இளங்காலைப் பொழுது
தூரத்தில் ஏறியிறங்கும்
நீலம் பூத்த மலைத்தொடர்கள்
பனையோலை வேய்ந்த
பழங்குடிசை வீடு
ஈரத்தரையில் ஊர்ந்துச் செல்லும்
மரவட்டைகள்
புகை புடை சூழ மண்ணடுப்பில்
விறகெரித்துச் சமையல் செய்யும் பெண்
குப்பையைக் கிளறி
குஞ்சுகளை இரை திண்ணப் பழக்கும் கோழி
ஓடைநீரில் துண்டு விரித்து
மீன் பிடித்து விளையாடும் சிறுவர்கள்
குச்சியின் உச்சியில்
யோசனையாய்க் காத்திருக்கும் மீன்கொத்தி
தென்னங்கீற்று நுனியில்
தூளி போல் ஆடும் தூக்கணாங்கூடு
மரக்கிளையில் மறைந்தமர்ந்து
கொய்யாவைக் கொத்தும் கிளிகள்
தொங்கும் மாங்கனியை
தூரிகைப் பற்களால் கொறிக்கும் அணில்
காளைகளிரண்டை ஓட்டிக்கொண்டு
கலப்பைச் சுமந்து போகும் உழவன்
ஐந்தங்குல இடைவெளியில் அவனைப் பின் தொடர்ந்து
ஓட்டமும் நடையுமாய் செல்லும் நாய்
இப்படி
இயற்கையோடு இயைந்தே மனிதர்கள்
இன்புற்று வாழ்ந்ததற்கான அடையாளமாக
அதிசயமூட்டுகிறது
அருங்காட்சியகத்தில் ஒரு ஓவியம்.