்கிக் கொண்டு பைத்தியாமாகி யாரும் அறியாத தொலைதூரத்திற்குப் போய்விட வேண்டும் ஆலிங்கனா. கண் போனால் என்ன? மனக்கண்ணில் நீ இருக்கிறாய் அது போதாதா எனக்கு? கண் தெரியாத நான் உன் கரத்தினைப் பற்றிக்கொண்டு என் ஜீவன் சொட்டுச்சொட்டாய் வற்றி முற்றுமுழுதாய் அற்று போகும் வரை உன் பின்னாலேயே நடந்து அலையவேண்டும்.

உன்னைச்சேர முடியாது போன என் ஆற்றாமை உக்கிரமடைந்து இப்போது உன்னைத் திட்டச்சொல்லி தீச்சொற்களை உதடு நோக்கி உந்தித் தள்ளுகிறது அடிவயிறு. உதடுவிட்டு வெளியேற முடியாமல் நெஞ்சுக்கூட்டில் சுற்றிச் சுழல்கிறது கெட்டவார்த்தைகள். உனக்கு கேட்கும்படி ஒரேயொரு முறை உரக்க திட்டிவிடுகிறேன் உன் செவி கொடு ஆலிங்கனா.

“ என்னை விட்டு எங்கேடி போய் தொலைந்தாய் வேசிமகளே?”.

ஹ்ம்ம்! மனம் லேசானது போல் உணர்கிறேன் ஆலிங்கனா. நீ நல்லவள். உன்னை திட்டியிருக்கக் கூடாது. நான் முரடன். முட்டாள். இத்தனைக் கேவலாமான திட்டினை வாங்கிக்கொண்டும் ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்து என்னை நோக்கி கரம் நீட்டும் பேரன்பு உன்னைத்தவிர யாரால் புகட்ட முடியும்? அனல் பட்ட வெண்ணை போல என் நெஞ்சம் உன் பாதம் நோக்கி நெகிழ்ந்து வழிகிறது. வேசிமகளே என்ற சொல் உன்னை வேதனை படுத்தவில்லையா ஆலிங்கனா? நீ என் போற்றுதலுக்குரியவள். கொஞ்சம் பொரு. உன்னை அர்ச்சிக்க ஏதேனும் பூக்கள் பறித்து வருகிறேன்.

ஐயோ...இந்த கடவுள் துரோகி ஆலிங்கனா. உன்னை பூசிக்க உகந்த மலர் ஒன்றுமே இவ்வுலகத்தில் படைக்காமல் விட்டிருக்கிறான் பாவி. கடவுளின் முகத்தில் காரி உமிழத்தோன்றுகிறது. நீயே சொல், என் கோபம் நியாயமானது தானே? நான் சூடவும் நீயில்லை.நீ சூடவும் ஒரு பூவில்லை. உன் பூசைக்கும் இங்கே பூக்களில்லை எனும்போது இப்பூமியை படைத்தவன் மேல் கோபம் கொள்ளாது வேறு யாரை சாடட்டும் நான்?

#



May 24, 2012

தோற்றவனுக்காக



தேர்வில் தோல்விக்கு
உயிர் துறக்க துணியும் மூடா
என்னிடம் உன்
செவியைக் கொஞ்சம் தாடா.

உறைக்குள் உறங்கும் உடைவாளுக்கு
உதிரச்சுவை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
மதியென்னும் உடைவாளை விதி என்னும்
உறையிட்டே வைத்திருக்கிறாய் நீ.

உருவியெடு உடைவாளை
வெட்டி வீழ்த்து விதிகளை
வெற்றி உன்னை சுற்றிச்சுற்றி
வட்டமிடும் பார்.

உலகத்துக்கானவன் அல்ல நீ
உனக்கானது இவ்வுலகு என்பதை உணர்
வெற்றிச்சிகரத்தைத் தொடாமல்
நெற்றிக்கண்ணை உறங்கவிடுவதில்லை என
உறுதி கொள்
உச்சிதனை முகரும் உறவுகள் பார்.

