Mar 12, 2010

நண்பனின் நண்பன் உயிர் காப்போம்

அன்பின் வலையுலக நண்பர்களே!

' நாடோடி ' திரைப்படம் பார்த்து , அதில் இடம் பெற்ற கதாபாத்திரங்களின் நட்பை நம்மில் பலரும் சிலாகித்திருப்போம். அப்படத்தில் ஒரு வாசகம் இடம் பெற்றிருக்கும்
“ நண்பனின் நண்பன் நமக்கும் நண்பன் ” என்று.

இன்று அவ் வசனத்தின் அவசியம் உணரவேண்டிய ஒரு அவசர தருணம்.

இங்கே செ.சரவணகுமார் சுட்டி முழு விவரங்களை அறிக.

நம்மால் இயன்றதை செய்து ஒருவரின் உயிரைக் காக்க உங்களின் வலைப்பூவிலும் இணைப்புக் கொடுக்கலாமே...!

http://saravanakumarpages.blogspot.com/2010/03/blog-post_11.ஹ்த்ம்ல்

Mar 9, 2010

நீயே சொல் - 05

05

'
திருமண நிச்சயம் ’
பெரியோர்களால்
நிச்சயிக்கப் பட்டு விட்டது.

` நாள், நட்சத்திரம் ’
குறித்தாகி விட்டது.

` அழைப்பிதழ் '
அதுவும் அச்சாகி விட்டது.

‘ ஊர் உறவுகளை '
அழைத்தாகி விட்டது.

எஞ்சியிருப்பது
இடைப்பட்ட
இரு நாட்கள் மட்டும் தான்.

ஒற்றை அழைப்பிதழைக்
கையில் வைத்து
மணமகள் பெயரை
உற்று உற்று பார்த்தபடி...

திரைப்படங்களில் நிகழும்
திருப்புமுனை காட்சி போல்
அதிசயம் எதுவும் நிகழ்ந்து

` இவள் ' பெயருக்கு பதிலாய்
` உன் பெயர் ' முளைத்திடாதா? ...என

உள்ளுக்குள்
முனகித் தவிக்கும்
மனதை என்ன செய்யலாம்....?

Mar 1, 2010

வாய் மை












இமைகளுக்குத்
தீட்டும் மை
"கண் மை " என்கிறார்களே.

உன்

இதழ்களுக்குத் தீட்டும் மை
வாய் மை” - யோ....?
















பின்குறிப்பு : -

என் மாப்பிள்ளைகள் இருவருக்கு முன்பு இணைத்திருந்த படங்கள் கவிதைக்குப் பொருந்தவில்லையாம். அதனால் மாற்றவேண்டியதாகிவிட்டது.

(இப்ப பொருந்துதான்னு பார்த்து சொல்லுங்க மாப்ள.)

Feb 2, 2010

சொல்லில் புரியாது...



ச்ச்ச்ச்....சே!

எத்தனை நாள் ...?
எத்தனைமுறை ....?
பட்டினி கிடந்து
ஒத்திகைப் பார்த்தும்...


உன்னிடம் நேரில்
உள்ளத்தைச் சொல்கையில்
“ திக்கித்.....திணறி......
ச்ச்ச்ச்....சே! "

சொல்லில் புரியாது... போ.
ஆண் என்ற திமிர்
நாணம் கொண்ட அக்கணம்.!

மூவாண்டு முழுதாகியிருக்குமா?
ஆனால் என்ன?

நாம் மூப்பெய்தி
மூன்றாம் காலில் நடந்தாலும்
மறக்காதடி அந்த
மணித்துளி எனக்கு.

தாயும் இருக்க
தாயாக வாய்த்தவளே...!

Feb 1, 2010

ஒரேயொரு முறை


கூடு கலைக்கப்பட்ட
குருவிகள் பல
நாடு கடந்து பறந்துப்போயின
திசைகள் அறியாமலே...!

இறகுகள் பிடுங்கப்பட்ட
பறவைகள் நாங்கள்
என் செய்ய
எம் தலைவா...?


சிம்மக்குரல் அல்ல - உனக்குச்
சின்னக்குரல் தான் - ஆனாலும்
அது மந்திரக் குரல்!

