Feb 14, 2014

ஆலிங்கனா-06


கொத்துக்கொத்தாய் மிகக் கூர்மையான மெல்லிய முட்களைக் கண்டு விலகிச் சென்ற என்னை வழியே வந்து விருந்துக்கு அழைத்தது அந்த அடர்ந்தரோஸ் நிற சப்பாத்திக்கள்ளிப்பழம். அருகே சென்று சில பழங்களைப் பறித்து பக்கத்திலிருந்த பாறையின் மீது உரசி அதன் மென்முட்களை நீக்கிக்கொண்டிருந்தேன். முதுகுப்புறமிருந்து வரும் சருகு நொறுங்கும் சப்தம் நெருங்கி ஒலிக்கையில் வருவது நீ தான் என உளவு சொன்னது செவிப்புலன். நான் திரும்பிப் பார்ப்பதாக இல்லை. உயிர் முழுதும் ஆவல் நிரம்பியிருந்தாலும், உன்மீதான கோபம்  கழுத்துவரை தேங்கியிருந்தது எனக்குள். இருக்காதா பின்ன? உள்ளூரில் இருந்துக்கொண்டே இரண்டு நாட்களாய் கண்ணிலேயே படாமல் போக்குக்காட்டிய காட்டேரி தானே நீ.

முன்புறம் வந்து நிற்க உனக்கும் துணிவில்லை போல. முதுகுப்புறத்திலேயே நின்றுக்கொண்டிருந்தாய். ஒரு பழத்தைக் கீறி உள்ளிருந்த கொக்கி முள்ளை எடுத்து தூர வீசிவிட்டு பழத்தை வாயிலிடும் நேரம் பார்த்து “எனக்கு” என்றாய். கோபமாய்த் திரும்பினேன். உன் வலக்கன்னத்திலிருந்த தழும்பைக் கண்டதும் வலி கொண்டு,  “என்னாச்சி” என கேட்கும் முன்னமே உன் கீழ் இமைக்குள்ளிருந்து குதித்து விட்டது கண்ணீர். கையை நீட்டினேன். உன் கைகளைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டாய். என்னவாயிருக்கும் என எண்ணியபடியே வலுக்கட்டாயமாக பிடித்திழுத்ததுப் பார்த்ததும் உன் உள்ளங்கைக்குள் நீ சுமந்து வந்த சூட்டுக்காயத்தைக் கண்டு உள்ளம் கலங்கி போனேன்.

ன்றொருநாள் காட்டுக்குப் போய் காளான் சமைத்துச் சாப்பிட்ட கதையை சில நாட்கள் கடந்து உன் தோழியிடம் பெருமையாய் நீ சொல்ல, அது உன்னைப் பிடிக்காத ஒருத்தியின் காதில் விழ, அவள் போய் உன் அம்மாவின் காதில் அமிலம் போல் ஊற்ற அதனால் விளைந்த காயம் இதுவெனவும், இனியெப்போதும் என்னைப் பார்க்கவோ, பேசவோ கூடாதென எச்சரித்து இருநாட்களாய் வீட்டோடு வைத்திருந்ததையும் சொல்லி முடித்தாய். இப்போதும் கூட யாருக்கும் தெரியாமல் தான் இங்கே வந்திருப்பதாய்ச் சொன்னாய்.

இங்கிருந்தால் யாராவது பார்க்கக்கூடும் என்பதால், முள்நீக்கி வைத்திருந்த பழங்களை உன் தாவணியின் முந்தானையில் அள்ளிக்கொண்டு  ஆளரவமற்ற பகுதிக்கு நடந்தோம். ஒரு சின்ன பாறையில் அமர்ந்து உன் துயரங்களைச் சொன்னாய். ஆறுதல் சொல்லிக்கொண்டே பழங்களை உறித்தேன். உறிக்கையில் விரலில் வழிந்த பழச்சாற்றினால் உன் நெற்றியில் பொட்டிட்டேன். இப்படி நேருமென்று சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை நீ. நானும் தான். பின் பழச்சதையை உண்ணக்  கொடுத்தேன். கொஞ்சம் எனக்கும் ஊட்டினாய். அதன் சதையையும், சாற்றையும் உறிஞ்சிக்கொண்டு விதைகளைத் துப்பத் திரும்பியவளின் பார்வை நிலைத்த இடத்தில் ஊர்ந்துச் சென்றுக்கொண்டிருந்த ‘வெல்வெட் பூச்சி’யைக் கண்டேன். அதை எடுத்து உன் கையை விரித்து சூட்டுப்புண்ணின் மேல் விட்டேன். அங்கிருந்து முன்னும் பின்னும் நகர்ந்த அப்பூச்சியைப் பார்கையில் புண்ணிலிருந்துக் கசிந்துத் திரண்ட ரத்தத்துளி ஒன்று உருள்வது போல் இருந்தது. வலி மறந்து அதன் மென்மையை ரசித்தாய் நீ. உன் நிலைக்கண்டு உள்ளுக்குள் கசிந்தேன் நான்.