புரவி ஏறி புழுதி பறக்க விரைந்து
போரிட்டு உலகை வெல்வது கடினம்
காலம் மாறிவிட்டதை கவனி
விரல் அசைவில் நீ வெல்ல முடியும் உலகை
அவ்வித்தை கற்கச் செல்ல வேண்டிய இடம் கல்விச்சாலை

இன்று தோற்றால் தான் என்ன
மீண்டும் பயிலச் செல்
நாளை கனவுகளை வெல்.




May 7, 2012

பரு காட்டி விரல்


இளம் இருளில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அரும்பும்
விண்மீன் போல
அவளின்
இளங்கறுப்பு கன்னத்தில்
ஒன்றிரண்டு
பருவ பருக்கள்.

அதை
அடிக்கடி தொட்டுத் தடவும்
அவளின்
ஆள்காட்டி விரல்
எனக்கு மட்டும்
பரு காட்டி விரலாக
தெரிவதேன்?

#



May 2, 2012

தாய்ப்பசு


கண் தானம்
சிறந்தது தான்.
என்றாலும்

என்
கண்களை தானம்
வழங்கும் அனுமதியை
நீங்கள்
அவளிடம் தான் கேட்க வேண்டும்.

*

தாய்ப்பசு
அவள்.

இளங்கன்று
நான்.

விளையாடச் செல்லும்
வேளைகளில்
தடுமாறிடுவேனோ என
எப்போதும் அச்சத்துடனே இருக்கிறாள்.

எங்கு சென்றாலும்
அவள் மடி தேடி வருவேன் என்பதை மறந்து.

**




Apr 25, 2012

பொய்க்கனி-01


வளுக்கு போன் செய்து நாளைக்கு சிங்கப்பூர் புறப்படுகிறேன் என்றேன். விடுப்பு முடிஞ்சதா என்றாள். ஆமாம் என்றதும், எத்தனை மணிக்கு விமானம் என்றாள். இரவு 11.45 மணிக்கு என்றேன். ஏனோ மௌனம் காத்தாள். ஹலோ சொல்லி மௌனம் கலைத்தேன். விமான நிலையம் வரை நானும் வரவா எனக் கேட்டாள். இந்தியா வரும் போது அவசியம் சந்திக்க வேண்டும் என்று ஏற்கனவே சொல்லியிருந்தாள். நானும் சந்திப்பதாய் உறுதி கூறியிருந்தேன். ஆனால், குறுகிய கால விடுப்பு என்பதால் அவளைச் சந்திக்க நேரம் அமையாமல் போய் விட்டது. சந்திக்க முடியாமலேயே போய் விடுமோ என்ற எண்ணத்தில் தான் அவள் அப்படி கேட்கிறாள் என புரிந்தது.சரி வா என்றேன்.

ஒவ்வொரு பயணத்தின் போதும் என்னுடன் விமானநிலையம் வரை வந்து வழியனுப்பிச் செல்லும் நண்பனை இம்முறை தவிர்த்தேன். வீட்டிலிருந்து புறப்படும் நேரத்தை அவளுக்காக மாற்றிக் கொண்டேன்.

லைப்பூ வாசிப்பில் கிடைத்த தோழி அவள். அவளது எழுத்துக்களை வாசிக்கும் போது மெல்லிய பிரமிப்பும், படைப்புடன் ஒரு நெருக்கமும் வாசகர்களின் மனதினுள் ஊடுறுவுவதை யாரும் மறுக்க முடியாது. எழுத்து அவளின் முன்ஜென்ம ஆற்றல் போல! ஆனால் ஏகத்துக்கும் எழுத்துப்பிழை இருக்கும். அது பற்றி குறிப்பிட்டுதான் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். அப்படி தான் ஆரம்பித்தது அவளுடனான பழக்கம்.மின்னஞ்சல் தொடர்பு நாளடைவில் தொலைபேசி தொடர்பாக மாற்றம் கண்டது. பிறரது கவிதைகள், கட்டுரைகள், எழுத்துலக ஜாம்பவான்களின் படைப்புகள் என பலதும் பேசுவோம்.