இங்கே நாள்தோறும்,
ஏதிலிகள் எனும் சொல்
காதினில் விழும் போதில்
உயிரைக் கூறு போட்டு கொல்லுதப்பா.

"இதோ நானிருக்கிறேன்", என
எண் திசையில்
எத்திசையிலிருந்தேனும்
ஒரேயொரு முறை

உன்

அன்னைக் குரலால்
“எம் மக்களே!”
என்றழை!

எமைவிட்டுப் போன பலம்
இமைப்பொழுதில் வந்துச்சேரும்.

எதிரிக்கு(ள்) விட்டுப் போன பயம்
நெற்றிப் பொட்டில்
குட்டி போட்டு குடியேறும் !

Jan 20, 2010

என்னையும் ஒருவர்.....



ஓர் உண்மைச் சம்பவத்தையொட்டி அருமை அண்ணன் ”புதுமைத் தேனீ” திரு மா.அன்பழகன் அவர்களின் விருப்பத்திற்காக நான் எழுதிய ஒரு குறுங்கவிதையை,

எனதருமை நண்பரும்
கவிஞருமான அகரம் அமுதா அவர்கள்
வெண்பாவாக்கிய வித்தைய அவரது வலைப்பூவில் பதிவிட்டிருக்கிறார்.



அகரம் அமுதா அவர்களின் அந்தப் பதிவிலிருந்து ஒரு பகுதி கீழே....

பாலை, கலத்தில் ஊற்றிவைத்தாலும், பானையில் ஊற்றிவைத்தாலும், கோப்பையில் ஊற்றி வைத்தாலும், தேங்கிநிற்கப் பயன்படும் பொருட்கேற்ப வடிவம் மாறுபடுமே அல்லால் தன்மையால் மாறுபடாதல்லவா? அஃதேபோல் மூலம் சிதையாமல் வடிவமாற்றம் செய்தலே மூலத்தைக் காயப்படுத்தாமலும், மூலப்படைப்பாளனைக் காயப்படுத்தாமலும் இருக்க, சிறந்த வழிமுறையாகும்.

இச்சட்டத்திற்கு உட்பட்டு ஓர் குறுங்கவிதையை வடிவமாற்றம் செய்துள்ளேன்.
கவிதையின் கருப்பொருள் இதுவே:- (நாளேட்டில் வந்த செய்தி) ஓர்திருடன் ஓர் வீட்டுள் புகுந்து பொன்பொருளைக் கொள்ளையடிக்கிறான். திருடன் திருடிய வேளையின் திருடனின் மகன் இறந்துவிடுகிறான். தான் திருடிய கரணியத்தால் ஆண்டவன், தன் மகனின் இறப்பின் மூலமாகத் தன்னை ஒறுத்துவிட்டதாக (தண்டித்துவிட்டதாக) எண்ணிக்கொண்டு, இனி அக்குற்றச்செயலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பாது, திருடிய பொருளை மூட்டையாகக் கட்டி, கூடவே ஓர் மடலையும் எழுதி (மேலுள்ள செய்தியை) காவல் நிலையத்தின் அருகில் போட்டு விட்டுச் சென்றுவிடுகிறான். இக்கருத்தை உள்ளடக்கியதாகப் பேசுகிறது கீழ்காணும் ஹைக்கூ:-

கொள்ளை மனதை
வெள்ளை மனதாக்கியது
பிள்ளை மரணம்!

மேலுள்ள குறுங்கவிதையின் படைப்பாளர் எனதருமை நண்பர் மனவிழி சத்ரியன் வார்.

இவ் ஹைக்கூ உணர்த்தவரும் கருத்தை, எச்சொற்களைக் கொண்டு உணர்த்தி நிற்கிறதோ?! அச்சொற்களின் துணைகொண்டே வெண்பா என்கிற வடிவத்திற்குள் நுழைத்துக் காட்ட முடியுமா? என்கிற வேட்கையோடு உரைக்கப் புகுந்தேன். அது இப்படி உருப்பெற்றது.

