Showing posts with label பசி. Show all posts
Showing posts with label பசி. Show all posts

Nov 13, 2011

சுரப்பி



மனைவி
தேர்வு எழுதப் போயிருக்கிறாள்.

மகள்
பசியால் அழுகிறாள்.

புட்டி  பால்
கட்டிக்கட்டியாய் திரிந்துப் போயிருந்தது.

அவள்
அழுகையை அடக்க நெஞ்சில் சாய்த்தேன்.

மார்புக் காம்பை சப்பிய படியே
தூங்கிப்போனாள்.

அப்பாவின் அன்பு
சுரந்திருக்குமோ காம்பில்...!?



Oct 24, 2011

போர் எச்சரிக்கை



கவிஞனை
தீர்க்கதரிசி என்பார்கள்!

”தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்” - என,
எட்டையபுரத்து இளம்பரிதி சுட்டிய
பெரும் பிணியாம் “பசி”! 

அதை
எரித்து அழித்திட 
ஒற்றை தீக்குச்சியை
உரசக் கூட
ஒருவரும் நம்மில் - முன்
வருவதாய் இல்லை.

இதே போக்கை தொடர்வதும்
இதற்கொரு விடிவை தருவதும்
 நம் அனைவரின் கரங்களில்!

என் சொற்களை
எச்சரிக்கையாய் ஏற்றுக்கொண்டாலும் சரி.
துச்சமாய் தட்டிக்கழித்தாலும் சரி.

இன்னும்
குறுகிய காலத்தில்
உலக பசியினைப் போக்க
முயற்சிக்க மறந்தோமானால்,
மூன்றாம் உலகப்போரின்
முதல் தீப்பொறியை
ஏழைகளின் வயிற்றை எரிக்கும்
பசி தான் பற்ற வைக்கப்போகிறது.

கவனத்தில் கொள்ளுங்கள்.
காலந்தோறும் கவிஞனை
தீர்க்கதரிசி என்றே சொல்கிறார்கள்!