ஒருமுறை அவளது கவிதைளில் சில குறுந்தொகையை ஞாபகப்படுத்துவதாய் சொன்னேன். குறுந்தொகை படித்ததில்லை என்றாள். சுஜாதாவின் ‘401 காதல் கவிதைகள்’ நூலைப் படிக்க பரிந்துரைத்தேன். பின்பொரு நாள் ஜெ.மோ-வின் ‘சங்கச் சித்திரங்கள் ’ பற்றி சொன்னேன். சரி வாசிக்கிறேன் என்றாள்.

ஒருநாள் பேசிக்கொண்டிருந்த போது உங்கள் வயதென்ன என்றேன். நாற்பத்தியிரண்டு, முதிர்கன்னி, சொற்ப வருமானம் தரும் வேலை, தனிமையாய் ஒரு சிறிய வாடகை வீட்டில் வசிக்கிறேன் என ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள். அவளிடம் பலரும் இந்த பதிலுக்கான கேள்விகளை தவணை முறையில் கேட்டிருக்கக்கூடும். இவளும் தவணை முறையில் பதில் சொல்லி அலுத்திருக்கக் கூடும் என்று நினைத்துக் கொண்டேன்.

ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றதற்கு காதல் தோல்வி என்று ஒற்றை வரி பதிலில் என் வாயடைத்து விட்டாள். உலகம் தெரியாத பெண்ணோ இவள் என நினைத்துக் கொண்டேன். ஒருமுறை காதலில் தோற்றதற்காக ஒரு பெண் வாழ்வை வீணடிப்பாளா?. அந்த காதல் அனுபவம் பற்றி மேற்கொண்டு எதையும் நான் கேட்கவில்லை. அவளும் சொல்லவில்லை.

கரப் பேருந்து நிலையத்தில் இறங்கி எதிரேயிருந்த கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கி கொண்டு அவளுக்கு போன் செய்தேன். பூக்கடை அருகிலிருந்து என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள். புன்னகைத்துக் கொண்டோம். சென்னை செல்லும் பேருந்து ஒன்று புறப்பட தயாராய் இருந்தது. ஏறி இருவர் அமரும் இருக்கையில் அமர்ந்துக் கொண்டோம். பயணம் தொடங்கியது.

முதல் சந்திப்பு இது. தொலைபேசியில் எவ்வளவோ பேசியிருந்தாலும் நேரில் பார்த்ததும் சொற்கள் மௌனம் சாதித்தது. மூடியைத் திறந்து தண்ணீர் பாட்டிலை நீட்டினேன். குடித்தாள். எப்படியிருக்கீங்க என்றாள். ம் இருக்கேன் என்றேன். போனில் பேசும் போது ஒருமையில் தானே பேசுவ, இன்னைக்கு என்ன ‘ங்க’ சேர்ந்து வருது என்றேன்.சிரித்தாள். சரி இனிமே ‘ங்க’ சேர்க்கல. போதுமா என்றாள்.

“ம் சொல்லு, எதுக்காக வந்த?” 

 “பாக்கனும்னு இருந்துச்சி”

“அதுக்கு பஸ் ஸ்டாண்ட்லயே பாத்துட்டு போயிருக்கலாமே. ஏர்போர்ட் வரைக்கும் வரவான்னு கேட்டியே எதுக்கு?”

“தெரியல. அடுத்து எப்ப வருவியோ? இந்த சந்தர்ப்பத்தை விட்டா ஒருவேளை பாக்க முடியாம கூட போகலாம் இல்லியா?”

அவளது முகத்தைப் பார்த்தேன். அவள் ஜன்னலுக்கு வழியே எதையோ பர்த்தாள்.

“ஏன் முகம் பாத்து பேசமாட்டியா?”

“முகம் பார்க்க முடியல”

“அவ்ளோ கோரமாவா இருக்கு எம்மூஞ்சி?”

“ச்சே! அப்படியில்ல. உன் கண் பார்க்க கூச்சமா இருக்கு.”

“ஹலோ, ஆளுங்களோட பழகும் போது எப்பவும் கண்ணைப் பாத்து பேச கத்துக்க.”

“ம்ம்”

“என்ன ம்ம்? எம் பக்கம் திரும்பு.”

