
பிச்சை எடுக்க
திருவோடு ஏந்தி
வருவது தானே வழக்கம்?
கடந்த
கால் நூற்றாண்டுக் காலமாக
பழத் தட்டேந்தி வருகிறார்கள்.
உழைத்து வாழ
வக்கற்றவனுக்கு
மணவாழ்க்கை என்ன
ம்ம்...யிருக்கா?
வாழ்க்கைத் துணையாய்
வருபவளுக்கு
உணவும்,உடையும் - தனது
உழைப்பால் கொடுக்க
முடியாதவனுக்கு
மனைவி என்பவள் எதற்கு?
இரவுக் கழிவு
வெளியேற்ற இயக்கத்திற்கா?
இத்தனைக்காலம் பழகிப்போனதை
இனி மாற்றுவதெப்படி
என வினவும்
மனம் முடமாகிப் போன
மானங்கெட்ட இளைஞனா நீ?
உனக்காகச் சொல்கிறேன்.
இனி
வழக்கமாய் கேட்கும்
வரதட்சணைப் பட்டியலில்
புதிதாய் இதையும்
இணைத்துக் கொள்.
மனைவியாய்
வரவிருப்பவளிடம்
வரதட்சணையாக
இரு பிள்ளைகளும்
பெற்றுக் கொண்டு
வந்து விடச் சொல்.
தாம்பத்தியச் சிரமம்
சிறிதுமின்றி
"நான்தான் அதுகளின்
தகப்பன் ",எனச்
சொல்லித் திரியலாம்
சொரணையின்றி......!
அடுத்தவன் உழைப்பிற்கு
ஆசைப்படுபவன் தானே நீ?