May 7, 2015

ஆலிங்கனா-07


ஆலிங்கனா-07


சித்திரையின் முதல்நாளில் கொட்டோ கொட்டென்று கோடைமழைக் கொட்டி இன்றோடு எட்டாண்டுகள் ஆகிவிட்டது. மழைக்குப்பின்னான நாளில் நிலம் சுற்றிப் பார்ப்பது தனிசுகம். இதோ கிளம்பி விட்டேன். வானம் பார்த்த பூமியில் தூசு படிந்து மழுங்கியிருந்த சின்னஞ்சிறு சரளைக் கற்களெல்லாம் மழைநீரால் கூர் தீட்டிய ஊசிகளாகக் குறுகுறுக்கிறது பாதத்துள். குகையிலிருந்து எட்டிப்பார்க்கும் புலிக்குட்டிகளைப் போல தரைக்குள்ளிருந்து தலைநீட்டி வெளிவருகிறது அருகம்புல் தளிர்கள். தரையில் அமர்ந்து நுனிப்புற்களைக் கவனிக்கிறேன். நினைவு பின்னோக்கி உன்னிடம் திரும்புகிறது.

து போன்றதொரு நாளில் நிலத்தைச்சுற்றி நடைப்போட்டுக் கொண்டிருக்கையில் தான் நெருஞ்சி முள்ளொன்று குத்தி விட்டது உன் காலில். முள்குத்திய காலை சற்றே உயர்த்தி கொக்கைப்போல் நின்றாய் நீ. காலைத் தரையில் தேய்த்தால் முள் தானாய் விழுந்து விடுமெனச் சொல்லியும் நீ அதைச் செய்யவே இல்லை. பாவம் பார்த்துக் கீழமர்ந்து முள்ளைப் பிடுங்க உன் பாதத்தை ஒரு கையில் தாங்குகையில், உன் வலக்கையை உயர்த்தி ஆசிவழங்குவதைப் போன்ற பாவனையில் நிற்கிறாய். என்ன திமிர் உனக்கு? போனால் போகட்டுமென்று பிடுங்கிய முள்ளைத் தூர எறிந்து விட்டு எச்சில் தொட்டு முள்குத்திய இடத்தில் தடவி தேய்த்து விட்டேன். தாங்கித்தாங்கி நடந்து என்னைப் பின்தொடர்ந்தாய்.

சுட்டெரிக்கும் வெயிலில் காய்ந்துக் கருகி விடும் புற்கள், மழைப்பெய்த ஓரிரு நாட்களில் முளைவிடுகிறதே எப்படி என்றொரு கேள்வியை எழுப்பினாய். உன்னிடம் பிடிக்காதவைகளில் அடிக்கடி கேள்வி கேட்டு துளைப்பதும் ஒன்று எனச்சொல்லி விட்டு,  “தனக்குள்ளிருக்கும் புற்களின் வேரினைச் சுற்றிலும் , மண்ணே ஒருவகை பூஞ்சையால் கூடுகட்டி காக்கும். பின் ஈரம் பட்டதும் வேரை மெல்ல விழிப்பூட்டி தளிரை வெளியனுப்பும்என்று, அனைத்தையும் அறிந்த அதிமேதாவி போல் ஒரு பதிலைச் சொன்னேன். அப்படியா! என ஆச்சரியங்காட்டி நம்பினாய். என்னுள்ளிருக்கும் உன் நினைவின் வேர்களுக்கும் இப்பூமியைப் போல்தான்  என் நெஞ்சமும் கூடுகட்டிக் காத்து வருவது, நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை.

நிலத்தின் நடுவில் வகிடெடுத்தபடி இருக்கும் ஒத்தையடிப்பாதையில் நீண்டு பயணிக்கிறது என் கால்கள். மென்மையாய் ஜாதிமல்லியின் வாசம் நெருங்கியது என்னை. சுற்றிலும் பார்த்தேன். ஒருவரும் இல்லை. சற்று நெருக்கத்தில் ஒரு குறும்புதர்ச்செடி தரையோடு தவழ்ந்திருப்பதைக் கண்டேன். அருகே சென்று பார்த்தேன். அப் புதர்ச்செடியில் வெள்ளைநிறத்தில் ஒரு பூ மலர்ந்திருந்தது. சட்டென்று நினைவில் நீ முளைத்துப் படர்கிறாய். விரித்த கூந்தலில் ஒரேயொரு பூவை சூடிக்கொண்டு வெற்றுத்தரையில் நீ சுருங்கிப் படுத்திருப்பதைப் போன்று தோற்றம் பெறுகிறது அச்செடி. நீரிலிருந்து உயிரினம் தோன்றியதாக அறிவியல் சொல்கிறதுஎன்னவொரு அபத்தமான கூற்று அதுஇங்கிருக்கும் அனைத்துமே உன்னிலிருந்து பிறந்தவைமீண்டும் மீண்டும் சொல்வேன்உன் சாயல் இல்லாத ஒன்றுமே இவ்வுலகில் இல்லை. இதோ, அச்செடியில் பூத்திருந்த பூவைப் பறித்தெடுக்காமல் முழங்காலிட்டு குனிந்து முகர்ந்தேன். ஜாதிமல்லியின் அசல் வாசம். அசந்து போய் விட்டேன். ஏனெனில், அது உன்வாசம்.