ஜன்னல் பக்கமிருந்து பார்வையை விலக்கவேயில்லை. அவளின் பின்னந்தலையில் கை வைத்து முகத்தை என் பக்கம் திருப்பினேன். கண்களில் நீர் துளிர்த்திருந்தது. அதற்கான காரணம் எனக்கு தேவையில்லை. உங்களுக்கும் தான் என நினைக்கிறேன். காற்றில் கலைந்து காதோரம் அலைந்த கூந்தல் இழைகளை காதிடுக்கில் ஒதுக்கி விட்டாள். விரல்களுக்கு மருதாணியிட்டு நாளாகியிருந்தது போல. நகங்களில் பாதியளவிற்கு தான் சாயமிருந்தது.

“ரொம்ப சந்தோஷமா இருக்கு”, என்றாள். ‘ம்’ என்றேன்.

“முன்ன பின்ன தெரியாத ஒரு ஆம்பிளையுடன் போறேமேன்னு பயமில்லையா உனக்கு?”

“துளியும் இல்ல.உன்னால எனக்கு எந்த ஆபத்தும் இருக்காது”

“எதை வச்சி அப்படி சொல்ற?”

“உன் மனைவிக்காக நீ எழுதியிருக்கும் கவிதைகள். மனைவியை அவ்வளவு நேசிக்கிற உன் மனசுல இன்னொருத்திக்கு ஆபத்து ஏற்படுத்தற எண்ணமோ, இன்னொருத்திக்கான இடமோ இருக்காது. அதான் எனக்கு தைரியம் குடுத்தது.”

அவள் அப்படிச் சொன்னதும் என் மனைவி மேலுள்ள காதல் இன்னும் அதிகமானது. அதே நேரம், இவள் மீதான நேசயிழையொன்று மனதின் ஓரம் வேர்விட்டிருந்ததையும் சொல்லியே ஆகவேண்டும்.

“சரி இப்ப சொல்லு. ஏன் கல்யாணம் பண்ணிக்கலை?”

“எனக்கு பத்தொன்பது வயசிருக்கும் போது அடிக்கடி வயித்து வலி வந்துட்டே இருந்தது. ஹாஸ்பிடல் போய் செக் பண்ணப்ப கர்ப்பபையில எதோ கட்டி இருக்கிறதாவும், கர்ப்பபையை எடுத்தா தான் உயிர் பிழைக்க முடியும்னு டாக்டர் சொல்லிட்டாங்க. உயிர் பிழைக்கனுமே! அதான் அதை நீக்கிட்டோம்.

இதை காரணம் சொல்லி என்னை விரும்பினவரு விட்டு விலகிட்டாரு. அதுக்கப்புறம் ஒன்னு ரெண்டு பேர் பெண் கேட்டு வந்தாங்க. வர்றவங்க கிட்ட இந்த விசயத்தை நான் மொதல்லயே சொல்லிடுவேன். ஏன்னா, யாராயிருந்தாலும் வாழையடி வாழையா தன் வம்சம் தழைக்கனும்னு தானே நெனைப்பாங்க. என்னால அது முடியாதுன்னு தெரிஞ்சும் ஏன் மறைக்கனும்? வயசு ஏறயேற பெண் கேட்டு யாரும் வரலை. அப்பாவும், அம்மாவும் ஒரு விபத்துல... அவங்க இப்ப இல்ல!”

இப்போது என் கண்களில் நீர் முட்டியிருந்தது. அவளுக்குத் தெரியாமல் லாவகமாக துடைத்துக் கொண்டேன்.

“கர்ப்பபை இல்லைன்னா என்ன? இப்போதான் அறிவியல் எவ்வளவோ முன்னேறி இருக்கே. வாடகைத்தாய் மூலமா குழந்தை பெத்துக்க வழியிருக்கே!” 

“ஒருவேளை உங்களுக்கு கல்யாணமாகறதுக்கு முன்ன நாம சந்திச்சிருந்தா நீ சொல்றது நடந்திருக்குமோ, என்னவோ?

இந்த பதிலை அவளிடமிருந்து நான் எதிர்பார்த்திருக்கவில்லை.

“உன் கையை தொட்டு பாக்கட்டுமா?”

எனது விரல்களும் விரும்பியது.

