எண்ணிக்கையில்
ஏழு புள்ளி இரண்டு கோடியை
எட்டி நிற்கும்
என் நாட்டுத் தமிழா!
’இனப்பெருமை என்பது
இனப்பெருக்கம்
செய்வது மட்டுமல்ல’-என்பதை
எப்போது உணரப்போகிறாய்?
இருபது மைல் தொலைவில்
இன மலர்ச்சிப் போராட்டம்
உச்சத்தில் இருந்த போதும்
இன மானம் உணர்ந்து,
சிறு துரும்பையும்
அசைக்க முனையாத நீயா
ஈராயிரத்து இருபதில்
இந்தியாவை
வல்லரசாக்கி விடப் போகிறாய்?
விழி நீரைத் துடைக்க
உனை நோக்கி நீண்ட
கரங்களின் விரல்களே
உன்
சுதந்திரத்தின் கண்களைக்
குருடாக்கிய கதையை
அறியாமல் கிடக்கிறாயே!
தனியொருவனால் ஒன்றும்
கிழிக்க முடியாமல் போகலாம்
ஒத்தக் கருத்துடையோருடன்
மெத்தக் கலந்து பேசி
அணி திரண்டு
யுத்தம் புரிய வேண்டாமடா நீ
உரக்க சத்தமிட்டாலே போதும்
உடைந்த சிலம்பின்
முத்துப்பரல்கள் போல்
சிதறி ஓடுமடா
எதிரிகளின் கூலிப்படையும்,
கூட்டுப் படையும்!
இலவசத்திற்கே பழகிப்போன - என்
இளையச் சமுதாயமே
‘இனச் சுதந்திரம்’
இலவசமாய்
எங்கும் கிடைக்காதப்பா!
நமக்கான
உரிமைகளை ஒன்று
கேட்டுப் பெற வேண்டும்.
மறுக்கப்படுமாயின்
உதைத்து தான் பெற வேண்டும்!
***
பின் குறிப்பு:-
கவிஞனின் சுட்டு விரல் என்னையும் சுட்டுகிறது.
