Aug 30, 2013

ஆலிங்கனா-05


       லம் விழுது போல நிலவிலிருந்து ஒரு ஒளிக்கயிறு என் முன்னே இறங்கியது. ஆவலில் அதைத் தொட்டதும் என் கைகளை  அதிலிருந்து விலக்கவே முடியவில்லை. நிலவிலிருந்து யாரோ அக்கயிற்றை மேல்நோக்கி இழுத்தார்கள். உயரே போகப்போக உயிரே போய்விடும் போல் திகிலலடைந்து மனம். பயத்தில் நினைவிழந்துவிட்டேன். நினைவு திரும்பி கண்விழித்தபோது எதோவொரு புது இடத்தின் விளிம்பில்  விழுந்துக்கிடந்தேன். இப்போது அங்கே கயிறு எதுவும் இல்லை. படுத்தபடியே சுற்றிலும் பார்த்தேன்.ஒருவரையும் காணவில்லை. இரு கைகளாலும் விளிம்பினை உறுதியாகப் பிடித்துக் கொண்டு எட்டிப் பார்த்தேன். இதுவரையிலும் காணாத என்னென்னவெல்லாமோ தெரிந்தது. அவற்றின் பெயர் தெரியாததால் அவை பற்றி எதுவும் இங்கே விவரிக்க முடியாது என்னால்.  படுத்திருந்த தரை பளிங்கினால் ஆனது போல் இருக்கிறது. எழுந்து நிற்க முயன்றேன். கால்கள் நழுவியது. இப்போது புரிந்து விட்டது எனக்கு, நானிருக்கும் இடம் நிலா

இத்தனை ஆண்டுகளாய் நான் நினைத்திருந்ததைப் போல நிலா தட்டையாய் இல்லை. இங்கே வந்த பின்புதான் தெரிகிறது, ஒளியுமிழும் ஒரு வட்ட பரப்பு இது.  வட்டத்தின் நடுவில் குழிந்து குளம் போன்றதொரு  பள்ளத்தில் பால் நிரம்பியிருக்கிறது. நிலவின் விளிம்பையொட்டியே நடந்து பூமியை எட்டியெட்டிப் பார்த்து பரவசத்தில் இருந்தேன். நிலா மெல்ல குலுங்கியது. மீண்டும் பயம்.  ஓரிடத்தில் நின்று குளத்தை உற்றுக் கவனித்தேன். நிலவின் கரையில் நிற்கும் என்னை பொருட்படுத்தாமல் பால்குளக் கரையோரத்தில் நின்று மேலாடைகளை மெல்லக் களைந்து வீசியெறிந்தாய். அது காற்றில் அலைந்து அலைந்து நிலவின் மறுவிளிம்பில் சிக்கித் தொங்கியது. அனுதினமும்  குளிக்க ஆடைகளைக் களைந்து நீ வீசும்போது ஒழுங்கற்று விழுந்து நிலவின் சில பகுதிகளை மூடிக்கொள்வதால் வளர்பிறை, தேய்பிறை நிகழ்வதையும், உனதாடை தவறுதலாய் நிலா முழுவதையும் மூடிக்கொள்ளும் நாளில் பிரபஞ்சமே இருண்டு போய் அமாவாசை யாவதையும் புரிந்துக் கொண்டேன். ஆளரவமே இல்லாத இங்கே நீ மட்டும் எப்படி வந்திருப்பாய் என்பதை நினைத்துப் பார்த்தேன். சாத்தியமே இல்லை. சத்தியமாய் நீ நிலவின் மகளாய்த்தான் இருக்க முடியும் என முடிவு கொண்டேன்.

பாவடையின் நாடாவைத் தளர்த்தி இடுப்பிலிருந்து உயர்த்தி திமிரும் தனங்களுக்கு மேலே நெருக்கிக் கட்டி பால் குளத்தில் இறங்கி நீந்தினாய். பல்லவன் உளி பெற்றெடுத்த கரிய கற்சிலையொன்று பாலில் நீந்துவதைக் கண்ட என் கண்கள் வியப்பில் இமைக்க மறந்து போயின. கண் திரைகள் உலர்ந்து விட்டன. நிலவின் விளிம்பில் நான் நின்றிருந்த இடம் மட்டும்  பாரந்தாங்காமல் அலுமினியத் தட்டினைப் போல் நெகிழ்ந்து வளைவதை என் உள்ளங்கால்கள் உணர்த்துகின்றன. இங்கிருந்து நகர்ந்து விடலாம் என நினைக்கையில், இனி ஒரு அடி கூட நடக்கவே முடியாது என்னால். ஆமாம், என் பாதத்திலிருந்து நிலவிற்குள் வேர் பாய்ந்துக்கொண்டிருக்கிறது. வேறு வழியின்றி குளத்தையே பார்த்துக் கொண்டு நின்றேன். பாலுக்குள் மூழ்கி நெடுநேரம் கழித்து வெடுக்கென தலைநீட்டிய நீ அடக்கியிருந்த மூச்சை அவசர அவசரமாய் வெளியேற்றி,உள்ளிழுக்கும் போது அந்தக் குளமே சுருங்கி விரிவது விந்தையாய் இருக்கிறதெனக்கு.  