என் கையை மெல்ல அவள் மடிமீது வைத்தேன். கையினை மெதுவாக பற்றிக் கொண்டாள். அவளின் உள்ளங்கை வியர்த்திருந்தது. என் விரல்களைப் பிடித்து நகங்களை அழுத்திப் பார்த்தாள். விரல்களுக்கிடையில் விரல் கோத்து இறுக்குவதும் தளர்த்துவதுமாய் இருந்தாள். புது உலகமொன்று அவள் கைகளில் கிடைத்திருப்பதாய் நினைத்துக் கொண்டாள் போல!

தொடர்ந்த பயணத்தில் தொடர்பற்ற எதையெதையோ பேசிக்கொண்டே வந்தோம். பேருந்து கோயம்பேடு வந்து சேர்ந்தது. அவள் திரும்பிச் செல்வதற்கான பயணச்சீட்டை முன்பதிவு செய்து விட்டு உணவகத்திற்குச் சென்று சாப்பிட்டோம். ஆட்டோ பிடித்து விமான நிலையம் புறப்பட்டோம்.

சென்னை விமான நிலையம்.

பிரிவுநேரம் நொடிநொடியாய் நெருங்கிக் கொண்டிருந்தது. ஏதாவது பேசுங்களேன் என்றாள். வாழ்க்கை துணை பற்றிய தேவையைச் சொன்னேன். யாரையாவது மணமுடித்துக் கொள் என்றேன். அவள் கையால் என் வாயை மூடினாள். புரிந்தது.

“அதை நான் முடிவு செஞ்சிக்கிறேன். நீ ஊர் போய் சேர்ந்ததும் போன் பண்ணு. தினமும் போன் பண்ணி கொஞ்ச நேரம் பேசு. எத்தனையோ கோடி பேர் வாழும் இந்த பூமியில நீயாவது என்னோடு தொடர்பில் இரு. உன் அன்பு என் ஆயுளை இன்னும் கொஞ்சம் நீட்டிக்கும் போல இருக்கு. இதை மட்டும் செய் எனக்காக”,என்றாள்.

விமானநிலையத்தினுள் நுழைந்தேன்.

உள்ளே சென்று மீண்டுமொரு முறை அவளை திரும்பிப் பார்த்தேன். அவளது கன்னத்தில் வழிந்திருந்த நீர்த்தடத்தில் மின்விளக்கொளியும் வழிந்துக்கொண்டிருந்தது. போய் வா என்னும் தோரணையில் கையசைத்தபடி நின்றிருந்தாள்.

அசையும் அவளின் கை உங்கள் மனதை ஒன்றும் செய்யவில்லையா?

#

Apr 16, 2012

ஆலிங்கனா-01

நீ இன்னும் என்னுடன் தான் இருக்கிறாய்.

இதைச் சொன்னால் யாரும் நம்ப மறுக்கின்றார்கள் ஆலிங்கனா. எனக்கு நீ என்பது உன் புகைப்படம் தான். மறுப்பவர்களுக்கு அது புரியாது இல்லையா?. பாவம் அவர்கள், விடு.

கறுப்பு வெள்ளை புகைப்படம் அது. நீ பத்தாம் வகுப்பு படித்த போது ‘ஹால் டிக்கெட்’டுக்காக எடுத்ததெனச் சொன்னது காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. சீராக பின்னிய இரட்டைஜடை, வெள்ளை ரவிக்கை, நீலநிற தாவணி இந்த உடையில் தான் உன்னை அதிகம் பார்த்திருக்கிறேன். இந்த கறுப்பு வெள்ளை படத்தைப் பார்க்கும் போதும், முன் சொன்ன வண்ணங்களே  என் கண்ணில் வந்து ஒட்டிக்கொள்கிறது. நேரில் உன்னைப் பார்த்த போதெல்லாம் ‘சீருடை தேவதை நீ’ என நான் நினைத்துக் கொள்வதை, ஒருமுறை உன்னிடம் சொல்லிய போது மெலிதாய் முறுவல் செய்தாய். கண் ஒரு அதிசய படக்கருவி ஆலிங்கனா. எப்போதோ கண்டதையெல்லாம் இன்னும் சேமிப்பில் வைத்திருக்கிறது பாரேன்.