தாமரையை ராஜமலர் என்பார்கள். இல்லவே இல்லை . என்னைப் பொறுத்தவரை ஜாதிமல்லி தான் ராஜமலர். எனக்கு மிகமிகப் பிடித்த பூ அதுதான். அதன் முகை ன் நீண்ட கூர்மூக்கை நினைவுப் படுத்தும்.  அதன் வாசம் உன்னை முழுதாய்க் கொண்டு வந்து என்முன் நிறுத்தும். என் உடலை இயக்கும் உயிர்க்காற்றையெல்லாம் வெளியே கடத்தி விட்டு ஜாதிமல்லியின் வாசத்தை மட்டுமே நுரையீரல் முழுதும் நிறைத்துக் கொள்வேன். அது உள்ளிருந்து அங்கமெங்கும் ஊறி மூளையின் நினைவடுக்குகளில் போய் பதுங்கிக்கொள்ளும். ஜாதிமல்லியின் வாசத்தை சுவாசிக்க வாய்க்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம், நுகரும் உணர்வை ஐம்புலன்களுக்கும் அளிக்காமல் ஏன் குறைவைத்தான்  இறைவன் என்று கோபம் பொங்கும்.

ன்னையொத்த அச்செடியருகில் சற்றுநேரம் நானும் ஒடுங்கிப் படுத்துக்கொண்டேன். இங்கே தான் நீ குடிகொண்டிருப்பதாய் நம்புகிறது என் மனம். அம்மலரிலிருந்து  பரவும் வாசம் நம்மிருவரையும் உயரத்தில் மிதக்கச் செய்து எங்கெங்கோ பயணித்து கடத்திக்கொண்டு போய் ஓர் அடர்வனத்தின் நடுவில் இறக்கிவிட்டு விட்டது.

வ்வனம் கொஞ்சம் பயமுறுத்தினாலும் குதுகலமாகத்தான் இருக்கிறது. இங்கே கொடிய விலங்குகள் நம்மை அச்சுறுத்தலாம். சாதுவான விலங்கினங்கள் நம்மோடு சிநேகம் கொள்ளலாம். எந்நேரத்திலும் எதுவும் நடக்கலாம். ஆனாலும், இது தான் நம் உலகம். இனிமேல் இங்குதான் நாம் ஜீவிக்கப்போகிறோம்.


அதோ அந்தப் பாறையில் இருக்கும் நீள் சுனையில் நீராடு
அருகே செடிமீது படர்ந்திருக்கும்
கொடிமுல்லை மலர்கள் கொய்துத் தருகிறேன்
கொஞ்சம் பூக்களால் உன்னைத் துவட்டிக்கொள்
மிச்சப் பூக்களை நீ உடுத்திக்கொள்
ஆதியுலகில் நுழையலாம்
ஆதாம் ஏவாள் ஆகலாம்
குகையொன்றில் குடிபுகலாம்
எரிநட்சத்திரம் ஒன்றை வேட்டையாடி வீழ்த்தி
வீட்டு வாசலில் ஒளியேற்றலாம்
காய் கனி தேன் கிழங்கு என தேடித்தேடி
வகைவகையாய் உண்ணலாம்
சிக்கிமுக்கிக்கல் உரசி தீ மூட்டலாம்
கட்டாந்தரையைக் கட்டிலாக்கலாம்
வில் நீ
அம்பு நான்
வினைபுரியலாம்
வினையின் விளைவால் விளையும்
நம் மேல்மூச்சு கீழ்மூச்சு இவ்வனமெங்கும் அலைந்து
வண்டு துளைத்த வன்மூங்கிலில் நுழைந்து
புல்லாங்குழல் இசையாக வெளியேறட்டும்
வனமே இசைந்தாடட்டும்
இம் மன்மத ஆண்டு மதங்கொள்ளட்டும்.

எழு ஆலிங்கனா.

*

1 comment:

  1. நல்ல பதிவு! அறிவுக் களஞ்சியம் பதிவையும் நேரம் கிடைக்கும்போது பாருங்கள். நன்றி.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.