நீந்தி களைத்துக் கரையேறுமிடத்தில் தும்பைப் பூக்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கிறது. குளத்திலிருந்து வெளிவந்து அப்பூக்களை அள்ளியெடுக்கிறாய். பூந்துவாலையைப் போல் பின்னி விரிகிறது அவ் உதிரிப்பூக்கள்.  முகத்திலிருந்து பாதம்வரை துடைக்கிறாய். உன் உடலைத் துடைக்கையில் அத்துவாலையிலிருந்து உதிரும் தும்பைப்பூக்கள் கண் கூசாத அளவிற்கு ஒருவிதமான மென்னொளி வீசுகின்றன.  உதிர்ந்த பூக்களின்மேல் வானம் நோக்கி நீண்டு படுத்துக் கொண்டாய். சிதறிக்கிடந்த பூக்களை எடுத்து அங்கத்தின் அந்தரங்கத்தை மூடினாய்.


சற்றுநேர இளைப்பாறலுக்குப் பின் மீண்டும் குளத்தில் இறங்கி நீந்தத் துவங்கிவிட்டாய். நீந்துவதும் இளைப்பாறுவதும் தான் உன் வேலையா? உனக்கு பசியே எடுக்காதா? பசிக்காது தான். உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் எனக்கே பசிக்கவில்லையே. உனக்கு மட்டும் எப்படி பசிக்கும்? இங்கே எதை உண்டு இத்தனை வனப்பாக வளர்ந்தாய் நீ? பெண் அங்கத்திற்கென உருவகித்திருக்கும் அத்தனை இலக்கணங்களுக்கும் உரியவளாய் எப்படி உருவெடுத்தாய் நீ? ஒருவேளை மந்திரமோகினியா நீ? இங்கிருந்து உன்னை நான் பார்க்க முடிகிறதென்றால் அங்கிருந்து என்னை உன்னால் பார்க்க முடியுந்தானே? பிறகேன் என்னைக் காணாதவள் போலவே ஆடை அவிழ்ப்பதும், நீந்துவதும், கரையில் புரள்வதுமாய் செய்கிறாய்.  ஒருவேளை பார்வையற்றவளா நீ?

அட! நின்றவிடத்திலிருந்து நான் உன்னையே பார்த்துக் கொண்டிருந்ததை எப்படியோ உணர்ந்து விட்டாய். நீர்க்கோழி போல் மீண்டும் பாலுக்குள் மூழ்கி உன்னை மறைத்து கொண்டு விட்டாய். மூச்சுத்திணறி இறந்துவிட போகிறாய். வெளியே வந்துவிடு சிலையம்மா. வா. வந்து விடு. குளத்தினருகில் வந்து உன்னைத் தேடலாமென்றாலும், வேரூன்றி விட்ட கால்களை விடுவிக்க முடியவில்லை என்னால். உனக்கு என்னாகுமோ என தவித்து, எப்போது வெளியே வருவாயென எதிர்பார்த்து காத்து களைத்திருந்தேன்.  நான் போய்விட்டிருக்கக் கூடும் என்றெண்ணி, நீரினடியில் அமிழ்த்து வைக்கப்பட்டிருந்த வளி நிரம்பிய பந்து பிடி நழுவி வெளியேறும் வீச்சில், குளத்திலிருந்து   வெளியே தலையை நீட்டி கூந்தலை ஒரு வீசுவீசினாய். கூந்தலிலிருந்து தெரித்த பால் துளிகள் என் கண்ணுக்குள் வந்து விழுந்தன. அனிச்சையாய் கண்களைக் கசக்க, கலைந்துவிட்டது கனவு. 

*

4 comments:

  1. வானுலகத்தில் இருக்கும் ஆலிங்கனா உங்களை தேடிக்கொண்டு தான் இருக்கிறாள் அதனால் தான் இப்படி கனவிலாவது உணர முடிகிறது உங்களால் ...
    சூன்யமாகிப்போன உலகத்தைத்தானே நாம் கட்டிக்கொண்டு அழவேண்டியிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. கற்பனை தான் மனிதனின் பலமும், பலவீனமும்.

      தனக்கு பிடித்தமான ஒன்றைப் பற்றியே மிகமிக ஆழமாய் ஊடுருவி சிந்தித்துக் கொண்டிருந்தால் எதிரில் இருப்பதெல்லாம் இல்லாதது போல் தோன்றுவதும், இல்லாத ஒன்று இருப்பது போல் காட்சியளிப்பதும் நிகழவே செய்யும். ஒருவகையில் இங்கே எல்லாருமே “இளம் பைத்தியங்கள்” தான்.

      உங்களின் கருத்து பகிர்விற்கு மிக்க நன்றிங்க.

      Delete
  2. ஆலிங்கனா வானத்திலிருந்தாலும் உங்களை தேடிக்கொண்டுதான் இருக்கிறாள் நண்பரே... நீங்கள் சொல்வது போல் கற்பனைதானே நமது பலமும் பலவீனமும்....

    ReplyDelete
  3. அதீத காதலில் மூழ்கி தவிக்கும் ஆலிங்கனாவா ?
    அந்தகாசதில் பறக்கும் சத்திரியனா ? பட்டிமன்றம் வைத்துவிடாலாம் போல ஆழமான காதலின் வெளிபாடு பித்து நிலையை ஒத்தது அருமை நண்பா

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.