கோடைக்காலத்தில் ஒரு மழைநாளுக்கு அடுத்த நாள் மாலை என்னைப் பார்க்க வந்திருந்தாய். பேசிக்கொண்டே நம் நிலத்தைச் சுற்றிப்பார்க்கச் சென்றோம். அங்கே ஈரமண்ணில் ஓணான் ஒன்று வளை தோண்டி அதில் முட்டையிடுவதைக் காட்டினேன். அதுநாள் வரை கண்டிராத நீ அதைக்கண்டு வியந்து கண்களை அகலத்திறந்து என்னை பார்த்தாயே ஒரு பார்வை, வியப்பு தளும்பிய அந்த பார்வையில் தான் என்னை முழுதும் உள்ளிழுத்துக் கொண்டு விட்டாய். அந்த சந்திப்பில் தான் உன் புகைப்படத்தையும் கொடுத்துப் போனாய். அதே இடத்தில் தான் இப்போது புதுவீடு கட்டியிருக்கிறேன் ஆலிங்கனா. உனக்கான கோயில் அது.

ஊர் அடங்கிவிடும் அர்த்தஜாமத்தில் உன்னைத்தேடி அலைகிறது என் ஆன்மா. வறண்ட காட்டில் வழி தவறிய ஒருவன் அலைந்து அலைந்து சோர்வுற்று, தொண்டை வறண்டு தாகம் தாளாது தண்ணீருக்குத் தவிக்கும் ஜீவ போராட்டத் தருணங்களில் உமிழ்நீரையே உருட்டி உருட்டி விழுங்கி இன்னும் சிலநொடி உயிர்வாழ முயல்வதைப் போல, உன்னைத்தேடி தவிக்கும் என் ஆன்மாவிற்கு உன் நினைவுகளைத் தந்து சமாளித்து வருகிறேன் ஆலிங்கனா. இன்னும் எத்தனை காலத்திற்கு இது சாத்தியம் என தெரியவில்லை எனக்கு.

நீ கேள்வியுற்றதுண்டா? கர்ப்பமுற்ற பெண்ணொருத்தி யாரை அதிகமாக நினைத்துக் கொண்டிருக்கிறாளோ அவரின் சாயலில் குழந்தை பிறக்கும் என்றொரு நம்பிக்கை கிராமப் புறங்களில் உண்டு. மணமான இரண்டாம் மாதத்தில் என் மனைவி கர்ப்பமுற்றாள். திருமணத்துக்குப் பின்னும் கூட நான் சதாசர்வ நேரமும் உன்மத்தம் பிடித்தவன் போல உன்னையே நினைத்துக் கொண்டிருந்தேன். கர்ப்பம் சுமந்தவள் என் மனைவி. உன்னை நினைவில் சுமந்துக் கொண்டிருந்தவன் நான். இதோ என் மகள் வளர்ந்து, குமரியாய் நிற்கிறாள் எதிரே. உன்னை நினைவூட்டும் முகச்சாயல் அவளுக்கு!

என்ன விந்தை இது ஆலிங்கனா?

நன்றி: தமிழ்அரசி & “அதீதம்” இணைய இதழ்.

“முகவரியற்ற கடிதங்கள்” என்னும் தலைப்பில் தமிழ் புத்தாண்டு 2012 இதழில் வெளிவந்திருக்கிறது.
*

Apr 9, 2012

தீயாடல்


தேய்பிறைக் காலம்.

பின்னிரவு.

நிலா
துழாவிப் பார்த்து கடந்திருக்கிறது
நம் மொட்டை மாடியை.

இனியெப்பவும்
வெளியூரில் ராத்தங்கல்
கூடாது நமக்கு.

*

தீ
நிரம்பிய
குளம்
நீ.

தீயாட வேண்டும்
நான்.

**


Apr 3, 2012

மைக்காரி



நம்மூர்
கோயில் திருவிழா நிறைவடைந்தது.
நம்முள்
காதல் திருவிழா ஆரம்பமானது.