உன்னுடன் இருப்பது மகிழ்வாய் இருந்தாலும், நேரம் கடந்துக்கொண்டிருந்ததை எண்ணி உறுத்திக் கொண்டே இருந்தது. பிரிய மனமில்லை தான். இருந்தாலும்,  “உன் அம்மா தேடுவதற்குள்  வீடு போய் சேர்”, எனச் சொன்னேன்.  “கொஞ்ச தூரம் நீயும் வா” என்றாய். பின் தொடர்ந்தேன்.

கல்லாலமரத்தைக் கடக்கையில் எதிரே இருபதடி தொலைவில் இரு பாம்புகள் ஒன்றாகித் தள்ளாடுவதைக் கண்டதும் பதறியபடி திரும்பிய வேகத்தில் என்னை நெஞ்சிறுகக் கட்டிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாய். வழக்கமாய் இதயம் துடிப்பதைக் கேட்டிருக்கிறேன். இதயம் நடுங்கும் என்பதை அன்றுதான் உணர்ந்தேன். உன் இதயத்தின் தாறுமாறான துடிப்பை என் மார்பு உணர்ந்தது. நடுங்கும் உன்னை நிதானப்படுத்த என்ன செய்வதெனப் புரியவில்லை எனக்கு. ஒருவாறு,  பின்னந்தலையில் தொடங்கி தோளினைத் தடவியபடியே எதையெதையோ பேசி உன்னை திடப்படுத்தினேன். சிறிது சிறிதாக நடுக்கம் தொலைத்தாய். உன் முகத்தை உயர்த்தினேன். ஆனாலும் கண்களைத் திறப்பதாயில்லை நீ. போர்வைக்குள் புரளும் பூவையைப்போல திறவாத இமைக்குள் இடவலமாய்  உருண்டன உன் கண்கள். உதட்டுக்குச் சற்று மேலுள்ள பூனைமுடிகள் குறுகுறுப்பாய் என் கண்களை முறைத்துப் பார்த்தன. அதை நான் கண்டு கொண்டதாய்க் காட்டிக் கொள்ளவில்லை.  மூடிக்கிடந்த உன் இமைகளின் மேல் மெதுவாய் ஊதினேன். காற்றின் வருடலில்  நீ கண் திறந்தத் தருணத்தில் பாம்பிருக்கும் திசையைப் பார்க்கச்சொல்லி கண்களால் உத்தரவிட்டேன். பிடியின் இறுக்கம் தளர்த்தாமல் திரும்பிப் பார்த்தாய். சரசத்தில் பிணைந்திருந்த அந்த சர்ப்பங்களும் நம்மைக் கண்டுக்கொள்வதாய் இல்லை. பாம்பின் திசையிலிருந்து பார்வையை விலக்கி இருவர் கண்களும் இணையாய் மோதின. இரு கண்கள் என்னவோ கேட்டன. இரு கண்கள் எதையோ சொல்லின.

காம்பில் தங்காது கழன்ற, கனிந்த நாவல்பழங்கள் இரண்டு முழுமையடைந்த பெண் ஓவியத்தின் முகத்தில் விழுந்து ஒட்டிக்கொண்டதைப் போன்ற உன் உதடுகள் எனக்குள் ஏதோ வேதிவினை நிகழ்த்தின. கனியும் கனி வாய் எனக்கு ஒப்புதல் அளிப்பதாய் சுழிந்தன. என் மார்பில் முட்டியிருந்த சிற்ப பூச்செண்டுகள் தீக்கங்கின் வேலையைச் சிறிதாய்த் தொடங்கியிருந்தன. அந்த பாம்புகளின் நிலைக்குச்செல்ல நம்மை ஆயத்தமாக்கின ஆர்மோன்கள். இரத்தநாளங்கள் மொத்தமும் பித்தம் கடத்தின. மூடியிட்ட கொதிகலனிலிருந்து சிறு துவாரத்தின் வழியே வெளியேறும் நீராவி போல இரு மோகக் கலன்களிலிருந்து தீ மூச்சு வெளியேறிக் கொண்டிருந்தது. இருவருக்குள்ளும் சுழலும் ஊன்வெப்பப் பெருக்கத்தால் மார் கச்சையின் கீழ்கொக்கி கழல மறுத்தும் முயற்சியை நிறுத்தவில்லை விரல்கள். 