பிள்ளை மரணத்தால் வெள்ளை மனமுற்றான்
கொள்ளைக் குணங்கொண்ட வன்!


கவிதைக்குறிய எக்கருப்பொருளையும் எந்த வடிவத்திற்குள்ளும் அடக்கிவிட முடியும். அது அவ்வடிவத்தைக் கையாளுபவனின் ஆற்றலைப் பொருத்தது. மேலுள்ள இரு குறுங்கவிதைகளையும், ஏறக்குறைய அவ்வக் கவிஞர்களின் சொற்களைக் கொண்டே மரபுக்குள் புகுத்த முயன்றிருக்கிறேன். வெற்றி பெற்றானா என்பது தெரியாது. முயன்றிருக்கிறேன் அவ்வளவே!

இவ்வலையில் வெண்பாப் பயிலும் நண்பர்களே! நான் வழங்கும் குறுங்கவிதையை வெண்பாவாக்க முடியவில்லை என நினைக்கத்தால் தங்களால் வெண்பா வாக்க முடியும் எனக் கருதுகிற குறுங்கவிதையில் ஒன்றை எடுத்துக்கொண்டு வடிவ மாற்றம் செய்துபார்க்கவும். ஓர் குறுங்கவிதையை அளவடி வெண்பாவாக்குகிற போது, நிறைய சொற்களை இட்டு நிறப்ப வேண்டிய கட்டாயம் இருக்கும். ஆதலால் குறள்வெண்பாவாகவோ, சிந்தியல் வெண்பாவாகவோ வழங்கமுற்படுவது சாலச் சிறந்தது.

வெண்பா கற்க விரும்பும் நண்பர்கள்
இங்கே சுட்டவும்.


நன்றி: கவிஞர் அகரம் அமுதா.

Jan 8, 2010

நீயே சொல் - 04


நிறைய பேச வேண்டுமென அழைக்கிறாய்
நானும் ஆவலில் காத்திருக்கிறேன்.

சந்திப்பின் சொற்ப நேரத்தையும்
மெளனமாகவே கழித்து விடுகிறாய்.

பேச எண்ணி
சேர்த்தச் சொற்களை
வரும் வழியில்
தவற விட்டு விட்டாயா?


***
இதோ
இப்பொழுது வரை
உன்னிடம்
எனக்கு புரிபடாத ஒன்று,


’வருகிறேன்’ எனச் சொல்லி
’புறப்பட்டு’ போகும்.. புதிர் !

என்னவென்று...
நீயே சொல்.


***





எ(பொ)ன் மகள்

Jan 4, 2010

நீயே சொல் - 03



என்
இடம் விட்டு

உன்
இடம் சேர்ந்த

நம்
இதயப்பெயர்ச்சியின்
இனியநிகழ்ச்சி தான்
இவர்கள் ,

காதல்

எனச் சொல்லும்
வண்ணத்துப் பூச்சியா?


***
பொன் மகளின் புகைப்படம் காண கீழேயுள்ள சுட்டியைச் சொடுக்குங்கள்.




********************************************

Dec 21, 2009

புரிந்தால் சரி...



இரு
இரும்பு உருளைகளுக்கு
இடையில் சிக்கிய
கரும்பு
நான் .

உங்கள் 'கனவு' சாறாக ..!
என் 'கனவுகள்' சக்கையாக ...!

Dec 9, 2009

சுவாசம்



கண்ணிலும்
சுவாசித்தேன்
முதன் முதலாய்.

தூசி விழுந்த
என் கண்ணை
உதடு குவித்து
நீ
ஊதியபோது.

Dec 4, 2009

மறுநடவு



அவள் தரப்பிலும் யாரும் இல்லை
என் தரப்பிலும் யாரும் இல்லை

கடவுளாய் மாற்றப்பட்ட
கற்சிலை முன்பு நலமாகவே நடந்தேறியது
எங்களின்
கந்தர்வக் கல்யாணம்

அதே வருடம் ஒரு வாரிசு
அடுத்த வருடமே விவாகரத்து

அழுதுச் சொன்னேன்
அழுந்தச் சொன்னேன்
வேண்டாமே இந்த "ரத்து" என்று.