திருவிழாவுக்கு வந்த
நம் உறவுகளெல்லாம்
ஊருக்குப் புறப்பட்ட
அன்றைய காலையில்...

என் அறைக்கு ஓடிவந்து
கண்ணாடிக்கு முன் நின்று
கண்ணுக்கு மையிட்டு
நுனிவிரலால் தொட்டெடுத்து
திருஷ்டியாய் கண்ணாடிக்கும்
வைத்துவிட்டுச் சென்றுவிட்டாய் .

அன்றிலிருந்து.....

கண்ணாடி
முன்பாக நான் நின்றால்
முன்னாடி
பிம்பமாக நீ தான் தெரிகிறாய்.

உண்'மையைச் சொல்லேன்.
அன்று நீ
கண்ணாடிக்கு வைத்து போனது
வெறும்
கண் ‘மை’ தானா?



Mar 30, 2012

காக்கி நிற நாய்கள்



மலம் தின்னும் 
மடையனுக்கு பேர்

“சந்தன பாண்டியன்”

(சந்தனம்-னா மணக்கனும் சார். 2 நாளா உன் பேர் நாறுது.)


ஆசிரியர்கள் மீது தாக்குதல் டிஎஸ்பி 




Mar 26, 2012

ஒரு சொட்டு உயிர்


யார் யாரோ கூடிநின்று
விரலில் தொட்டு
புகட்டிக் கொண்டிருக்கிறார்கள்
இறுதி பால்.

அவளது
துவண்ட மார்பிலிருந்து பிழிந்த
ஒரேயொரு சொட்டுக்காக வேண்டி
இழுத்துக் கொண்டிருக்கிறது இன்னும்.

பெண்
உணர்த்திய
முதல் சுவை அது
இறுதிச் சுவையும் அதுவாகவே
இருக்க ஆவன செய்து

ஆனந்தமாக
ஆவியாக விடுங்கள் என்னுயிரை!



Mar 12, 2012

அவளுக்கு அமுதென்றும் பேர் - 06



பேசிப்பேசி
இமைகளின் மேல்
இமயக்கனவை
ஏற்றி விட்டு
நள்ளிரவு ஆகிப்போச்சு
“உறங்கு போடா” - என
இரக்கமற்ற சொல் உதிர்க்கும் அவளின்,
தீயில் 
ஊறிய 
பலாச்சுளைகளை
என் செய்வேனோ
தொலைதேசத்தில்
இருந்தபடி?


***


இரும்புக் கொல்லனின்
நெருப்பு உலையை எரிக்கும்
தோல் துருத்தியின் காற்றைப்போல

எரிக்கிறது
என் இரவுகளை
தொலைபேசியில்
துளைத்து வரும்
ஒருத்தியின்  ஏக்க மூச்சுக்காற்று .

***



Mar 5, 2012

துணை

ஆளரவமற்ற மதியவேளை
ஏரிக்கரை.

சலனமற்ற நீர் பரப்பில்
தலைக்கீழாய் தவமிருக்கிறது
தரை பிம்பங்களுடன்
என் பிம்பமும்.

நீரமைதியில்
லயித்திருந்தேன் நான்

எலந்தைக் கிளையிலிருந்து
ஏதோ விழுந்தது நீரில்.
கண் திறவாத
அணில் குட்டி அது.

நீருக்குள்
நெடுமரமாய் இறங்கி
மீட்டு விட்டேன்
குட்டி அணிலை.

கூட்டில்
விட்டுச்செல்ல மனமில்லை.
என்
கூடவேயிருந்து மாளட்டும்.


Feb 23, 2012

அவளுக்கு “அமுதென்றும்” பேர் -05



பெருந்தீயின் 
நுனி ஜ்வாலை 
அறுந்து அறுந்து காற்றில் 
கரைந்து விடுவது போல 


என் 
ஜீவ செல்கள் 
ஒவ்வொன்றாய் 
அவளில் 
கரைந்துபோக 
சாபமிடுங்கள்..!
***

வழிப்பயணிக்கென 
விளைந்து நிற்கும் 
காட்டு கனிமரங்கள் போல


என் 
வழியெங்கும்
வியாபித்திருக்கும்
விநோதா
அவள்.


***