தளிரான என்மேனி
தாங்காது உன் மோகம்” .

– பாடல்வரி தூரத்தில் எங்கோ ஒலித்துக் கொண்டிருந்தது.


*

Feb 11, 2014

அடையாளம்

ளங்காலைப் பொழுது

தூரத்தில் ஏறியிறங்கும்
நீலம் பூத்த மலைத்தொடர்கள்

பனையோலை வேய்ந்த
பழங்குடிசை வீடு

ஈரத்தரையில் ஊர்ந்துச் செல்லும்
மரவட்டைகள்

புகை புடை சூழ மண்ணடுப்பில்
விறகெரித்துச் சமையல் செய்யும் பெண்

குப்பையைக் கிளறி 
குஞ்சுகளை இரை திண்ணப் பழக்கும் கோழி

ஓடைநீரில் துண்டு விரித்து
மீன் பிடித்து விளையாடும் சிறுவர்கள்

குச்சியின் உச்சியில்
யோசனையாய்க் காத்திருக்கும் மீன்கொத்தி

தென்னங்கீற்று நுனியில்
தூளி போல் ஆடும் தூக்கணாங்கூடு

மரக்கிளையில் மறைந்தமர்ந்து
கொய்யாவைக் கொத்தும் கிளிகள்

தொங்கும் மாங்கனியை
தூரிகைப் பற்களால் கொறிக்கும் அணில்

காளைகளிரண்டை ஓட்டிக்கொண்டு
கலப்பைச் சுமந்து போகும் உழவன்

ஐந்தங்குல இடைவெளியில் அவனைப் பின் தொடர்ந்து 
ஓட்டமும் நடையுமாய் செல்லும் நாய்

இப்படி
இயற்கையோடு இயைந்தே மனிதர்கள்
இன்புற்று வாழ்ந்ததற்கான அடையாளமாக
அதிசயமூட்டுகிறது
அருங்காட்சியகத்தில் ஒரு ஓவியம்.


Feb 3, 2014

உழவுத்துறை



உலகின் மூத்த தொழில் உழவு
உயிர்களின் மூத்த உணர்ச்சி பசி

நூறாண்டுக் காலங்கள் உழைத்து
வேளாண்மை வளர்த்த நாம் தான்
விஞ்ஞானத்தின் வால் பிடித்து
அரை நூற்றாண்டு காலத்திற்குள்
நெறித்து விட்டோம் உழவின் கழுத்தை

இயற்கை உரமிட்டு பல்லுயிர்க் காத்த
பண்பாட்டுவழி வந்த நாம் தான்
இரட்டிப்பு மகசூல் பெறும்
கட்டில்லா பேராசையால்
ரசாயன உப்பைக் கொட்டி
புற்றுநோய் தொற்ற வைத்தோம்
விளைநிலத்தின் கருப்பைக்கு.

விளைவு?

விதையூன்றும் நுணுக்கத்தை
விரல்நுனிகள் மறந்து விட்டன
மோழி பிடித்து ஏரோட்டும் லாவகத்தை
மணிக்கட்டுகள் மறந்து போயின
கலப்பை இழுத்த கால்நடைகள்
அடிமாடாகி அழிந்து போயின
எழும்புக் கூட்டில் உயிர் சுமந்து
வீம்புக்கு விவசாயம் செய்தபடி
ஊருக்கு ஓரிருவர் மட்டும்
எஞ்சி நிற்கின்றனர்

இன்னும் கொஞ்சம் காலம் தான்
அவர்களும் காலனின் ஊருக்குக்
பாடையேறிக் கிளம்பிடுவர்

புதிய தலைமுறையை
காசு பணம் செய்யும்
கல்விக்குத் தாரை வார்த்து
துறைதோறும் வல்லுநர்களாக்கி வைத்தோம்,
அதிலும் வஞ்சணையாய்
உழவுத்துறையை ஒதுக்கி வைத்தோம்

நாளை
அனைவரின் மடியிலும்
அளவு மிஞ்சிய பொருளிருக்கும்
அந்தோ பரிதாபம்!
அரை வயிற்றுக் கஞ்சி கிடைக்காமல்
உலகே பசியால் நிரம்பியிருக்கும்.

உண்மையை உணர்ந்த பின்னும்
கணினிப்பெட்டி முன்னமர்ந்து
கவலைப்பட்டுக் கவிதை எழுதுவோமேயன்றி
நம்மில் ஒருவனும்
திரும்பப் போவதில்லை
உலகின் மூத்த தொழிலுக்கு.

***