அவள் -
கேட்கவுமில்லை
கேட்பதாகவும் இல்லை .
பிரிந்தே விட்டாள்
பிள்ளையும் என்னையும் விட்டு.

அது அவள் குற்றமில்லை
அழகின் கர்வம்
உடலின் திமிர்

காலம்
கடிகார முள்ளில்
சுற்றிச் சுற்றிச் சுருங்கியது -அவளின்
சருமம் போலவே.

நீண்ட இடைவெளி.......................

ஒரு நாள்,
பெண்களின்
பேராயுதமாம் கண்ணீர் - அதை
கண்களில் ஏந்தி
உழுதாள்...என்னை.

அவள் மனதின் மறு நடவிற்கு
இவனின் மனம் வேண்டும் என்று .

என் கை விரலை இறுகப்பற்றியபடி
கண் சிமிட்டினான் என் கண்மணி .

இறுக்கம் தளர்த்தி
இதயம் சொல்லியது
"பிரிந்தால் பாவம்-மீண்டும்
இணைந்தால் தீரும்" என்று.

Dec 1, 2009

நிர்வாணமாய் நீ



உன்னைக்
கரம்
பிடிக்க ஆசைதான்.
என்
விரல் பட்டாலே
நீ
தான்
ஒரு
மாதிரியாகி விடுகிறாய் ...

ஊரறியும்

உலகறியும்
நீ யொன்றும்
கண்ணகி
வம்சமில்லை என ...

வெட்ட வெளியினில்
நிர்வாணமாய்
நீ
இருக்கையில்
இன்றும்
ஒருமுறையென 
உள்ளுக்குள்

ஓர்
சபலம் உதிப்பது
உண்மை
.

உன்னருகே

நான் நெருங்குகையில்
உன்
அச்சம்
உணரமுடிகிறது
என்னால் .

இருந்தும்

உன்

சிணுங்கல்
விரும்பியே
தேடி
வந்து -உன்னைத்
தீண்டி
மகிழ்கிறேன் .




தொட்டாச்சிணுங்கியே !



Nov 25, 2009

நீயே சொல்-02


நட்பென்றுதானே
நம்பிக்கொண்டிருக்கிறோம்

எப்போதாவது
தண்ணிக்குள்ளிருந்து
தலை தூக்கிப் பார்க்கும்
தண்ணீர் பாம்பை போல்

அவ்வபோது
நம்'முள்'ளிருந்து
தலை தூக்கிப் பார்க்கும்
காதலை
என்ன செய்யலாம்...?

Nov 15, 2009

நத்தை


மழை ஓய்ந்த பின்னிரவு
அரை தூக்கத்தில் பிறை நிலா

யாருக்கு பயந்தோ
இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறது
கூட்டை முதுகில் சுமந்தபடி
நத்தை


அதை பின்தொடர்ந்து
போய்க்கொண்டிருக்கிறது
என் தூக்கத்தைச் சுமந்தபடி

உன்

நினைவு.!

Nov 10, 2009

காதல் குழந்தை


கொடும்பசி கொண்டு ,
பால் சுரக்காத
தாயின் தனங்களை
சப்பி
ஓய்ந்து
பாலுக்காக வீரிட்டு அழும்
பச்சிளங் குழந்தையைப் போல்

உன்
காதலுக்காக
வீரிட்டபடி...

என் இதயம் !




Nov 4, 2009

பருவ ஞாபகம்



வானிலை
ஆய்வாளர்கள்
சிரித்துக் கொண்டே அறிவித்தார்கள்
இவ்வாண்டு
பருவமழை பொய்க்கக் கூடுமென !


என்னில்
உன்
மழைநாள் ஞாபகங்கள்
வரண்டு விடக்கூடுமோ?

Nov 3, 2009

"எனக்கு மகனாக"





கல்லூரிக்குப் போயிருப்பதாகவே
என்னுள் இருக்கிறாய்.
காலன் வீட்டிற்குப் போய்விட்டதாய்
எப்படி நான் ஏற்றுக்கொள்ள?

உன் சிதைக்கு "தீ" மூட்டி
நான் அழுதுக்கொண்டிருக்கையில்
நம் பகை சிரித்து மகிழ்ந்ததை
எப்படி உன்னிடம் சொல்வேன்?

வேலையிருக்கு விரைந்தெழுடா என்றால்
அதிகாலை குளிருதுடா என்பாயே,
வெந்நீர் எடுத்து வைத்து
குளிக்கவாடா என்றழைத்தால்
சுடுகிறதென்று குளிர் நீர் கேட்பாயே

அன்று மட்டும் ,
அதிகாலை என்றும் பாராமல்
கொழுந்து விட்டெறிந்த
கட்டைக் குவியலுக்குள்
அமைதியாய் எப்படிடா படுத்திருந்தாய் ?

நம்மைப் பெற்றெடுத்த
அம்மா சொல்கிறாள்:
உன்னைச் சுமந்த கருப்பை
மறந்து போனதாம்.
உன்னைச் சுமக்கும் நினைப்பை
மறக்க முடியவில்லையாம் .


நீ
வாங்கவிருந்த பட்டங்களுக்கும்
சூடவிருந்த வெற்றிகளுக்கும்
மாலைச் சூட்ட வேண்டிய கரங்கள்
உன் நிழல் அடைத்திருக்கும்
மரச் சட்டங்களுக்கு
மலர்கள் குவித்து........,

எங்கள்
பதினெட்டு வயது கனவை
தீயின் நாவிற்கு உணவாய்
கொடுத்துவிட்ட
ஓராண்டு நினைவில்
அழுகிறோம்.

எங்கிருக்கிறாய்
உடன் பிறப்பே?
ஏங்கித் தவிக்கிறோமே
ஏதும் உணராமல் இருப்பாயோ?
எனக்கு மகனாகப் பிறப்பாயோ?

Oct 30, 2009

"தொல்லை வரம்"




பிள்ளை வரம் வேண்டி
அரசமரம் சுற்றும்
அறிவிலிப் பெண்கள் போல்

தொல்லை (காதல்) வரம் வேண்டி
உன்னைச் சுற்றிக் கொண்டிருக்கிறது

ஒன்றுமறியாத
என் மனம்...!


Oct 27, 2009

"அன்னை பூமி "

ஒரு காலை வேளை (தூங்கி எழுந்தவனைத்) தோரணம் கட்டி அழைக்கும் வானவில் ...!

இதுதான் எங்கள் வாழ்விடம் . எப்போதுமே இதேபோன்று பசுமையாக இருப்பதில்லை. பருவகாலத்திற்கு ஏற்றாற்போல் மாறும். இது கடந்த செப்டம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் ஒரு நாள் காலை நேரத்தில் எடுக்கப்பட்ட படம்.



மின்சாரக் கம்பியில் வரிசையாக அமர்ந்து இயற்கையை ரசிக்கும் கிளிகள்.



எங்களின் நெல் வயல்.



மலையும், மலையைச்சார்ந்த நிலமும்.


எங்களின் கூரை வீடு.


எங்களுக்கும் தாய் . ( பால் தருவதால் )

எங்க வீட்டு காவலன் .(வடிவேலு)


எங்கள் வாழ்வு இப்படி இயற்கையோடு ஒன்றியது. இன்னும் சில ஆண்டுகளில் இந்த நிலத்தோற்றம் சிதைக்கப் படலாம்.


(குறிப்பு:- இந்தப் படங்கள் அனைத்தும் கைத்தொலைப்பேசி மூலம் எடுத்தது.)

Oct 23, 2009

"இன்னும் இருக்கிற ...காதல்"


இதுவரை
என்னால் எழுதப்படாத
சொற்களில்தான்
அதிகமாக இருக்கிறாய்
நீ!

பகிரப்பகிரப்
பெருகும்
அன்பைப்போல்
எழுதயெழுத - என்னுள்
எங்கிருந்து வருகிறாயோ
நீ?

என் எழுத்துக்களின்
ஏதாவதொருச் சொல்
இன்றல்லது என்றாவது
அடயாளப் படுத்தக்கூடும்
நம்மை....உரியவர்களிடம்...!